Monday, May 28, 2012

சட்டமன்றத் தேர்தலில் இம்முறை நரேந்திர மோடியால் அவ்வளவு எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது


 அச்சுத் யக்னிக்

2012 டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பணிகளை உயர்மட்ட அரசியல் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். இரு தேசிய கட்சிகளாக காங்கிரசும், பா.ஜ.க.வும் அடி மட்டத்திலிருந்து ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டன. அவற்றின் தலைவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் சொற்போர்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, தொகுதிவாரியான முதல் சுற்று தொகுதி சீரமைப்புப் பணிகளை இரண்டு கட்சிகளுமே முடித்துள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், குறைந்தது 60 தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன அல்லது தாழ்த்தப் பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன அல்லது பொதுத் தொகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், இரண்டு கட்சிகளுக்கும் புதிய சவால்கள் தோன்றியுள்ளன.
மோடியின் பேராசை
நிதி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற முக்கியமான துறைகளை வகித்து வரும் மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் சிலரும், பா.ஜ.க.மாநிலத் தலைவரும் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப் பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்கள் அனைவருமே  மாற்றி அமைக்கப் பட்டுள்ள தங்கள் தொகுதிகளின் புதிய பகுதிகளில்  தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தொகுதிவாரியான ஜாதி, பிரிவு வாக்காளர் கலவை பற்றிய ஓர் ஆய்வை அண்மையில் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டார். தனது தலைமையில் மூன்றாவது முறையாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் பிரச்சார, பணித் திட்டங்களை நுண்ணிய அளவில் தயாரிக்க அவர் விரும்புகிறார் என்பதற்கான அறிகுறி இது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று ஏற்கெனவே மோடி அறிவித்துள்ளார்.
புத்துணர்வு பெற்றுள்ள குஜராத் காங்கிரஸ் 2002 இல் பா.ஜ.க. வெற்றி பெற்ற 127 இடங்கள், 2007 இல் வெற்றி பெற்ற 117 இடங்களை விட அதிகமான இடங்களை இந்தத் தேர்தலில் பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். இத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதி எல்லை மாற்றம் ஒரு பிரச்சினை என்றால், மோடிக்கு அதைவிட அதிக சங்கடம் அளிக்கும் மற்ற பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று குஜராத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது என்பதுதான். கடந்த ஓராண்டு காலத்தில் யாத்திரைகள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் என்று பல நிகழ்ச்சிகளை நடத்திய தங்களின் தீவிரமான செயல்பாட்டின்  மூலம் மக்களுடன் புதிய தொடர்பை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  சட்டமன்றத்தில், பல்கலைக் கழக வளாகங்களில், உள்ளூர் ஊடகங்களில் என்று  காங்கிரஸ் கட்சியின் பல நிலைகளிலான புதிய ஆக்கிரமிப்புகள் கண்களுக்குத் தெரிகிறது. என்றாலும், மோடியின் பெரு முயற்சிகள் மற்றும் அவரது தலைசிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றையும் பயன் அற்ற முறையில் பின்னுக்குத் தள்ளுவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் காங்கிரசின் தற்போதைய மாநிலத் தலைமை நரேந்திர மோடியுடன் ஒவ்வொரு முனையிலும் போராட முயல்கிறது என்பது மட்டும் உண்மை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மான்சா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  குஜராத் சட்டமன்றத் தலைவராக இருக்கும் பா.ஜ.க. தலைவர் ஒருவரின் இத்தொகுதியில் கிடைத்த தோல்வி ஆளும் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெகுஜன போராட்டங்களில் காங்கிரஸ் பங்கேற்பு
இயற்கை வளங்கள் மீது தங்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் விவசாயிகளும் பழங்குடியின மக்களும் ஆங்காங்கே மேற்கொண்டு வரும் அடிமட்டப் போராட்டங்களிலும் ஒரு குறைந்த அளவிலேனும் காங்கிரஸ் தலைமை பங்கேற்று வருகிறது. அண்மையில் சவுராஷ்டிரா மற்றும் குஜராத் பருத்தி விவசாயிகளின் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் போராடியதால், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
குறைந்த விவசாய நிலம் உள்ள அல்லது நிலமே இல்லாத விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளைப் பற்றி முன்பெல்லாம் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த காங்கிரஸ், அண்மைக் காலங்களில் காட்டிய அக்கறையினால், பெரும் மற்றும் நடுத்தர விவசாயிகளின் ஆதரவும் பலப்பட் டுள்ளது. உயர்பிரிவு விவசாயிகளிடையே மனநிறைவின்மை வளர்ந்து வருவது பற்றி மாநில பா.ஜ.க. தலைவர் மேற் கொண்ட கிசான் யாத்திரைக்கு பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. அவரது சொந்த பகுதியான சவுராஷ்டிராவிலும், அவரது சொந்த சமூகத்தைச் சேர்ந்த படிதார்களிடையேயும் அதற்கு ஆக்கபூர்வமான ஆதரவு கிட்டவில்லை.
