Friday, November 4, 2011

ஊடகங்கள் திருந்துமா?



இந்தியாவின்பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய  மார்கண்டேய கட்ஜு,  கரன்தாப்பரிடம் அளித்த செவ்வி முழுமையான அளவிற்குச் சிறப்பாக இருந்தது என்றாலும், ஊடகங்களின் பிற்போக்குத்தன - மூடநம்பிக்கைப் பரப்பு தலை மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்ததற்காக அவரை எவ்வளவுப் பாராட்டி னாலும் தகும் - தகும்!

அய்ரோப்பாவில் ரூசோ, தாமஸ், பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்திற்குத் தயார் செய்தார்கள்!  இந்த நாட்டில் உள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதைக் கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்க விடும் வரையில், மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்காது என்று முழங்கினான் பிரெஞ்சு சிந்தனையாளன் திதரோ என்று   எடுத்துக்காட்டிய நீதியரசர், இந்தியா வில் ஊடகங்கள் எந்தத் தரத்தில் செய்திகளை வெளியிடுகின்றன என்பதை யதார்த்தக் கண்ணோட் டத்தோடும், மிகவும் செறிவுடனும் தெளிவுபடுத் தினாரே!

அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களைப் பரப்புகின்றன ஊடகங்கள்.

ஏற்கெனவே நமது நாட்டில் 80 சதவிகித மக்கள் ஜாதி, மத, மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின் தங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளிலிருந்து விடுவித்து, ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக ஊடகங்கள் தூண்டுதலாக இருக்க வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலைகளை அல்லவா நமது ஊடகங்கள் செய்து வருகின்றன?

பல தொலைக்காட்சிகளில் பெரும்பாலான நேரங்களில் ஜோதிடம் ஓடுகிறது. இந்தக் கல் மோதிரம் அணிய வேண்டும்; இந்த நிறத்தில் சட்டை அணிய  வேண்டும்; நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்ன உளறல் இது! என்று மிகச் சிறப்பாக அறிவியல் கண்ணோட்டத்தோடு பேட்டி அளித்துள்ளார் பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பேட்டியளித்தால் என்னென்ன கருத்துகளை, எந்த வகைகளில் எடுத்துக் கூறியிருப்பாரோ அதேபோல உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சொல்லுகிறார் என்றால் சாதாரணமா? இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டும்; சீர்திருத்த எண்ணங்களை விதிக்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
இந்திய அரசியல் சாசனத்தில் இந்தச் சாரத்தைப் புரிந்து கொண்டு - விஞ்ஞான கருவிகளான தொலைக் காட்சிகள், ஏடுகள், இதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் செயல்பட வேண்டாமா?

நீதியரசர் சொல்லியுள்ளது போல மக்களை மடையர்களாக்கும் வேலைகளைச் செய்யும் ஊடகங்கள் சட்டப்படியும் நியாயப்படியும் தண்டிக்கப்பட வேண்டாமா?

இந்த வகையில் ஊடகங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்கினால் கூட  நல்லதுதான்.

மக்கள் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்து கிறார்கள். - அனுபவிக்கிறார்கள் - அதே நேரத்தில் விஞ்ஞான மனப்பான்மை உடையவர்களாகச் சிந்திக் கிறார்களா - செயல்படுகிறார்களா? வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களா என்பது முக்கியமான வினா அல்லவா!

மக்களை மதத்தின் பள்ளத்தில் தள்ளுவதால் அவர்களின் அறிவு நாசம், உழைப்பு வீண் - காலக் கேடு - பொருளாதார இழப்பு - தன்னம்பிக்கை வீழ்ச்சி என்கிற மிகப் பொல்லாத கேடுகளுக்கு அல்லவா ஆட்படுத் தப்படுகிறார்கள்?
மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமும் ஒழிந்தாலொழிய இந்தியப் பொருளாதாரத் துறை எந்த நாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்

(பகுத்தறிவு 1.12.1936) என்று தந்தை பெரியார் கூறிய கருத்து கருத்தூன்றத் தக்கதாகும்.

மக்களின் அறிவை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதும் கவனிக்கத்தக்கதாகும்.

அறியாமை, மூடத்தனங்களை வளர்ப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அது கடுமையான குற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே பிரஸ் கவுன்சில் தலைவர் அளித்த செவ்வியின் சாரமாகும்.

ஊடகங்கள் தங்கள் போக்குகளை மாற்றிக் கொள்ளுமா? 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...