Friday, October 28, 2011

பச்சோந்திகள் என்ன செய்கின்றன ?


தங்களின் பின்புலத்தின் நிறத்துக்குத் தங்களை பச்சோந்திகள் மாற்றிக் கொள்வதில்லை. அவ்வாறு மாற்றிக் கொள்கின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்யான, இட்டுக் கட்டிய, கட்டுக்கதையாகும். அது எப்போதுமே அவ்வாறு செய்வதில்லை; செய்யப் போவதுமில்லை.
பல்வேறுபட்ட உணர்ச்சி நிலைகளின் விளைவாக அவை தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. அந்த நிறம் பின்புலத்தின் நிறத்துடன் ஒத்திருந்தால், அது யதேச்சையாக ஏற்பட்ட நிகழ்வேயாகும்.
பயந்துபோனபோதோ அல்லது பிடிக்கப்படும்போதோ அல்லது சண்டையில் மற்றொரு பச்சோந்தியைத் தோற்கடிக்கும்போதோ அவை தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.
க்ரோமாடோபோர்ஸ் (Chromataphores)  எனும் சிறப்பான உயிரணுக்கள் பல அடுக்குகளில், ஒவ்வொன்றும் மாறுபட்ட நிறச் சாயப்பொருள்கள் கொண்டவையாக  பச்சோந்தியின் தோலில் உள்ளன. கிரேக்க மொழியில்   (Chroma) என்ற சொல் நிறம் என்றும்   (pherein)
என்ற சொல் எடுத்துச் செல்வது என்றும் பொருள் அளிக்கும். தோலில் உள்ள இந்த அடுக்குகளை மாற்றி சமன்படுத்தும் போது, பல நிறங்களில் ஒளி எதிரொளிக்கிறது. அப்போது பச்சோந்தியைப் பார்க்கும்போது நடமாடும் நிற சக்கரம் போன்று அது இருக்கும்.
தங்களின் பின்புலத்துக்கு ஏற்றவாறு தங்களின் நிறத்தை அவை மாற்றிக் கொள்கின்றன என்ற நம்பிக்கை  மிக நீண்ட காலமாக தொடர்ந்து நிலவி வந்தது வியப்பானதே. இந்த கட்டுக்கதை கி.மு. 240 ல் ஒரு அதிக புகழ்பெற்றிராத ஒரு கிரேக்க எழுத்தாளர் எழுதிய பொழுது போக்குக் கதைகளிலும், வாழ்க்கை வரலாறுகளிலும் முதன் முதலாக இடம் பெற்றது. அதற்கு ஒரு நூறாண்டுக்கு முன்பு இது பற்றி எழுதியிருந்த செல்வாக்கு பெற்ற எழுத்தாளரான அரிஸ்டாட்டில் பச்சோந்தியின் நிற மாற்றத்துக்கு அதன் அச்ச உணர்வுதான் என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சி காலத்தில் இந்த பின்னணிக் கோட்பாடு முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு மறுபடியும் அந்தக் கோட்பாடு உயிர் பெற்று இன்று வரை நிலவுகிறது. பச்சோந்தி பற்றி மக்கள் அறிந்துள்ள ஒரே ஒரு விஷயம் இந்தப் பின்னணி நிற மாற்றமாகவே இருந்து வருகிறது. பலமணி நேரத்திற்கு அசையாமல் இருக்க பச்சோந்தியால் முடியும். இதன் காரணமாகவும், அது மிகவும் குறைவாக உண்பதாலும், அது வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்வதாக பல நூற்றாண்டு காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது. இதுவும் உண்மையானதல்ல.
தரைசிங்கம் (ground lion) என்ற பொருள் கொண்ட கிரேக்க சொல்தான் Chamelon என்பது. இந்த இனத்தில் மிகச் சிறியது 25 மி.மி. (1 அங்குலம்) நீளமும், மிகப் பெரியது 610 மி.மீ. (2 அடி) நீளமும் கொண்டவை. தனது கண்களைத் தனித்தனியாக  சுழற்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பார்க்க பச்சோந்தியால் முடியும். ஆனால் அவற்றுக்கு காது கேட்கவே கேட்காது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...