Tuesday, November 19, 2019

காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு மயமாக்குவது

அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காஷ்மீர் வருகைக்குப் பிறகு,

நடுநிலைப் பேச்சுக்கான அழைப்பை இந்தியா நிராகரிப்பது முரண்பட்டதாக ஆகிவிட்டது
கரன் தாபர்
அய்ரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு வந்து விட்டுப் போன பிறகு, அதனால் செய்யப்பட்ட சாதனை என்ன என்பதை மதிப்பிடுவ தற்கான நேரமிது. அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில்  இந்தியாவைப் பற்றிய பேசப்படுவதை மாற்ற முயன்ற ஒரு புத்திசாலித்தனமான ஒரு செயல்பாடா அல்லது பல இந்தியர் முகங்களின் மீது வீசப்பட்ட அழுகிப்போன முட்டையா அது? அதன் பல்வேறுபட்ட ஆனால் முக்கி யத்துவம் வாய்ந்த பகுதிகளை பகுத்தாய்வு செய்வதன் மூலம் இதற்கான விடையை இப்போது நாம் காண்போம்.
சிறுபான்மைக் குரல்கள்
முதலாவதாக 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்தனர் என்பது. 4 பேர் வருவதை தவிர்த்து விட்டனர். டில்லியில் உள்ள அய்ரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் தெளிவாகத் தெரிவித்துள்ளபடி இந்த 23 பேரும் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசியப் பேரணி, ஜெர்மனி நாட்டின் ஜெர்மனிக்கான மாற்று இயக்கம், இங்கிலாந்து நாட்டின் பிரிஎக்சிட், இத்தாலி நாட்டின் போஃர்சா இத்தாலியா, போலந்து நாட்டின் சட்டம் மற்றும் நீதிக் கட்சி போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். முஸ்லிம்களுக்கு எதிரான என்ற பொருள் படும்  மக்கள் புலம் பெயர்வதற்கு எதிர்ப்பான நிலையைக் கொண்ட தீவிர வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதுடன், அதே அளவு முக்கியத்துவம் கொண்டதாக அந்த நாடுகளின் முக்கிய அரசியல் தேசிய நீரோட்டத்தைப் பிரதிபலிக்கும் கட்சிகள் அல்ல அவை என்றும் கூறலாம். அவர்களின் குரல்கள் சிறுபான்மைக் குரல்களே ஆகும்.
என்றாலும், காவல்துறையினரோ, ராணுவத்தினரோ இல்லாமல் சாதாரண மக்களைத் தான் சந்திக்க விரும்புவ தாக இங்கிலாந்து நாட்டு லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய கிறிஸ் டேவிஸ் கூறியதால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று கூறுகிறார். "மோடி அரசுக்காக ஒரு பொதுமக்கள் தொடர்பு பற்றிய கழைக் கூத்தில் பங்கேற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் மற்றொரு அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பின ரான தெரசா கிரிபின் என்பவரும் கூட இதைப் போன்றே தனது சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ளார்.  மெல் லியதாக மறைக்கப்பட்ட இந்திய அரசின் இத்தகைய பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கு இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர் என்று இந்த முரண்பட்ட குரல்கள் தெரிவிக்கின்றனவா?
இந்த நிகழ்ச்சி பற்றி கவலை அளிக்கும் இரண்டாவது விஷயம் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றியது. ப்ரூசல்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற மடிசர்மா என்ற பெண்மணியால் ஏற்பாடுசெய்யப்பட்டது இந்த நிகழ்ச்சி. பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை மய்யம் என்ற அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். அவர் இந்த அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அழைப் பில், காஷ்மீருக்கு வருகை தருவதற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்கும் அழைப்பு விடுப் பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  "முடிவுகள் எடுக்கப்படுவதில் செல்வாக்கு பெற்றுள்ள அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமர் விருப்பம் கொண்டுள்ளதாக" அவர் அந்த அழைப்பில் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து,  இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நேரடியாகவோ மறைமுக மாகவோ பிரதமர் மோடியுடன் ஏதாவது ஒரு மாதிரியான தொடர்பு அவருக்கு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறதா? இந்த மூன்று நாள் வருகைக்கான, பயண மற்றும் தங்கும் வசதிகளுக்கான செலவு முழுவதும், இதுவரை அதிகமாக அறியப்படா மலிருக்கும் டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட, அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு மய்யத்திற்குள் சாதாரணமாக எவரும் சென்றுவிட இயலாத அளவில் அதன் கதவுகள் காரண விளக்கம் தர இயலாத வண்ணம் பூட்டி வைக்கப் பட்டுள்ளன. மடி சர்மா  பிரதமர் மோடியிடம் இந்த அளவுக்கு செல்வாக்கை எவ்வாறு பெற்றார் என்பது பற்றியும்,  அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யம் எங்கிருந்து தங்கள் செலவுக்கான நிதி உதவியைப் பெறுகின்றது  என்பது பற்றியும் மேற்கொண்ட கேள்வி களை இது எழுப்புகிறது.
அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் பெற்றவர் களுடன் தொடர்பு கொள்ள இயன்றவர்களாக இருந் தனர் என்பது கவலை தரும் மூன்றாவது செய்தியாகும். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசு துணைத் தலைவர், வெங்கைய நாயுடு ஆகியோரை சந்தித்துப் பேசிய அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவாலுடன் மதிய உணவும், அயல்துறை அமைச்சருடன் இரவு உணவும் உண்டிருக்கின்றனர். காஷ்மீரில் அவர்கள் ஆளுநரையும், 15 ஆவது ராணுவப் படைப் பிரிவின் தலைமை தளபதி யையும், காஷ்மீர் அரசின் தலைமைச் செயலரையும் சந்தித்துப் பேசியும் உள்ளனர். இவற்றின் மூலம் இந்திய அரசு ஏதோ ஒரு தவறான வழியில் சென்று செயல்பட்டி ருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மடிசர்மாவும், அணி சேராமை பற்றிய ஆய்வு மய்யமும் மோடி அரசின் முகவர்கள் என்பதைக் குறிப்ப தாக இருப்பதா அது?
நான்காவது கவலை தரும் விஷயம், காஷ்மீரில் அவர்கள் சந்தித்த மக்கள் மற்றும் சந்திக்க அனுமதிக்கப் படாத மக்கள் பற்றிய செய்திதான். வர்த்தகர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாணவர்கள், முன்னாள் ராணுவத் தினர், ஒரு பெண்கள் குழு, ஒரு சில சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 15 குழுக்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். என்றாலும், அம்மாநி லத்தின் மாநில வணிக மற்றும் தொழில் அமைப்பின் அதிகாரிகளையோ, படகுவீட்டு உரிமையாளர்களையோ அல்லது உயர் அரசியல் தலைவர்களையோ அவர்கள் சந்திக்கவில்லை.
கட்டுப்பாடுகள் கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு
அவர்களது பேச்சு வார்த்தைகள் மிகுந்த கவனத் துடன் கண்காணிக்கப்பட்டதாக ஒரு அறிவிப்பானது தெரிவிக்கிறது. "காஷ்மீரின் சிறப்பு நிலை நீக்கப்பட் டதைப் பற்றியும்,  தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறையால் ஏற்பட்ட பெருத்த வணிக இழப்புகள் பற்றியும் ஒரு வியாபாரிகள் குழு பிரச்சினை எழுப்பிய போது, அதில் குறுக்கிட்ட உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் பேச்சு வார்த் தைகளின் தலைப்பை மாற்றும்படி செய் தார்கள்" என்று 'எகனாமிக்ஸ் டைம்ஸ்' நாளிதழ் கூறு கிறது. சிறீநகருக்கும், பள்ளத்தாக்குக்கும் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்தபோது, இதே போலத்தான் நடந்தது. ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு நடந்தேறிய மிகமிக மோசமான தீவிர வாதத் தாக்குதலில் குல்கம் என்ற இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் அறிக்கைப்படி, பெருமளவில் கல்லெறிதல் சிறீநகரில் நடைபெற்றது என்றும், தீவிரமான மோதல்கள் ஏற்பட் டன என்றும்,  பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வெடித்தனர் என்றும் தெரியவருகிறது. போராளிகள் சில தனியார் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்றும் அறிக்கைகள் தெரிவிப்பதாக அந்த செய்தியிதழ் தெரிவித்துள்ளது. முடிவில் அனைத்து கடைகளும் வியாபார நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டன. வருகை தந்திருக்கும் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு,  இதுதான் காஷ்மீரில்  சகஜநிலை  திரும்பி விட்டது என்பதைப் பார்த்ததின்  அடையாளமா? காஷ் மீரில் நீங்கள் எதை எதிர்பார்க்க இயலும் என்று அவர் களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இதனையே கூறியிருக்கக்கூடும்.
