Tuesday, August 30, 2011

தமிழிசை வளர்த்த ஆதி மும்மூர்த்திகளுக்கு மணிமண்டபம் கட்டும்பணி தொடர வேண்டும் மணவழகர் மன்ற விழாவில் தமிழர் தலைவர் வேண்டுகோள்


சென்னை, ஆக. 30- தமிழிசை வளர்த்த ஆதிமும் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளைக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக் கட்டளையும் இணைந்து நடத்திய (மணவழகர் மன்றத்தின்) 55ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நிகழ்ச்சி நேற்று (29.8.2011) மாலை 6.15 மணிக்கு சென்னை பிராட்வே-ராஜா அண்ணாமலை மன்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கே.கன்னியப்பன்
இந்நிகழ்ச்சிக்கு  வந்தி ருந்த அனைவரையும் மண வழகர் மன்றச் செயலாளர் கே.கன்னி யப்பன், வர வேற்று பேசினார். முத் தமிழ் மன்றம் எவ்வளவு சிரமத்திற்கு இடையிலே நடைபெற்றது. இன்றைக்கு வெற்றி நடைபோடுகிறது. ஆரம்பத்தில் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் ரூ.பத் தாயிரம் கொடுத்தார். இன்றைக்கு அது பத்தொன்பது லட்சமாக வளர்ந்திருக்கிறது என்று பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், பேராசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எல்லாம் இந்த மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரும்பாடுபட்டதை விளக்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.

எம்.ஏ.எம்.இராமசாமி

அடுத்து அண்ணா மலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் எம்.ஏ.எம். இராமசாமி உரையாற் றினார். அவர் தமது உரையில் மணவழகர் மன்றத்தின் நிதி இருப்பு பத்தொன்பது லட்சம் என்று இங்கு கன்னியப்பன் சொன்னார். இப்பொழுது ஒரு லட் சம் வழங்குகிறேன்.

இந்த மணவழகர் மன்றத்திற்கு எது வேண்டு மானாலும் கேளுங்கள் செய்யத்தயாராக இருக்கி றேன். பெரியார் என்னுடைய தந்தையாருடன் நெருக்கமாக இருந்தவர். எங்கள் செட்டிநாடு ஊரில் உள்ள வீட்டில் பெரியார் தங்க வேண்டும் என்று கேட்டார். பெரியார் இரண்டு வருடங்கள், அதாவது 740 நாள்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

நீங்கள் எவ்வளவு, காலத்திற்கு வேண்டுமானாலும், இங்கே தங்கியிருக்கலாம் என்று என்னுடைய தந்தையார் பெரியாரிடம் கூறினார். பெரியார் நாயுடன் வருவார். அதிலும் ராஜபாளையம் நாய் என்றால் பெரியாருக்கு மிகவும் பிடிக்கும். மாலை 5மணி ஆனால் தினந்தோறும் எங்கள் வீட்டு முன்பு பெரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். பெரி யாரை வேடிக்கை பார்க்க தினந்தோறும் எங்கள் வீட்டு முன்பு 20,30 பேர் கூடுவிடுவார்கள். அந்த அளவுக்கு பெரியார் எங்களுடைய குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர் என்று கூறி துவக்கவுரையாற்றினார்.


பு.ரா.கோகுலகிருஷ்ணன்

மணவழகர் மன்றத்தினு டைய காப்பாளர் குஜராத் மாநில முன்னாள் தலைமை நீதிபதி டாக்டர் பு.ரா.கோல குலகிஷ்ணன்  தலைமையுரை யாற்றினார்.

1957ஆம் ஆண்டு முதல் இந்த மணவழகர் மன்றம் சிறப் பாக நடந்து வருகிறது. அன்றி லிருந்து இன்று வரை சமுதாயப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் எந்த வித பதவிகளைப் பற்றியும் எதையும் எதிர்பாராமல் இந்த சமுதாயத்திற்காகத் தொண்டாற்றி வருகின்றார். நாள்தோறும் தந்தை பெரியார் கொள்கையைப் பரப்பி வருகின்றார்.

மிகச் சிறந்த தலைவர் வீரமணி

திராவிடர் இயக்கத் தலைவர்களில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த தலை வராக விளங்குபவர் வீரமணி அவர்கள். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் இந்தமன்றத்திற்கு அன்று தொட்டு இன்று வரை தொடர்புள்ளவர்கள். சிலர் பதவிகள் வந்தவுடன் நல்லவர்களை மறந்துவிடுகிறார்கள் என்று கூறி விளக்கிப் பேசினார்.

தமிழச்சி தங்கபண்டியன்

அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் உரை யாற்றினார். அவர் தமது உரையில் தான் இந்த மன்றத்தில் இப்பொழுது தான் முதல் முறையாக உரையாற்றுவதாகக் குறிப்பிட்டவர், தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் மொழியின் உயர் வையும் விளக்கினார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழக  தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மிகச்சிறப்பான வகையிலே இந்த மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா சர் அண்ணாமலை செட்டியார், நினைவு அறக்கட்டளையும், இணைந்து இன்றைக்கு 55ஆம் ஆண்டு விழாவை நடத்திக்கொண் டிருக்கின்றார்கள்.

