Wednesday, November 16, 2011

மதச் சார்பற்ற அரசுதானா?


மதச் சார்பற்ற அரசுதானா?


தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சித்திரா பவுர்ணமி என்னும் இந்து மத விழாவை தமிழ்நாடு அரசு மதத் திருவிழாவாக அறிவித்திருப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதச் சார்பற்ற  ஓர் அரசு, ஒரு மதத்தின் விழாவை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடலாமா? கொண்டாட முடியுமா என்பது முக்கியமான கேள்வியாகும்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசால் சட்டம் இயற்றப்பட்டது. அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கூட உயர்நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் எது செய்யப்பட்டாலும் அதனைத் தலைகீழாக மாற்றுவது என்பதையே கொள்கையாக, முக்கிய நோக்கமாகக் கொண்டவர் தமிழ்நாடு முதலமைச்சர். தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழகத் தலைவர்கள், புலவர் பெருமக்கள் 1921 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்து அறிவித்ததைத்தான், திராவிடர் இயக்கத் தலைவர் களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலி யோர் விரும்பியதைத்தான் கலைஞர் சட்டமாக்கினார். இதில் அரசியலுக்குச் சற்றும் இடமில்லை.
கலைஞர் எதைச் செய்தாலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்ணோட்டத்தில் அரசியல் தான்.
முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த சித்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கம் தான் சித்திரா பவுர்ணமியை அரசு மத விழாவாக அறிவித்துள்ளதன் உள்ளடக்கம் ஆகும்.
தை முதல் நாள் - தமிழர் விழாவை அரசு விழா வாகக் கொண்டாட தி.மு.க. அரசு உத்தரவிட்டால், அதற்கு எதிராக எதையாவது செய்தே தீரவேண்டும் என்கிற உணர்ச்சிதான் இதில் தலைதூக்கி நிற்கிறது.
யார் எதைச் சொன்னாலும் அதனைக் கருத்தில் கொள்ளாத நிலையில், நீதிமன்றங்கள்தான் தமிழக முதலமைச்சருக்கு மூக்கணாங்கயிறு போட்டு வருகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்னும் கோட்பாட்டுக்கு மாறாக, எதிராக குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியை அரசே நடத்துவது என்பது பச்சையான சட்ட விரோதமாகும். நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அறிவிப்பு செல்லுபடியற்றதாகவே ஆகும் நிலைதான் ஏற்படும்.
முதலமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் இந்து மத அபிமானம், ஆன்மீக நம்பிக்கை இருக்கலாம். அதனை அவர் தோட்ட வீட்டின் அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரங்கேற்ற ஆசைப்படக் கூடாது.
அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு கட்சியின் பொதுச்செயலாளருக்கு என்று சில கொள்கைகளைக் கடைபிடித்துத் தீரவேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளிலும், அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளிலும் அவர்களின் படங் களுக்கு மாலை அணிவிப்பதை ஒரு சடங்காக முதலமைச்சர் கருதுகிறார் என்றே தெரிகிறது.
அவர் பொதுச்செயலாளராக இருக்கும் கட்சி - அதன் பாரம்பரியம், அவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தாகக் கூறும் தலைவர்களின் கொள்கைகள், வழி காட்டுதல்கள் இவற்றைக் கொச்சைப்படுத்துவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், அந்தத் தலைவர்களுக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் எதிரானதுதான் எங்கள் கட்சி என்று வெளியிப்படையாகப் பிரகடனப்படுத்த முன்வரட்டும்.
இந்தப் பிரச்சினையில் ஆட்சி ரீதியாக செயல் படுவது சட்ட விரோதம் என்றால், கட்சி ரீதியாகச் செயல்படுவது கொள்கை விரோதமாகும்.
ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அரசு அலுவலகங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும், படங்களும் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்து, மதச் சார்பற்ற தன்மையின் மரியாதையைக் காப்பாற்றிய அறிஞர் அண்ணா எங்கே?
அதற்கு முற்றிலும் எதிராகச் செயல்படும் செல்வி ஜெயலலிதா எங்கே?
அண்ணாவின் கொள்கைக்காகவே அண்ணா தி.மு.க.வில் இருக்கிறோம் என்று உண்மையிலேயே நம்பும் அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்திக்கவேண்டிய நேரம் இது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...