Tuesday, December 27, 2011

விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவரின் உருக்கமான அறிக்கை


தமிழினத்தின் போர்ச் சங்கான விடுதலைக்கு 50,036 சந்தாக்களைச் சேர்த்து சாதனை படைத்த கழகத் தோழர்களுக்கு நன்றி! நன்றி!!
ஓய்வின்றி உழைத்துக் கடனைத் தீர்ப்பேன்!

90 நாட்களில் 50 ஆயிரத்துக்கு மேல் விடுதலை சந்தாக்களைச் சேர்த்து, சாதனை படைத்த கழகத் தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, இந்தக் கடனைத் தீர்ப்பதற்காக என் வாழ்நாள் முழுவதும் உழைத்துத் தீர்ப்பேன் என்று 50 ஆண்டுகளாக விடுதலை ஆசிரியராக உழைத்துவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலை (நிருவாக) ஆசிரியராக, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் 1962இல் நியமிக்கப்பட்ட என்னை ஊக்கப்படுத்தும் வகையில், அதிகமாக பணியாற்றச் செய்யும் உற்சாகத்தை வழங்கும் வகையிலும் என்னை வரவேற்று அறிக்கை எழுதியதோடு, இந்த எளிய தொண்டன்மீது நம்பிக்கை வைத்து இதை அவரது ஏகபோகத்திற்கு விடுகிறேன் என்று கூறி எனது பொறுப்பின் மீது அதிகக் கவலையை ஏற்றினார் தந்தை பெரியார்.

விடுதலை - இனத்தின் போர்ச் சங்கு!

விடுதலை அய்யாவின் அருட்கொடை. சில திராவிட மக்களுக்கு, அது வெறும் நாளேடு. ஆனால் பல நேரங்களில் நம் இனமக்கள் மீது எதிரிகள் படையெடுத்து வந்த போதெல்லாம் - வரும்போதெல்லாம், உடனே ஆயத்தமாகுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து, களம் காணச் செய்யும் நம் இனத்தின் போர்ச்சங்கு!

அது நின்று போனால் தன்மானம், இனமான இயக்கத்தின் கொள்கைப் பிரச்சாரம், இனநலன் - இவற்றின் இதயக் கதவு மூடப்படுகிறது என்றல்லவா பொருள்?

சிற்றுளி மாமலைகளையும் பெயர்த்தெறியும் என்பது போல, அதன் அன்றாடப் பணி வெறும் எழுத்துப் பணி மட்டுமல்ல; ஏற்றமிகு எழுச்சிப் பணியுமாகும்.

50 ஆண்டுகள் ஓடிடும் நிலையில் அதை நினைவூட்டுவ தோடு, அதையே விடுதலை வீறுநடை போட, ஓர் அரிய வாய்ப்பாகக் கொண்டனர் நமது கழகக் குடும்பத்தினர்.

திருச்சி - பொதுக்குழுத் தீர்மானம்

11-9-2011 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் மத்திய நிருவாகக் குழு- பொதுக்குழுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், ஒரு தனித் தீர்மானத்தைக் கொணர்ந்து (அது வரை என்னிடம் கலக்கவே இல்லை!). கழகத் தோழர்கள், 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைச் சேர்ப்பது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்- உற்சாகத்தோடு!

90 நாள்களில் 50 ஆயிரத்து முப்பத்தி ஆறு விடுதலை சந்தாக்கள்!

இயக்கமும் விடுதலையும்தான் எனது வாழ்க்கையின் பணிகள் என்றாகிவிட்டு, தனி வாழ்க்கை என்ற ஒன்றை அறவே தொலைத்துவிட்ட எனக்கு அது இன்ப அதிர்ச்சியைத் தந்தது! என் உள்ளத்தில் பொங்கிய கழகக் குடும்பத்தினரின் மீதுள்ள பாசத்தை அளந்து பார்க்க உடனே விழைந்தேன்.

அது என் ஆயுளை நீட்டும் என்ற உண்மையைச் சொன்னேன் - நா தழுதழுக்க. நல் இதயங்கள் வரவேற்றன - கைதட்டி!