55 ஆண்டுகளாக இந்த மணவழகர் மன்றம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் உணர்வுசிறிதும் குன்றாமல் இந்த மாமன்றம் மிகவும் அதிசயிக்க தக்கவகையிலே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

திரு.வி.க. வைத் தெரியுமா?

திரு.வி.க. என்றால் யார் என்று சொடுக்குப் போட்டுக் கேட்டால் எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும்?

திரு.வி.க ஏதோ திரைப்படத்தில் நடித்திருந்தால் ஒரு வேளை இளைய தலைமுறையினருக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தண்ணார் தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரைப் போன்றவர்கள் நாங்கள் எல்லாம் படித்தோம். அங்கு தமிழைப் பெற்றோம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை உணர்வைப் பெற்றோம்.

பெரியார்-அண்ணா-கலைஞர் போன்றவர்கள் நம்முடைய மொழி உணர்வுக்காகவும்-இன உணர்வுக்காவும் இன்றைக்கும் தேவைப் படுகிறார்கள்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர், ஆகியோர் எல்லாம் விரும்பிய செம்மொழி வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கூட தமிழர்களுக்கு இன்றைக்கு உரிமை இல்லையா? தமிழிசையை வளர்க்க தமிழர்கள் பெரும்பாடுபட்டிருக் கிறார்கள். சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்றார். தமிழ கத்திலே இருந்து ஒரு தந்தி அவருக்கு கிடைக்கிறது. என்னவென்றால் தமிழிசை இயக்கம் வென்றது என்பதுதான் அந்தத் தந்தியின் வாசகம். அதைப் பார்த்து அவர் மகிழ்ந்து தனது நண்பர்களி டத்திலே சொல்லுகின்றார். அப்பொழுது அருகிலிருக்கின்றவர்கள் கேட்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழிசை வென்றது என்றால் வேறு எந்த இசை அங்கு இருந்தது என்று அன்றைக்குக் கேள்வி கேட்டார்கள். அப்படிப் பட்ட ஓர் நிலை அன்றைக்கு இருந்தது.

தந்தை பெரியாரும், திரு.வி.கவும், இருவருமே அணுகுமுறையிலே சில கருத்துகளிலே மாறுபட் டிருக்கலாம். ஆனால் இருவருமே இன உணர்வுக்காகவும், மொழி உணர்வுக்காகவும் பாடுபட்டவர்கள்.

திரு.வி.க. பற்றி பெரியார்

பெரியாரே ஒரு முறை சொல்லுகிறார். எனக்கு அவ்வளவு தமிழ் பேசத் தெரியாது. இந்த அளவுக்குத் தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்தது என்றால் நான் திரு.வி.க.வுடன் பழகியதும், அவருடைய உரையாடல்களை கேட்டதும், நவசக்தி இதழைப் படித்ததுமே காரணம் என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கின்றார்.

24.10.1948 ஈரோட்டில் தி.க. தனி மாநாடு ஸ்பெசல் மாநாடு நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு அது. அண்ணா  அவர்களை காரிலே அமர வைத்து தந்தை பெரியார் நடந்து வந்தார். அந்த மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்குகிறார். அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட மாநாட்டில் திராவிட நாடு படத்தை திரு.வி.க. திறந்து வைக்க தந்தை பெரியார் அழைத்தார்.

பெரியார் பற்றி திரு.வி.க.

திரு.வி.க. அந்த மாநாட்டில் பேசுகிறார். சமுதாய முன்னேற்றத்திற்கு பெரியார்கள் அவ்வப்பொழுது தோன்றிக்கொண்டுதான் இருப்பார்கள். திராவிட மக்களுக்கு நல்வழி காட்டி அவர்தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வை அமைக்க இயற்கை தோற்றுவித்த பெரியார் தான் நம் பெரியார்.

காந்தியைப் போல அகிம்சா வாதியாகப் பெரியார் திகழுகிறார். சாக்ரடீசை மிஞ்சிய சீர்திருத்தவாதியாக பெரியார் திகழுகிறார். இப்படி திருவிக ஏன் பெரியாரைப் பாராட்டினார்? காரணம் தமிழர்களுடைய அடிமைத்தனம் அகல வேண்டும் என்பதற்காகப் பாராட்டினார்.

இதனுடைய வேர் எங்கேயிருக்கிறது? காரணம் பண்பாட்டுப் படை எடுப்பு. அதனால்தான் திரு.வி.க. சீர்திருத்தவாதி சாக்ரடீசை மிஞ்சியவர் பெரியார் என்று சொல்லுகின்றார். அன்றைக்கு சீர்திருத்த கருத்துகளை பரப்பிய சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்து கொன்றார்கள்.

ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியார் தனது கொள்கை தனது காலத்திலேயே வெற்றி பெற்றதைப் பார்த்தவர் என்று சொன்னார்.

