Thursday, November 24, 2011

டேம் 999 திரைப்படச் சர்ச்சை! தேசிய நீரோட்டம் உடைப்பெடுக்குமுன் நதி நீர்ப் பிரச்சினையில் நியாயம் கிடைக்கட்டும்




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

டேம் 999 - என்னும் திரைப்படம் எடுக்கப் பட்டுள்ளதன் நோக்கம் என்ன? அதன் விளைவு எத்தகையது? மத்திய அரசு இதில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசு  தொடர்ந்து அழிச்சாட்டியம் செய்து வருகிறது.

ஆள்வது கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி - இந்தப் பிரச்சினையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் அவை!

தேசியங்களின் நிலைப்பாடு!

ஒன்று சர்வதேசியம் பேசும் கட்சி, இன்னொன்றோ  இந்தியத் தேசியம் பேசும் கட்சி. ஆனால் இரண்டுக் கட்சிகளின் நிலைப்பாடோ இவற்றையெல்லாம் ஓரம் கட்டி உண்மை, நேர்மை, நியாயம், சட்டம்  இவற்றையெல்லாம் புறந்தள்ளி  நடந்து கொண்டு வந்திருக்கின்றன.

ஏமாற வேண்டாம் - தமிழ்நாடு அரசு!

அரசு நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க வேண்டாமா? எத்தனையோ தடவை பேச்சு வார்த்தை நடத்தியாயிற்றே! வேறு வழியில்லாமல்தானே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கேரள அரசின் தலையில் ஆழமாக பல்வேறு தடவை குட்டியதன் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியில் பேசலாம் என்று கேரள மாநில முதல் அமைச்சர் உம்மன்சாண்டி தந்திர மாகவே பேச ஆரம்பித்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசு ஏமாந்து போய் விடக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் இருக்கிறதாம். அப்படி உடைந்தால் பல லட்சம் மக்களுக்கு ஆபத்தோ ஆபத்தாம்!

டேம் 999 திரைப்படம்

டேம் 999 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்று மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வேலை இது! கேரள அரசின் இந்தத் தந்திரம் ஓர் அரசின் மதிப்பைப் பெரிதும் குறைக்கக் கூடியதே!

இதனைக் கண்டித்துத் தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ளது. அப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. தமிழ்நாட்டில் எந்தத் திரையரங்கத்திலும் திரையிடத் தமிழர்கள் அனுமதிக்கப் போவதில்லை. நல்ல வாய்ப்பாக தமிழகத் திரைப்பட உரிமையாளர்களும்  இந்தப் படத்தைத் திரையிட மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். இது வரவேற்கத்தக்கதாகும்.

கலைஞர் அவர்களின் அறிக்கை

கேரள மக்களும், தமிழர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கம் இதன் மூலம் பாதிக்கப்படும்;  சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று முன்னாள் முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்களும் இதுகுறித்து கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமே என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

மிட்டல் தலைமையில் ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவினை உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்து அணை பலமாகவே இருக்கிறது என்று அறிக்கையையும் கொடுத்து விட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் 136 அடிக்குப் பதிலாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டாமா?

அதனைச் செயல்படுத்தத் தவறிய கேரள அரசை, உச்சநீதிமன்றம் கண்டித்து இருந்தால் மத்திய அரசும் அதில் சரியான நிலையை எடுத்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் இந்தப் பிரச்சினை நிலுவையில் இருக்க வாய்ப்பே இல்லை. மத்திய அரசைப் பொருத்தவரையில் பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அரசியல் தந்திரத்தோடு நடந்து கொள்வதும் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணமாகும்.

இந்தக் குழப்பத்துக்கும் தாவாவுக்கும் உச்சநீதிமன் றமும், மத்திய அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

தென் மாவட்டங்கள் பாதிப்பு!

இதன் காரணமாக தென் மாவட்ட மக்களின் குடி தண்ணீர் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட் டுள்ளதே - இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

இரு நாடுகளுக்கிடையேகூட நீர்ப் பிரச்சினைகள்  சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டனவே! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.  பங்களாதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கங்கை நீர்ப் பிரச்சினையும் எளிதாகத் தீர்க்கப்பட முடிகிறது. ஆனால் தேசிய நீரோட்டம் பற்றி வாய்க் கிழியப் பேசும் கட்சிகளின் விபரீதப் போக்கினால் இந்தியாவுக்குள் நீர்ப் பிரச்சினை என்பது சிக்கல் நிறைந்த தாக இருந்து வருகிறது.

போலி தேசியத்தால் கண்ட பலன் இதுதானோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முதல் அமைச்சரின் கருத்து என்ன?

தேசிய நீரோட்டம் உடைப்பெடுக்கு முன்பே நதிநீர்ப் பிரச்சினையின் ஓட்டையை அடைக்க மத்திய அரசு முன்வர வேண்டியது அவசியமாகும்.

டேம் 999 திரைப்படத்தினை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கதே!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...