Thursday, November 24, 2011

வக்காலத்து வாங்குவோர் யார்?

பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வு, இவைபற்றி வரவேற்று எழுதுவதில் துக்ளக்சோ முன் வரிசையில் இருப்பது ஆச்சரியப்படத்தக்கல்ல!

இன்று வெளி வந்துள்ள துக்ளக் இதழிலும் (30.11.2011) சும்மா பிளந்து தள்ளி இருக்கிறார்.

இந்த விலை உயர்வு தவிர்க்கப்பட முடியாதாம். இல்லாவிட்டால் தமிழ்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியாதாம்.

விலை உயர்வுக்கான காரணத்தை முதல் அமைச்சர் தொலைக்காட்சியில் கூறி இருப்பது நியாயப்பூர்வமானது என்றும் நீளமாக வக்காலத்து வாங்கியும் தலையங்கம் தீட்டுகிறது  துக்ளக்

இதே துக்ளக் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்ந்த நேரத்தில் செல்வி ஜெயலலிதா, தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தாரே - அப்பொழுதெல்லாம் இதுபோல எழுதியதுண்டா?

பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இதெல்லாம் தவிர்க்கப்பட முடியாதது என்று இதோபதேசம் செய்ததுண்டா?

கடந்த காலத்தில் இந்த அத்தியாவசியப் பொருள்கள்மீது விலையேற்றம் செய்யாதது திமுக ஆட்சியின் குற்றமாம். அதனால் அரசின் கடன் தொகை அதிகரிக்க வழி செய்துவிட்டதாம்.

என்ன அதிசாமர்த்தியமான வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம்!

பால், பேருந்துக் கட்டணம் உயர்வு என்பது பெரும்பாலும் எந்த மக்களைப் பாதிக்கச் செய்யும் என்பதுதானே இதில் பார்க்க வேண்டியது?

இந்தப் பிரச்சினையில் வெகு மக்களின் கருத்து என்ன என்பது கவனிக்கப்பட வேண்டாமா?

பொதுவாக ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைமீது எப்பொழுதுமே பார்ப்பனர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்; கேட்டால், இது அவாள் அவாள் தலை யெழுத்து என்று சமாதானம் சொல்லிவிடுவார்கள்.

பாலுக்கு அழும் குழந்தைகளைப்பற்றி அவர் களுக்கு என்ன கவலை? அதே நேரத்தில் கோயில் குழவிக் கற்களுக்குப் பாலாபிஷேகம் நடக்கிறதா என்பதுதான் அவாளின் அக்கறையும் கவலையும்!

அண்ணா நூலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் அது அவாளுக்குத் துச்சம்!

ஆனால் விவேகானந்தர் இல்லம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் மார்பு புடைத்து எழுதுவார்கள்.

துக்ளக்கில் எழுதுவது தன் வயிற்றுப் பிழைப்புக்கு என்று எழுதுபவர், மற்ற மற்ற சாதாரண மக்களின் வயிற்றுப் பிழைப்புக்குக் கட்டுப்படியான நிலையைப் பற்றியும் கவனிக்க வேண்டாமா?

அதுவும் விலை ஏற்றம் என்றால் சாதாரணமான அளவில் அல்ல! இரு மடங்கு என்று சொல்லும் அளவுக்குக்கூட இறக்கை முளைத்து விட்டதே!

இலவசங்களைக் கேலி செய்து எழுதும் திருவாளர் சோ, செல்வி ஜெயலலிதா அம்மையார் தலைமை யிலான ஆட்சியில் இலவசங்கள் வழங்கப்படுவதற்குத் தனி அளவுகோல் வைத்து வரவேற்கிறார்.

தேர்தலில் இலவசங்களை அறிவிக்கா விட்டால் சென்ற ஊதாரித்தனமான ஊழல் ஆட்சியே திரும்பி வரும் என்று வலிந்து எழுதுவதன் பின்னணி உணர்வு என்ன?

13 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு, தீர்ப்பு விரைவில் வழங்கப்பட ஒத்துழைப்பு அளிக்காமல் காலம் கடத்துவது யார் என்று திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளுக்குத் தெரியாதா?

தினமலர், தினமணி துக்ளக் வகையறாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஒரு சார்பாக எழுதும் பின்னணி என்ன?

தமிழர்கள் இதனை உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ளவும், உள்வாங்கிக் கொள்ளவும் வேண்டாமா?

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல - இனப் போராட்டமே என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ள கருத்தின் வலிமையைத் தமிழர்கள், பார்ப்பன அல்லாதார் புரிந்து கொள்வதுதான் இந்தச் சிக்கலில் இருந்து மீளும் வழியாகும்.  பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்பீர்! என்ற முழக்கம் மீண்டும் தேவைப்படுகிறது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...