Monday, March 19, 2012

விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய பட்ஜெட் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி


2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கை:
விலைவாசியைக் குறைப்பதற்குப் பதில்
விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியது!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது விரும்பத்தக்கதல்ல!
2012-2013ஆம் ஆண்டுக்காக மத்திய நிதித்துறை அமைச்சரால் அளிக்கப்பட்ட அறிக்கை விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய வரவு -செலவுத் திட்டம் 2012-2013 (பட்ஜெட்) 16ஆம் தேதி மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலை, மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குறிப்பாக காங்கிரசு கட்சிக்கு நெருடலைத் தரக்கூடியதாக அமைந்த ஒன்றாகும்!

ஏற்கெனவே ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வுகள் அறிவிப்பு - கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத திடீர்த் தாக்குதல், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் குறையாத நிலை, பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை ஏற்றப்படும் சூழ்நிலை! மாநில அரசுகளின் பட்ஜெட்டுக்குமுன் - வழமையான ஒரு தந்திரம்போன்று, குறிப்பாக தமிழ்நாட்டில் - பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கடும் மின் வெட்டு ஒருபுறம்; மறுபுறம் மின் கட்டணமே பல மடங்கு உயர்த்தப்படும்   அபாய அறிவிப்பு  தயாராக உள்ளது. சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களை வாட்டிடும் நிலைதான் இந்த நிலையில் மத்தியிலும் இப்படி ஒரு பட்ஜெட்!

பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவு திட்டமல்ல

பட்ஜெட் என்பது வெறும் ஆண்டிற்குரிய வரவு - செலவுத் திட்டம் மட்டுமல்ல; அதைவிட மக்கள் நல அரசு (Welfare State) என்ற கொள்கையை பல படிகளில் செயல்படுத்த உதவும் ஒரு அருமையான பொருளாதார கருவியும் ஆகும்! வரி விதிப்பில் இந்தத் தத்துவம் அரசின் கொள்கை - முக்கியமாக அரசுகள் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் எதிரொலிக்க வேண்டும். பெரும் திமிங்கலங்களுக்குச் சலுகை, சிறிய மீன்களுக்கு வலைக்குள் பிடித்தல் போன்ற  நிலையை சமதர்மம் கடைப்பிடிக்கும் நாடுகள் கைக்கொள்ளா!

சலுகை காட்டி மறைமுகமாக மக்களை ஏமாற்றலாமா?

மத்திய அரசின் இலக்கு சமதர்மமா, தனியார் மய முதலாளித்துவமா என்பதை எளிதில் கண்டறியப்பட முடியாத புதிராகவே உள்ளது! இலக்கு எது என்று தெரியாத பயணமா?

நமது அரசியல் சட்ட பூர்வ பீடிகையில் (Preamble) சமதர்மம் என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு வகையில் திருப்தியே தவிர, அந்த இலக்கு நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லையே!

தனி நபர்களுக்கு மக்களுக்கு நேரிடை வரி விதிப்பில் இந்த நிதி நிலை அறிக்கைமூலம் ரூ.4500 கோடி சலுகை காட்டி, மறைமுக வரி விதிப்பின்மூலம் ரூ.41,440 கோடிகளை எடுத்துக் கொள்ளும் நிலை என்றால் இது மக்கள் நலப் பட்ஜெட் என்று கொண்டாட முடியுமா?

சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவிதமாக உயர்த்தப்பட்டதன் மூலம் செல்போன் கட்டணம் உட்பட பல உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கீரை விற்போர், சுமை தூக்குவோர்கூட செல்போன் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை!

30 ஆயிரம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, நிதி ஆதாரம் தேடுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது எவ்வகையில் சமதர்மம் நோக்கிய பயணம் ஆகும்? அதுவும், நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டார்களாம்; மாறாக லாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளை (அப்போது தான் வாங்குபவர்கள் முன் வருவார்கள் என்று விளக்கம் கூறப்படலாம்) விற்பது என்பது பொன் முட்டை இடம் வாத்துகளைக் கொல்லுவது போன்றதல்லவா?
வெளிநாடுகளில் பதுக்கல் பணமும், இந்தியக் கோவில்களில் பதுங்கியுள்ள நகைகளும்

உள்நாட்டிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் முடக்கப்பட்டுள்ள கறுப்புப் பணங்கள் பல ஆயிரம், லட்சம், கோடிகள் குறட்டை விட்டு வசதியாக அங்கே தூங்கிக் கொண்டுள்ளதே - அதனைக் கொண்டு வந்தாலே, இந்நாட்டுப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் போதுமானதாக ஆகலாமே?

அது மட்டுமா? திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தங்கம், திருப்பதி ஏழுமலையான், குருவாயூரப்பன் போன்ற பல்வேறு கோயில்களில் முடங்கியுள்ள - வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு - தங்க பாண்டுகளை அரசு தந்து, பறிமுதல் செய்ய வேண்டாம், எடுத்துக் கொள்ளக்கூட வேண்டாம் - வட்டிகூட கொடுக்கலாம் - அதை வைத்து நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிட வசதி செய்யலாமே! துணிவு வராதே அரசுகளுக்கு!

