Monday, February 27, 2012

முகமூடிகள் கிழிகின்றன!


2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்பற்றி இப்பொழுதே சர்ச்சைகள் கிளர்ந்து விட்டன. அரசியல் கட்சிகள் அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கி இருப்பதாகத் தெரிகிறது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் உள்ளது. இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் பேசப் படுகிறது.
எதிர்க்கட்சிகளோ ஊழல் மிகுந்த ஆட்சி என்று இன்றைய மத்திய அரசு மீது முத்திரை குத்தி வருகின்றன. வெளி நாட்டுக் கொள்கையில் குறிப்பாக ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிடம் இந்திய அரசு பணிந்து போய்விட்டது.
இலங்கை அரசு விசயத்தில் இந்தியா நடந்து கொள்ளும் போக்கின் மூலம் மனித உரிமைகளுக் காகக் குரல் கொடுத்த இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுபோல எண்ணற்ற குற்றச்சாற்றுகளை இன்றைய மத்திய அரசின்மீது சாற்றலாம் தான். இவற்றைக் காரணமாகக் கொண்டு, பி.ஜே.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வரலாமா? அவ்வாறு பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவது நன்மை பயக்கவல்லதா?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமீது வைக்கப்பட்ட குற்றச்சாற்றுகள் பி.ஜே.பி.யின் மீது கிடையாதா? எந்தெந்த கொள்கைகளில் இன்றைய மத்திய ஆட்சியிடமிருந்து பி.ஜே.பி. விலகி நிற்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திப்பது மிக மிக முக்கிய மானதாகும்.
ஊழல் என்று வைத்துக் கொண்டால், இந்தியா விலேயே பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநிலத்தில்தான் அந்த ஊழல் கொடி விண்ணை முட்டும் அளவில் பறந்து கொண்டிருக்கிறது.
ரெட்டி சகோதரர்கள் என்று கூறப்படும் இரு அமைச்சர்கள் சுரங்கத் தொழில் கொள்ளை காரணமாக சிறையில் உள்ளனர். முதல் அமைச்சர் எடியூரப்பாவோ ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த காரணத்தால் பதவி பறி போயிற்று.
இப்பொழுது இந்த ஊழல் பேர் வழிக்குப் பெரும் பாலான பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றனர். இதன் அடிப்படையில் மீண்டும் என்னை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் என்று பி.ஜே.பி.யின் தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறார்.
கருநாடக மாநிலத்தில் சீறிராம்சேனா என்ற இந்துத்துவா அமைப்பின் காலித்தனமும், அட்ட காசமும் சொல்லுந்தரமன்று. அந்த அமைப்பின் தலைவராக இருக்கக் கூடியவர், சிறுபான்மையின ருக்கு எதிராகக் கலவரம் விளைவிப்பதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து வைத்துள்ளார். இந்தக் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடுகிறது.
மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடும் வகையில் பசுவதை தடுப்பு சட்டம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளன.
மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாத இந்த அரசுகள் மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிட உரிமை படைத்தனவா என்பது முக்கியமான கேள்வியாகும்.
பி.ஜே.பி.யின் ஆணிவேராக  இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸின் இந்திய அளவிலான கடந்த கால வன்முறை நடவடிக்கைகளின் உண்மைகள் அலை அலையாக வெளிவரத் தலைப்பட்டுள்ளன.
முறையான வகையில் இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப் பட்டால், சங்பரிவார் மற்றும் அதன் அரசியல் அமைப்பான பி.ஜே.பி. வரை கூண்டோடு காலியாகும் நிலை ஏற்பட்டு விடும்.
மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி கலவரங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி எப்படி தேர்தலில் ஈடுபடுகிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, அடுத்து அதுதான் மத்தியில் ஆட்சி என்று பிரச்சாரம் செய்யப்படுவது எவ்வளவுப் பெரிய ஆபத்தான போக்கு என்பதைப் பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...