Tuesday, January 4, 2011

சிறுபான்மை மக்களே, சிந்திப்பீர்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்துவ இயக்கத்தினரின் 13ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் அ.இ.அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் கலந்து கொண்டிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் நேரம் என்றால் அண்ணா நினைவிடத்துக்கு வருவார்; மற்ற கால கட்டங்களில் அண்ணாவின் பெயரைக் கட்சியில் ஒட்டி வைத்துக் கொண்டாலும் அண்ணா பிறந்த நாளில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதையோ, நினைவு நாளில் அண்ணா சதுக்கத்துக்கு வருவதையோ தவிர்த்து விடுவார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் அண்ணாமீது மரியாதை பீறிட்டுக் கிளம்பிவிடும். அதுபோலத்தான் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கு கொண்டு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசித் தள்ளியிருக்கிறார். சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டுப் பிரச்சினை யில் இவர் கருத்து என்ன? இது குறித்து அவர் அளித்த பதில் தான் என்ன?
கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத் தில் 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள்ளது. நீங்கள்.. தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே என்ற நிருபரின் கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா, இல்லையே! அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்க வில்லையே! என்று பதிலளித்ததும் நிருபர்கள் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல; கிறிஸ்தவர்கள் இருக் கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள்; புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சமமாக இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறிஸ்தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். (தினத்தந்தி 23.7.2004)
இப்படிப்பட்ட சிந்தனையை உடைய ஜெயலலிதா அம்மையார்தான் கிறித்துவர்களுக்காகக் கசிந்துருகிப் பேசியுள்ளார்.

மண் குதிரையைக்கூட நம்பி ஆற்றில் இறங்கலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் நம்பவே முடியாது -முடியவே முடியாது.

4.7.1999 அன்று சென்னை கடற்கரையில் சீரணி அரங்கில் முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. லட்சோப லட்ச முஸ்லிம் மக்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா என்ன பேசினார்?

இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன்.
நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத்தான் பிஜேபி ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது.

என்றென்றும் கடைசி வரைக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன். நீங்கள் இறுதிவரை உறுதுணையாக இருப்பீர்களா? (இருப்போம், இருப்போம் என்று மக்கள் கோஷம்) -என்று சூளுரைத்த ஜெயலலிதா, அதன்படி நடந்து கொண்டாரா? பிஜேபியோடு கூட்டு சேரும் தவறைச் செய்ய மாட்டேன் என்று கூறிய வாக்குறுதி என்னவாயிற்று? ஜெயலலிதாவின் அந்த உரையை அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகமே சிறு நூலாக வெளியிட்டது என்பது முக்கியமானது.

அடுத்த தேர்தலிலேயே பி.ஜே.பி.யோடு கூட்டு சேர்ந்தாரே!

இராமன் கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்டுவது என்று கேட்டாரே!

குஜராத்தில் இஸ்லாமிய மக்களைக் கொன்று குவித்த குரூரன் நரேந்திரமோடி பதவி ஏற்ற விழாவில், தனி ஹெலிகாப்டரில் சென்று வாழ்த்தினாரே!

அந்த நரேந்திர மோடியை வரவழைத்து தமது பங்களாவில் வகை வகையான விருந்தினை அளித்து மகிழ்ந்தாரே!

இவற்றையெல்லாம் சிறுபான்மை மக்கள் எளிதில் மறந்து விடுவார்களா? அப்படி மறந்தால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு உண்டா?

சிறுபான்மையின மக்களே, சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...