நாளடைவில் அவற்றைப் பாதுகாத்து அரசு கருவூலத்தில் வைப்பதுபோன்ற ஏற்பாடுகளாகவும் அவை அமையக் கூடுமே! கறுப்புப் பணம் இன்னமும் தேர்தல் காலங்களில் துள்ளி விளையாடுகின்றது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் 1000, 2000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை (தலைக்கு) தரும் அளவுக்கு பணப் புழக்கம் இருக்கிறதே - அதைக் கண்டறியாமல் எளிய - நடுத்தர மக்களுக்குக் கட்டண உயர்வு என்ற வழமையான முறைகள் மூலமே தொடர் தண்டனை தர வேண்டுமா?

ரயில் கட்டணங்கள் உயர்வு, தனியார் விமானங்களுக்கு வெளிநாட்டு மூலதன கடன் அல்லது முதலீடு (FDI) வசதி ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் என்பது இந்த நாட்டு ஏழை - எளிய மக்கள் வசதிக்கா?

விமானப் பயணியும், ரயில் பயணியும் ஒரே தரத்தவர்களாக அரசின் பார்வை அமைவது நியாயமா?

தொலை நோக்குத் திட்டங்கள்

நாட்டின் அடிக்கட்டுமான வசதிகளை அதிகரிக்க ரூ.60 ஆயிரம் கோடிக்கான வரிச் சலுகை பத்திரங்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தேசிய நெடுஞ்சாலை, வீட்டு வசதித் திட்டங்கள், மின்துறை வளர்ச்சி போன்றவைகளை உள்ளடக்கிய இத்திட்டம் தொலைநோக்குடன் கூடிய வளர்ச்சிப் பாதையே! இராணுவம் பாதுகாப்புக்கு இவ்வாண்டு 19 சதவிகிதம் கூடுதல் செலவினம்; ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துக் கொண்டே போகிறது.  தளவாடங்கள் வாங்குதல் மற்றவைகளில் இடையறாது ஊழல் குரலும் கேட்கிறது! அது வேதனையளிக்கத்தக்கது!

துவக்கக் கல்வி - கட்டாயக் கல்விபற்றிய செலவினம் சுருக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது!

கல்வி என்பது சமுதாய முதலீடு (Social Investment) அதனைச் சுருக்கிட வேண்டிய அவசியமே இல்லை.

கல்வித்துறை - மத்திய மனிதவளத் துறை ஒரு பெரிய துறை; அதனை தனி ஒரு அமைச்சராலேயே கவனிக்க முடியாத நிலையில், அந்த அமைச்சர் தகவல் தொடர்புத் துறை என்று சுமையையும் சேர்த்து சுமந்து, எதற்கும் மனதைச் செலுத்தி செயல்பட இயலாத - இயற்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் ஒரு தேக்கத்தில் சிக்கி, வெளியே வர முடியாத நிலையே கண்கூடு! நிதி ஆதாரங்களை நிதியமைச்சர் தேடுவது எளிதல்ல - ஒப்புக் கொள்ளுகிறோம்.

ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், ஆயுள் காப்பீடு போன்றவைகளிலும் ஏராளம் பல்லாயிரம் கோடிகள் இருப்பதை அரசுகள் கடனாகப் பெறலாமே!

நிதி முடங்கிக் கிடக்காமல் வேகமாக செலவழிக்கப்பட்டால் தானே வளர்ச்சி அடைய முடியும்?

ஓட்டைகளை, தேட்டைகளைக் கண்காணிக்க - தேவை ஒரு தனி அமைப்பு

நிதி ஒதுக்கீடுக் கொள்கை திட்டச் செலவில் ஓட்டைகள், தேட்டைகளைக் கண்காணிக்க தனி அமைப்பு - பொருளாதாரத் துறை வல்லுநர்களைக் கொண்டு (முன்பு கறுப்புப் பணத்திற்காக ராஜா செல்லையா குழு போட்டது போல்) ஒரு தனிஅமைப்பையே சட்ட அதிகாரம் கொண்டதாக அமைக்கலாமே!

தேர்தல் விதி சீர்திருத்தம் செய்யாமல் கறுப்புப் பணத்தை வெளியில் கொணர முடியாது. ஒரு கட்டத்தில் Demonstration என்ற குறிப்பிட்ட மதிப்புள்ள நோட்டுகளை சட்டபூர்வமாக வந்த குறிப்பிட்ட தேதிக்குள் தேசியமயமாற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் அவை செல்லாது என்று திடீர் அறிவிப்பு தான் இறுதியான ஒரே வழி!

மருந்துகளால் தீராத வியாதி என்றால் அறுவை சிகிச்சை தானே தேவை?

பல அரசியல் கட்சிகளே இதற்கு உடன்படுமா என்பது சந்தேகம். என்றாலும் சில நேரங்களில் நோயாளிகளைக் கேட்டுக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சைக்காக முடிவு செய்ய நினைப்பது நல்லதா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

விலைவாசி ஏற்றத்துக்கு வழி செய்யும் பட்ஜெட்

பொதுவில் அதிக விலைவாசி ஏற்றத்தைக் குறைப்பதற்குப் பதில் இந்த பட்ஜெட்டால் ஏற்றவே செய்யும் நிலைதான் என்பது பலரது கருத்து.

இதற்கு சில பரிகார சலுகைகளை நிதியமைச்சர் அறிவிப்பதும் அவசியமாகும்!

வோட்டுக் கண்ணோட்டத்தைவிட நாட்டுக் கண்ணோட்டமே மேலோங்க வேண்டும் என்பதை ஓரளவு நிதியமைச்சர் உணர்ந்து செயல்பட்டுள்ளார் என்பதையும் நாம் வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 2

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...