தணிக்கை செய்யப்பட்டவைகளையே தாங்கள் காணச் செய்யப்பட்டதாக குறைந்தது அந்தக் குழுவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெர்மன் டெர்ச் மற்றும் ஜேம்ஸ் ஹீப்பி ஒப்புக் கொண்டுள்ளனர். சில மக்களை விட்டு தாங்கள் தூரமாக வைக்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர். ஜெர்மனி நாட்டு உறுப்பினர் பெர்னார்டு ஜிம்நோக் என்பவர், "இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் விரும்பினால் நடுநிலைப் பேச்சு வார்த்தை நடத்திட நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இவை யெல்லாற்றையும்தானா நரேந்திர மோடி எதிர்பார்த்தார்?
மிகுந்த கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வருகை யின் இறுதி நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பத்திரிகையாளர் சந்திப்புக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திரிகையாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர் என்பதுடன் குழுவிடம் எத்தகைய கேள்வி களை மட்டுமே கேட்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டி ருந்தது. அவர்களது வருகை தோற்று வித்த முரண்பாடு களைப் பற்றி ஆழ்ந்த ஒரு மவுனத்தையே குழு உறுப் பினர்கள் கடைபிடித்தனர். உண்மைகளையும், தகவல் களையும் பெறுவதற்காகவே தாங்கள் வந்ததாகவும், இந்திய அரசியலில் தாங்கள் தலையிட வரவில்லை என்றும், எப்படியிருந்தாலும் தீவிரவாதம் என்பது ஒரு பொதுவான பிரச்சினையே என்றும் அவர்கள் கூறினர். காஷ்மீரில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு தீவிரவாதத்தின் பாதிப்பு என்ற அளவிலேயே அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுவதாக அது இருக்கிறதா? தனது செயல்பாடுகளை நியாயப் படுத்துவதற்கு அரசு தரப்பில் செய்ய இயன்றது என்னவோ அவ்வளவுதான். அரசமைப்புச் சட்ட மாற்றங்களைப் பற்றி காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர்  மகிழ்ச்சி அடைந் துள்ளனர் என்ற அரசின் நிலைப்பாட்டை இக்குழுவினர் ஏற்றுக் கொண்டார்களா என்பது நமக்கும் தெரியாது. என்றாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி அவர் களில் சிலர் வெளிப்படையாக மோடி அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதைக் கேட்கத்தான் மோடி அரசு விரும்புகிறதா?
மேற்கத்திய நாட்டு அரசுகளுக்கும் ஊடகங்களுக்கும் கவலைப்படுவதற்கு ஒரு காரணமாக உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றிய முக்கியமான பிரச்சினையில், இந்த அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு எத்தகையகண்ணோட்டத்தைப் பெற்றுச் சென்றுள்ளனர் என்பதையும் நாம் அறியோம். "ரவை மற்றும் ரப்பர் குண்டுகளைப் போட்டு வெடிக்கும் துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் பயன் படுத்துகின்றனர் என்பது பற்றி பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடிமக்களில் குறைந்தது ஆறு பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உறுதி செய்யப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள் சித்தரவதை செய்யப்படுவது, இழிவாக நடத்தப்படுவது பற்றி பல குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன"  என்று அய்ரோப் பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த நாளில் அய்க்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூறியிருப்பது பற்றி அவர்கள் மறுக்க முடியுமா?
இறுதியாக,  உள்நாட்டு நலன் சார்ந்த மிகப் பெரிய செய்தி ஒன்று உள்ளது. காஷ்மீருக்கு வருகை தர விரும்பும் எவர் ஒருவரையும் வரவேற்க வேண்டிய ஜனநாயக நாடான இந்தியா இருக்கும்போது, இந்த  அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக  காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு மயமானதாக ஆக்கிவிட்டதா?  அக்குழுவில் இருந்த நிகோலஸ் பெஸ்ட் என்ற உறுப்பினர், இந்திய நாட்டு எதிர்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்கு வருவதை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே, இப்போது, தங்களது அரசியல்வாதிகள் கூறுவதை இந்தியா குறைந் தபட்சம் வரவேற்கவாவது செய்கிறதா என்று அய் ரோப்பிய ஒன்றிய அயல்துறை அரசு கேட்குமேயானால், நமது பதில் என்னவாக இருக்க முடியும்? இக்குழுவின் வருகைக்குப் பிறகு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீருக்கு செல்வதை அனுமதிப்பதில்லை என்ற நமது வழக்கமான பல்லவி முரண்பட்டதாகவோ அல்லது நிகழ்ச்சிகளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட தாகாவோ ஆகிவிடவில்லையா?
நன்றி: இந்து 31-10-2019

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...