எனவே கையிலே போடப்பட்ட விலங்கை அது கண்ணுக்குத் தெரியும் உடைத்துவிடலாம் அதே போல காலுக்குப் போட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். அதை உடைத்துவிடலாம். ஆனால் மூளைக்குப் போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது. அதுதான் பண்பாட்டுப் படை எடுப்பு.

தமிழர்கள் போராட வேண்டிய களம்

தமிழர்களின் இசைக்காகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழன் கட்டிய கோவிலில் இன்னமும் தமிழன் அர்ச்சகராக நுழைய முடியவில்லை. நீதிமன்றம் குறுக்கே நிற்கிறது.

தமிழ் வருடப் பிறப்பு சித்திரை என்று இன்றைக்கு இந்த அரசு சொல்லுகிறதே. அது தமிழர்களின் சொத்தா? 60 தமிழ் வருடங்கள் என்று சொல்லு கிறார்களே. இது அறிவுக்குப் பொருந்துமா? கலைஞர் அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தை முதல்நாள்தான் தைப்புத்தாண்டு என்று அறிவித்தார். 500 தமிழறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 1921ஆம் ஆண்டு எடுத்த முடிவு. தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லாம் தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்பதை அறிந்து மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற அரசு தமிழர்களுக்கு புத்தாண்டு சித்திரை என்று அறிவித்திருக்கிறது. நான் இந்த மேடையில் அரசியல் பேச விரும்பவில்லை.

ஒரு பார்ப்பன பண் பாட்டு படைஎடுப்பு ஏற் பட்டிருக்கிறது. தமிழ னுக்குப் புத்தாண்டு கூடாதா? அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் கொண்டு வந்தார். அன்றைக்கு சட்டமன்றத்திற்கு குறிப்பெடுப்பவனாக நான் சென்றிருந்தேன். எதிர்கட்சித் தலைவர் கருத்திருமன் சுயமரியாதை திருமணத்தின் சட்ட வடிவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்.

அப்பொழுது சொன்னார். புரோகிதர்களுக்கு இனி வேலையில்லாதத் திண்டாட்டம் ஏற்படும் என்று சொன்னார். உடனே அண்ணா சொன்னார். நாங்கள் சுயமரியாதை திருமணத்திற்குத்தான் சட்ட வடிவம் கொண்டு வந்தோம். புரோகிதர் திருமணத்தை தடுக்கவில்லையே. இரண்டு புரோகிதர்களை வைத்துக்கொண்டு வேண்டு மானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்.

எனவே தமிழர்களுக்கு புத்தாண்டு தை முதல்நாள் தான் என்றால் சென்ற ஆட்சி செய்தது என்பதை மாற்றுவதா? தமிழ் கலைக் களஞ்சியமான சிங்கார வேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணியில் 1691 பக்கத்தில் வருஷம் என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார். தமிழ் ஆண்டுகள் பிரபவ, சுக்கில, ஸ்ரீமுக, பார்த்திப, சித்ரபானு என்று 60 வருடங்கள்  எழுதப்பட்டிருக்கின்றதே இதில் ஒரு சொல்லாவது தமிழ் சொல் உண்டா? இதைத் தான் பண்பாட்டுப் படை எடுப்பு என்று சொல்லுகின்றோம். இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சங்கீத மும்மூர்த்திகள் என்று தியாகய்யர் (1767-1848), முத்துசாமி தீட்சிதர் (1776) சியாமா சாஸ்திரி(திருவாரூர்) என்று சொல்லுகிறார்கள். இவர்களா சங்கீத மும்மூர்த்திகள்?

தமிழ் இசையை வளர்த்த தமிழறிஞர்கள் தமிழ் இசை ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார் என்றால் 1. முத்துத்தாண்டவர் (கி.பி. 1525-1625) 2.அருணாச்சலக் கவிராயர் (1712-1779) 3.மாரிமுத்தா பிள்ளை.

இன்றைக்கு இம்மும்மூர்த்திகளுக்கு மணி மண்டபம் கட்ட தி.மு.க ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவார்களா? இந்த ஆட்சியில்-தெரியவில்லை.

எனவே தமிழர்களே தமிழனின் அடிமை விலங்கை ஒடிப்பது நமது கடமை. அதற்காக உரக்கச் சிந்தியுங்கள். சிந்திப்பதோடு நின்று விடாதீர்கள் தமிழின உணர்வு பெற செயல் படுங்கள். -இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பேராசிரியர் க.அன்பழகன்

நிறைவாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன் பழகன் தமிழ் மொழி, தமிழின உணர்வு பற்றி யும், பெரியார், அண்ணா, திரு.வி.க., கலைஞர் ஆகி யோர் தமிழ் சமுதா யத்திற்கு ஆற்றி வருகின்ற தொண்டறத்தைப் பற்றியும் நீண்டதொரு சொற்பொழிவு மூலம் சுவைபட விளக்கினார்.

இறுதியாக மணவழகர் மன்றத் துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...