ஏழைகளின் வாழ்வாதார நீர்நிலைகள் தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன
இரண்டாவதாக, பொதுச் சொத்து ஆதாரங்களையே பெரிதும் நம்பி வாழும், கிராமப்புறங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், தொழிலாளிகள்  போன்ற ஏழை சமூகத்தினரிடையே மனநிறைவின்மை பரவலாக வளர்ந்து வருகிறது. தன்னை விகாஷ் புருஷ் என்று காட்டிக் கொள்ள, முன்னேற்றம் என்ற பெயரால், பெரும் அளவிலான விளை நிலங்களையும், கடற்கரையோர நிலங்களையும் பெரும் தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத் துள்ளார். அதே போல, சவுராஷ்டிரா, குச் போன்ற பல மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளையும், உப்பங்கழிகளையும் பெரிய தொழிற்சாலைகள், சட்டப்படி யாகவோ அல்லது  அடாவடியாகவோ  எடுத்துக் கொண்டன. தங்களது பிழைப் புக்காக இத்தகைய நீராதாரங்களையே பாராம்பரிய உரிமையாக அனுபவித்து வரும் கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் இதனால் பாதிக்கப் பட்டு பெரும் ஏமாற்றமடைந்து வெறுப் புடன் இருக்கிறார்கள்.  சவுராஷ்டிரா கடற் கரையில் அமைக்கப்பட்ட நிர்மா சிமெண்ட் ஆலைக்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட போராட்டம் தவிர வேறு எந்த போராட்டமும் அமைப்பு ரீதியாக ஏற்பாடு செய்து மேற்கொள்ளப் படவில்லை. குச், சவுராஷ்டிராவைச் சேர்ந்த பல கிராம மக்கள் நீதிகேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடியுள் ளனர். அவர்களின் வழக்கு நிலுவையில் உள்ளது.
கால்நடை வளர்ப்பவரிடையே  வளர்ந்து வரும் கசப்புணர்வைக் கண்டு அதனைப் போக்க,  வரும் மழைக் காலத் தில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி மேம்படுத்தும் திட்டம் ஒன்றை மோடி அரசு அறிவித்தது. ஆனால் மாடுகள் மேய்க்கும் ரபாரிகள், ஆடுகள் மேய்க்கும் பார்வார்டுகளின் தலைவர்கள் இதனை ஒரு ஏமாற்று வேலை என்று கூறு கிறார்கள். இது மோடி அரசின் கழைக் கூத்து என்று குஜராத் ஊடகமும் கிண்டலடித்துள்ளது.
மோடியின் சர்வாதிகாரித்தனமான போக்கு
மூன்றாவதாக, மோடியின் சர்வாதி காரத் தனமான போக்கு, வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தற்போது பெற்றுள்ள பலத்தைக் குறைத்துவிடும் என்று கருதப்படுகிறது. அவர் நடந்து கொள்ளும் முறை, சில சங் பரிவார அமைப்புகளை, குறிப்பாக விசுவ இந்து பரிசத் மற்றும் பாரத் கிசான் சங் ஆகியவற்றை, தற்போதைய தலைமை யிடமிருந்து விலகி இருக்கச் செய் துள்ளது. பா.ஜ.க.வின் இரண்டு முன்னாள் முதல்வர்களான கேசுபாய் படேலும்,  சுரேஷ் மெஹ்தாவும்  மோடி இருந்த மேடையிலேயே அவர்களின் அதிருப்தி யையும், கருத்து வேறுபாட்டையும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தினர். மோடியின் முன்னேற்ற செயல்திட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் பா.ஜ.க. தலைவரான கனுபாய் கல்சாரியா போர்க் கொடி தூக்கியவர், நிர்மா சிமெண்ட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றார். முதல்வருக்கு எதிராக அவர் போராடியபோதும், கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். சின் தலைமை மோடியை பிரதமாக்குவதற்கு ஆதரவாக இருந்தாலும் கூட, உள்ளூர் குஜராத் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மோடியின் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு வேலை செய்யக் கூடத் தயாராக இல்லை.
இந்த மூன்று அம்சங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக செயல்படும் என்றாலும்,  வளர்ந்து வரும் குஜராத் மாநில நடுத்தரப் பிரிவு மக்களின் பார்வையில் மோடி ஒரு நாயகராகவே தோற்றம் அளிக்கிறார் என்பதுடன் தனது கட்சிக்காரர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடக்கி வைக்க இயன்ற அவரது செயல்படும் விதத்தினால் கவரப்பட்டவர்களாக இருக்கின்றனர். முன்பு உயர் மற்றும் நடுத்தர மக்களே நடுத் தர வகுப்பினராக இருந்தனர். ஆனால் வேகமாக நகர்ப்பகுதிகளும், தொழில்களும்  பெருகி வருவதால்,  நடுத்தரப் பிரிவினர் என்றால் குஜராத் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட , தலித் சமூகத்தினர் என்றே பொருள்படும்.
