Monday, August 29, 2011

திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


அகில இந்திய நுழைவுத் தேர்வு கூடவே கூடாது!
செப்டம்பர் 25இல் சென்னையில் கழகத்தின் சார்பில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரக்கோரும் மாநாடு!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மாற்றி
சித்திரை முதல் நாளாக சட்டமியற்றியிருப்பதற்குக் கண்டனம்!

திருத்தணி மாநாட்டில் தீரமிக்க தீர்மானங்கள்

திருத்தணி ஆக.29 - தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளாக மாற்றிய தமிழக அரசுக்குக் கண்டனம் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் திருத்தணியில் நேற்று (28.8.2011) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு

முன்மொழிவோர்: அ. அர்ஜுன், காஞ்சி மாவட்ட மாணவரணி தலைவர்

(அ) கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி நாகப்பட்டினம் திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை இம்மாநாடு வரவேற்றுச் செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 2

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழக அரசின் சட்டத்திற்குக் கண்டனம்! 

முன்மொழிவோர்: அருண்குமார், காஞ்சி மாவட்ட மாணவரணி செயலாளர்

தமிழ் அறிஞர்கள் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் வற்புறுத்தப்பட்ட,  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற வகையில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று புதியதாக சட்டம் இயற்றிய அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழின விரோத முடிவுக்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபவ தொடங்கி, அட்சய என்பதில் முடிவு பெறும்  60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூட தமிழில் இல்லாத நிலையில், அவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று ஏற்றுக் கொள்வதும், நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவைதான் இந்த தமிழ் ஆண்டுகள் என்று கூறுவதும் அறிவுக்குப் பொருத்தமற்ற ஆபாசமானதும் - தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடையாளமுமாகவே இருப்பவை என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

நீண்ட வரலாறு படைத்த, தொன்மை மிகுந்த தமிழர் மீதும், தமிழின் மீதும் தொடுக்கப்பட்ட இந்த ஆரியப் பண்பாட்டுப் போரில்,  உண்மை நிலையை நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்து, தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும்,  வரும் செப்டம்பர் 11 அன்று மாலை திருச்சிராப் பள்ளியில் கூட இருக்கும் திராவிடர் கழக பொதுக் குழுவில் ஆலோசித்து,  அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3

(அ) அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு

முன்மொழிவோர்: சி. பிரேமா B.Tech., IT
கலைக் கல்லூரிகளில்  (Arts College)   இளங்கலைப் பட்டம் தொடங்கி,  தொழிற் கல்லூரிகள்வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அவர்கள் தெரிவித்திருப்பதற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் கிராமப்புற மக்களை மிகக் கடுமையாகப் பாதிப்புக்கு ஆளாக்கும் இந்த வெகுமக்கள் விரோத - சமூக நீதி விரோதத் திட்டத்தை, முயற்சியை உடனே கைவிடவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இதில் ஒத்தக் கருத்துடைய அமைப்பு களை ஒருங்கிணைத்து, அகில இந்திய அளவில் போராடி முறியடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(3) (ஆ) கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்

முன்மொழிவோர்: ந, குணாளன், திருவள்ளூர் மாவட்ட மாணவரணி தலைவர்

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் தான் மத்திய அரசு இது போன்ற முடிவுகளை அகில இந்திய அளவில் எடுப்பதற்குக் காரணமாக, உதவியாக இருப்பதால்,  கல்வியை மாநிலப் பட்டிய லில் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதை வற்புறுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 25 அன்று சென்னையில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்த இருக்கும் மாநாட்டுக்குக் கல்வியாளர் களை அழைத்துச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 4

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு

முன்மொழிவோர்: தமிழ்மணி, திருத்தணி நகர செயலாளர்

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் மக்களவை யில் கொண்டு வந்த முன்மொழிவை ஆதரித்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரு அவைகளிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததற்கும், கருத்துக்களை வலிமையாக எடுத்துச் சொன்னதற்கும் இம்மாநாடு மனந்திறந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள் கிறது.

தமிழகத்தின் அடிப்படையான உரிமைகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவைகளுக்காக இதே முறையில கட்சிகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அதன் காரணமாக தமிழ் நாட்டுக்குப் பேருதவி செய்ய முடியும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை

முன்மொழிவோர்: து. சுரேசு,
அரக்கோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர் களும், ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டது, வாழும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாவது குறித்தும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்தும் எழுப்பிய பிரச்சினைகளுக்கும், கேள்விகளுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அளித்த பதில் திருப்தியற்றதாக உள்ளது என்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பதிலிருந்து, மத்திய அரசு ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.

மத்திய அரசு இதில் நியாயமான முடிவை எடுத்துச் செயல்படும் வரையில், அனைத்துக் கட்சி தமிழக உறுப்பினர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும், இதில் ஒத்தக் கருத்துள்ள மற்ற பிற மாநில உறுப்பினர்களையும் இணைத்துக் கொள் வதற்கான  முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 6

தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

முன்மொழிவோர்: கி. எழில்,
திருவள்ளூர் மாவட்ட  இளைஞரணி தலைவர்

தூக்குத் தண்டனை என்பது மனித உரிமைக்கும், மனிதநேயத்துக்கும் எதி ரானது என்பதால், இந்தச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்தும்,  ஏற்கெ னவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், அதனையே கூட தண்டனையாகக் கணக்கில் கொண்டு அம் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டால், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட சட்ட ரீதியாக அதிக வாய்ப்பு இருப்பதால், முதல் அமைச்சர் மனித நேயத்துடன் இந்தப் பிரச்சினையை அணுகி, உரிய முயற்சிகளை எடுக்குமாறும் இம்மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...