செயல்வீரர்களின் சாதனை இந்த இயக்க வரலாற்றின் ஒரு புதுமையாக, புத்தாக்கமாக, பூத்துக் குலுங்கும் வசந்தமாக நிற்கும் வகையில் -

90 நாள்களில் 50,036 சந்தாக்கள் விடுதலை நாளேட்டிற்கு என்பதைச் சேர்த்துக் காட்டி, இயக்கம் துடிப்பு மிக்க ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஏவுகணை தயாரிப்புக் கூடம் என்று அகிலத்திற்குக் காட்டினர்.

அநீதியும் - அதன் விளைவும்


நூலகங்களுக்குச் சென்ற விடுதலை 6 மாதங் களுக்கு முன், நிறுத்தப்பட்டது அண்ணா பெயரால் ஆட்சிக்கு வந்துள்ள ஒரு அரசால் - அண்ணா ஆசிரிய ராக இருந்த ஒரு நாளேட்டுக்கு எப்படிப்பட்ட பரிசு பார்த்தீர்களா?

அந்த அநீதியால்தான் இன்று இப்படி ஒரு புயல் வேகப் புதியதோர் சரித்திரச் சாதனை!

அறிவித்ததில் பாதியாவது தருவார்களா? என்றே எண்ணினேன்.

எங்களை - எங்கள் செயல்திறனை இப்படி நீங்கள் குறைத்து மதிப்பிடலாமா?

எம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது

வேறு யாராலும் முடியாதது எம்மால் மட்டுமே முடியும்

- என்று உணர்த்துவது போல சந்தாக்களை விடுதலைப் புரவலர்களும், வேர்களும், விடுதலைத் தேனீக்களும் சேகரித்துத் தந்து அசத்திவிட்டார்கள்!

அதுவும் 90 நாள்களில்!


இராணுவக்கட்டுப்பாட்டையும் மிஞ்சுவது பெரியார் தம் இயக்கக் கட்டுப்பாடு.

இதயபூர்வமான நன்றி!

இதற்காக குடி செய்வார்க்கில்லை பருவம் என்று உழைத்த தலைமைப் பொறுப்பாளர்கள் முதல், கழகப் பொறுப்பாளர்கள்  வரை (பகுத்தறிவாளர் கழகமும் சேர்ந்ததுதான் கழகப் பொறுப்பாளர்கள் என்ற சொற்கள்) கல்வி அறிஞர்கள், இன உணர்வாளர்கள், அனைவருக் கும் என் இதய பூர்வ நன்றியைக் காணிக்கையாக்கு கிறோம்.

அறிவுக்கு அறிவு தேவையில்லை. செயலுக்கே அறிவு தேவை என்ற அனுபவ மொழிக்கேற்ப அரும்பாடுபட்டு உழைத்ததோடு நில்லாமல், அடுத்து இதற்கென தனிவிழா, தனி மாநாடு எங்கே நடத்துவது அம்மா பிறந்த நாளில் (மார்ச் 10 முதல் 16-க்குள்) என்று சம போட்டி போடும் தஞ்சையும், திருப்பத்தூரும் ஆகிய இரு  மாவட்டங்களின் ஆரோக்கியப் போட்டிக்கு எம் தலை தாழ்ந்த நன்றி! நன்றி!!

விடுதலை க்கு நிரந்தரமான வைப்பு நிதி!


விடுதலை சந்தா சேர்ப்பை விட முக்கியம் அதனை நிரந்தரமாக நடத்திடச் செய்ய ஒரு வைப்பு நிதி என்று கூறி விடுதலை வைப்பு நிதியை 24-12-2011 அன்று அய்யாவின் நினைவு நாளிலேயே அறிவித்து, அங்கே சுமார் 5 லட்ச ரூபாய்களைக் குவித்தும் விட்டனர் கழகக் குடும்பத்தினர்.

கடனைக் கழிக்க உழைப்பேன்! உழைப்பேன்!!

அந்த வியர்வையின் வெளிச்சம்தான் எத்தனைப் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியது!

திராவிட இனத்தின் மானமீட்புப் பணிக்கு நாம் மேலும் மேலும் உழைக்க வேண்டுமே - இந்தக் கடனை அடைக்க வேண்டுமே என்று கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினேன். ஓய்வின்றி உழைத்து இந்தக் கடனைத் தீர்க்க உறுதி பூண்டுள்ளேன் தோழர்களே! நன்றி! நன்றி மேல் நன்றி கோடி!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...