Wednesday, July 24, 2019

தமிழ்நாட்டில் அம்மணச் சாமியார்கள் மாநாடா?

மதுரை நகரில்   24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதிவரை சந்நியாசிகள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு 'வைகைப் பெருவிழா' என்ற பெயரில் மதுரை புட்டுத்தோப்பு வைகை கரையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அம்மணச் சாமியார்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் #SaveVAIGAIfromRSS என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கங்கை சாக்கடை ஆனது போல வைகையை கங்கை நதிக்கரை போல அழுக்கடைய விடமாட்டோம் என்ற குரலை கவிதா என்கிற சமூகவலைதள பதிவர் பதிவிட்டுள்ளார். கங்கை நதியின் மாசடைந்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அசோக்குமார் தவமணி என்பவர் மதுரை மதச்சார்பற்ற நகரம்; மதுரை சித்திரைத் திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று அமைதியாகக் கொண்டாடுகின்றனர் எனக் குறிப்பிட்டு இஸ்லாமிய குடும்பத்தினர் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கோவை ஜீவா என்பவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஓடும் ரயிலை வைகை ஆற்று பாலத்தில் 4நாட்கள் மறித்து நிறுத்தியபோது வராத கும்பல் வைகை பெருவிழா என வருவது யாரை ஏமாற்ற..? என கொந்தளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொதுவாக அம்மணச் சாமியார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வடஇந்திய ஆபாசக் கலாச்சாரம் அங்கேயே இருந்து தொலை யட்டும்! இங்கே அதனை அரங்கேற்றலாம் என்று நினைத்தால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு காவல்துறை இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திட வேண்டும். ஒரே கலாச்சாரம், ஒரே கலாச்சாரம் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் மத்திய பிஜேபி ஆட்சி அதன் ஒரு பகுதியாக இதனைத் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய எத்தனிக்கிறதோ என்ற அய்யப்பாடும் முக்கியமானதாகும்.
வடநாட்டுச் சாமியார்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பது ஊர்,  உலகத்துக்கே தெரியும். சிறீசிறீ ரவிசங்கர் என்ற சாமியார் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக சுகாதார மாநாடு என்ற பெயரில் டில்லி  அருகில் யமுனை ஆற்றின் கரையில் 1200 ஏக்கர் பரப்பில் மிகப் பெரிய அளவில் மாநாடு, கண்காட்சிகளை நடத்தி சுற்றுச் சூழலை சுக்கு நூறாக்கியதை மறந்திட முடியுமா? அந்த மாநாட்டை எதிர்த்து சமுக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும், உச்சநீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்று கூறியதன் அடிப்படையில் ரூ.120 கோடி அபராதம் விதித்ததையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
யமுனைக் கரை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என்று எழுவர் கொண்ட உயர் மட்ட ஆய்வுக் குழு அறிக்கையாகக் கொடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், சுற்றுச் சூழலையும் கெடுக்கும் அம்மணச் சாமியார்கள் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் இல்லையெனில் எதிர் விளைவே - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...