Friday, January 27, 2012

மகிழ்ச்சியில் இனிப்பும் கசப்பும்!


இந்தியாவின் 63ஆவது குடியரசு நாள் விழா இந்தியா முழுமையும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் இதே கொண்டாட்டம் தான், இருக்கட்டும்!

இந்த 63 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகள் என்ன? வளர்ச்சிப் போக்கு எத்தகையது? இதே கால கட்டத்தில் உரிமை பெற்ற சீனா எந்தக் கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கிறது?

ஆடுவதும், பள்ளுப் பாடுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! நம்மைப்பற்றி நாமே எடை  போட்டுக் கொள்ள வேண்டாமா? சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டாமா?

1) கல்வி வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் உலகில் 72ஆம் இடத்தில் இருக்கிறோம். 10 ஆண்டுகளில் 14 வயதுக்கு உள்பட்ட அனை வருக்கும் கட்டாயம் அடிப்படைக் கல்விபற்றி இந்திய அரசமைப்புச் சாசனம் சொல்லுவது - வெறும் ஏட்டளவில்தானே!

2) வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் 11ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் 4 கோடி பேர் களுக்கு வேலை வாய்ப்பு என்று இலக்கு நிர்ணயிக் கப்பட்டு இருந்தது. ஆனால் அளிக்கப்பட்ட வேலை வாய்ப்போ வெறும் 10 லட்சம்தான் (என்னே தலைகீழ் வீழ்ச்சி!)

12ஆம் அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் வேலை வாய்ப்பு அற்றோர் தொகை ஆறு கோடியாக இருக்கும் என்ற மிரட்டல் நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டில் வேலை வாய்ப்பின்மை என்பது வன்முறைக்கான தொழிற்பயிற்சிக் கூடத்தின் உற்பத்தி என்று பொருளே!

பொதுத்துறைகள் அருகி, தனியார்த் துறைகள் பெருக்கெடுக்கும் கால கட்டத்தில் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி கோரிக்கைபற்றி கேளாக் காதுடையதாக இந்திய அரசு இருப்பது கண்டனத்துக்கு உரியது. (வெகு மக்கள் எரிமலை ஆவார்கள், எச்சரிக்கை!)

3) இந்தியாவில் விவசாயப் பெருங் குடிமக்கள் 70 விழுக்காடு;  பெரும்பாலும் கிராமங்களில் ஏதோ வாழ்கிறார்கள். இந்தியாவின் ஒட்டு மொத்தமான பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்றால், விவசாயத்துறை வளர்ச்சி ஒன்று முதல் இரண்டு சதவிகிதம்தான்.

5 பேர்கள் 2 மாடுகள் கொண்ட ஒரு விவசாயியின் மாத வருமானம் ரூ.2115 பைசா 10. இதைக் கொண்டு எப்படி வாழ்க்கையை நடத்துவது?

ஒவ்வொரு மணி நேரத்திலும் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 1993 முதல் 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண் ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரம் என்று மத்திய அமைச் சர் சரத்பவார் நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே!

4) உலகில் பட்டினியால் சாகும் மக்கள் என்ற தலைப்பில் இந்தியாவுக்கு 67ஆவது இடமாம்! இவ்வளவுக்கும் உணவு சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் 5 கோடியே 70 லட்சம் டன்!

இவற்றைப் பட்டினியால் வாடும் மக்களுக்கு வழங்கக் கூடாதா என்று உச்சநீதிமன்றம் ஓங்கித் தலையில் குட்டிய பிறகும்கூட, இதுபோன்ற பிரச்சினை களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று பிரதமர் சொல்லுகிறார் என்றால் - இதற்குப் பெயர் தான் மக்கள் நல அரசா?

5) இந்தியா ஏழை நாடாம். ஆனால் உலகில் மிகப் பெரிய பணக்காரர்கள் முதல் 10 பேர்களில் இந்தியாவில் இருப்போர் நான்கு பேர்களாம்.

உலகப் பணக்காரர்களின் வரிசையில் உள்ள அம்பானி மும்பையில் 530 அடி உயரத்தில் 27 மாடிகளைக் கொண்ட பெரிய பங்களாவில் குடியிருக்கிறார். இவ்வளவுக்கும் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் ஆறு பேர்கள்தானாம்.

இந்தப் பங்களாவின் வசதிகள் எத்தகையது தெரியுமா? 168 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம். 27ஆவது மாடியின் மேல் தளத்தில் ஹெலிகாப்டரை நிறுத்தலாம்.

இந்தப் பங்களாவில் பணியாற்றுவோர் மட்டும் 600 பேர்களாம்.

இவ்வளவுப் பெரிய பணக்காரருக்கு  5 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையாம்! ஆட்சியாளர்களின்  நிறம் இதுதான்!

இந்தியாவின் கிராமப்புறங்களில் 46 விழுக்காடு; நகரப்புறங்களில் 26 விழுக்காடு வறுமைக் கோட்டுக் குக்கீழ் வாழும் தரித்திர நாராயணன்கள்

63ஆவது குடியரசு விழா மகிழ்ச்சிக் கொண் டாட்டத்தில் மூச்சுத் திணறும் ஆட்சியாளர்கள் - இந்தக் கசப்பான  உண்மைகள்மீதும் அசைப் போட்டு - அசையா நிலையிலிருந்து அசையும் நிலைக்கு ஆயத்தமாகட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...