நடுத்தரப் பிரிவு மக்களிடையே செல்வாக்கும் ஆதரவும் பெற்றுள்ளார் மோடி
இவ்வாறு வளர்ந்து வரும் நடுத்தரப் பிரிவு மக்களிடையே தனது செல்வாக்கின் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்யவே இந்துத்துவா கொள்கையைக் கடைப்பிடித்த மோடி, தங்க குஜராத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்று கூறி,  உள்ளூர் விவகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் குஜராத்தியர்களின் மனப்பான்மைக்குத் தீனி போட்டு,  சந்தைப் பொருளாதார முன்னேற்றத்தைத் தனது செயல்திட்டங்களிலும், பிரச்சாரத்திலும் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்த மூன்று செய்திகளின் கலவை மாநிலத்தின் நடுத்தரப் பிரிவு மக்களிடையே அவருக்கு அளப்பரிய செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அத்துடன் அவருக்குக் கிடைத்த நிபந்தனையற்ற ஆதரவினால், தன்னையே குஜராத் என்று உருவகப்படுத்திக் கொண்ட மோடி, எவராவது தன்னை விமர்சனம் செய்தால், அது குஜராத்தையே விமர்சிப்பது, குஜராத் மக்களை, அவர்களது உணர்வை விமர்சிப்பது என்பதாக மக்கள் காணும்படி செய்துவிட்டார். இந்து நடுத்தரப்பிரிவு மக்கள் குஜராத்தில் பெரும்பான்மையின ராக இல்லாத நிலையில்,  மாநிலத்தின் மனிதவள புவியியல் அமைப்புடன் இணைந்த சமூகக் கலப்பானது, குஜராத்தின் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் இந்துநடுத்தரப் பிரிவினருக்கு உறுதியுடன் ஒரு முடிவெடுக்க ஆதரவு அளிக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் உள்ள குறைபாடுகள்
நடுத்தரப் பிரிவு மக்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அல்லது அவர்கள் நம்பும் அளவுக்கு நரேந்திர மோடியைப் போன்ற தலைவர் எவரும் காங்கிரசில் இல்லை. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அதிகார அமைப்புகளிலும், விரிவான கூட்டுறவுத் துறை அமைப்புகள் அல்லது கல்வி நிறுவன அமைப்புகளில் ஆழமாக பா.ஜ.க. ஊடுருவி இருப்பதுடன் ஒப்பிடும்போது, காங்கிரசுக்கு ஓரளவுக்கே செல்வாக்கு உள்ளது. மோடி முன் வைக்கும் வாதங்களை முறியடித்து கேட்போரை மனம் கவரச் செய்யும் பேச்சாற்றல் கொண்டவர்கள் எவரும் காங்கிரசில் இல்லை. மோடி கூறுவது போன்ற முன்னேற்றத் திட்டங்களைப் பற்றியும், 2002 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்குவது பற்றியும் கேள்வி கேட்கவோ அல்லது மாற்றுத் திட்டங்களை அளிக்கவோ காங்கிரசால் முடியவில்லை. மோடிக்கு அமெரிக்க நாட்டு விசா ஒன்றைப் பெறுவதற்காகவும், அனைவரையும் உள்ளடக்காத மோடியின் மாதிரி முன்னேற்றத் திட்டத்திற்கு மேற்கு நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் பெரும்பாடு பட்ட  குஜராத் மாநிலத்தைத் தாயமாகக் கொண்ட அமெரிக்க வாழ் பெரும் வணிகர்கள் தொழிலதிபர்கள் போன்றோரின் செல்வாக்கோ ஆதரவோ காங்கிரசுக்கு இல்லை.
என்றாலும், அண்மையில் காங்கிரஸ் திடீரென்று வெளிப்படுத்திய ஆற்றல், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடும். என்றாலும் இன்னமும், குஜராத்தில் பா.ஜ.கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரசால் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
2012 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி தனது அடுத்த சவாலான, 2004 நாடாளுமன்றத் தேர்தல்  பற்றி தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்குவார் என்பது நிச்சயமானது. ஒட்டு மொத்த இந்திய நாட்டின் நடுத்தரப் பிரிவு மக்கள் தங்களின் முழுமனதான ஆதரவை அவருக்கு அளித்து அவரை தேசிய அரசியலில் ஒரு தலைவராக நிலை நிறுத்தப் போகிறார்களா என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது.
(நன்றி: தி ஹிந்து, 9.-5.-2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்).


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...