Wednesday, March 6, 2019

"ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றனரே - எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!"

தினமலர் வாரமலரில் வெளியான (3.3.2019 பக்கம் 10) காந்தியாரை வடக்கே ஒரு பார்ப்பான் கொன்றது போல, ஆஷ் துரையை இன்னொரு பார்ப்பான் சுட்டுக் கொன்றது போலவே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் ஒரு பார்ப்பான் கொல்லுவான் என்ற பொருள்பட - கேள்வி பதில் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு தழுவிய அளவில் கோப அலையை ஏற்படுத்திவிட்டது. பல ஊர்களிலும் அந்த வாரமலரை தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளனர் - காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "இதனை நான் வரவேற்கிறேன். நோயால், விபத்தால் சாவதைவிட இலட்சியத்திற்காகப் பலியாவது என்பது பெருமைக்குரிய ஒன்றே. இதற்காக ஒரு தடவையல்ல - பல முறை சுடட்டும்" என்று கருத்துத் தெரிவித்தார்.

நேற்று (5.3.2019) மாலை சென்னை - பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இது குறித்துக் கூறியதாவது:

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக எழுச்சி மாநாடும், பேரணியும், திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையும் (டிரவிடியன் மேனிஃபெஸ்ட்டோ) தான் நமது இன எதிரிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறது.

அதனுடைய எதிரொலிதான் தமிழர் தலைவர் மீதான வன்முறைத் தூண்டுதல்! தினமலர் வகையறாக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம், ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டை இளைஞர்களைக் கொன்று விட்டுத்தான் தமிழர் தலைவரை நீங்கள் நெருங்க முடியும்.
தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் வரிசையில் ஆசிரியரையும் காவிகள் தங்கள் பட்டியலில் வைத்துள்ளார்களா? காவல்துறை தன் கடமையை விரைவாக செய்ய வேண்டும். கருஞ்சட்டையிடம் காவிக் கைவரிசை காட்ட வேண்டாம் - கருஞ்சட்டைமுன் காவி தோற்று ஓடும் என்றார்.

தமிழர் தலைவர் கருத்து

இதுகுறித்து கூறிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுகையில் புதுச்சேரியில் இதுகுறித்து கருத்துக்கூறியதைத்தான் இப்பொழுதும் கூறுகிறேன்.
வன்முறை என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒன்றும் புதியதல்ல - அது அவர்களுக்குக் கைவந்த கலை - வன்முறை அவர்கள் தர்மம் கூட.

மனுதர்மம் ஏழாம் அத்தியாயம் 107 முதல் 109 வரை உள்ள சுலோகங்கள் என்ன கூறுகின்றன?

107: இந்தப்படியாக சத்துருஜயஞ் செய்கிறவனுக்கு யார் விரோதஞ் செய்வார்களோ அவர்களை சாம தாந பேத தண்ட உபாயங்களினால் தனக்குச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

108: விரோதிகள் சாமதாந பேதங்களினால் சுவாதீநப்படாவிட்டால் மாத்திரம் தண்டோபாயத்தினால் மெதுவாகச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

109: இந்த நான்குபாயங்களுக்குள் சாமோபாயத்தில் பிரயாசை செலவு இல்லாததாலும் தண்டோபாயத்தில் காரியசாதகம் ஆகிறதினாலும் அவ்விரண்டையும் அரசர்களுக்கு இராச்சிய முதலிய சுகத்தைத் தருவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
காந்தியாரையே சுட்டுக் கொன்றவர்கள் ஆயிற்றே! அந்த நேரத்தில் தந்தை பெரியார் கூறியது என்ன? உண்மையைச் சொல்லப் போனால் தந்தை பெரியாருக்குத் தான் பார்ப்பனர்கள் நன்றி கூறிட வேண்டும்.

தந்தை பெரியாரை அழைத்து வானொலியில் பேசச் சொன்னபொழுது காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் வெறும் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியை இயக்கிய கைதான் மதவெறி. அதனை வீழ்த்த வேண்டும் என்று சொன்னாரே. அந்த நேரத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான் என்று கூறி, கொஞ்சம் வன்முறையைத் தூண்டினால் என்ன நடந்திருக்கும்?

அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் உள்துறை அமைச்சராகவிருந்த மகாராட்டிரத்தில் என்ன நடந்தது? அக்ரகாரம் எரிக்கப்படவில்லையா? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா?
தமிழ்நாட்டில் அவ்வாறு நடக்காததற்குக் காரணம் தந்தை பெரியாரே என்பதைப் பார்ப்பனர்கள் மறக்க வேண்டாம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. தனியாகத்தான் செல்கிறேன். எனக்குப் பாதுகாப்பாக இருப்பது இந்நாட்டுத் தமிழர்கள் - எம் தமிழர்கள் - நானும் மக்களோடு மக்களாகவே இருக்கிறேன்.

எனக்கு மெய்ப் பேசத் தெரியுமே தவிர மெய்க் காப்பாளர்கள் பற்றி சிந்திப்பதில்லை.

எங்களைப் பொறுத்தவரை வெளியில் வந்தால் செலவு - வீட்டுக்குத் திரும்பி வந்தால் வரவு. எங்கள் பொது வாழ்க்கையில் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிப்படைப் பாடம் இது.

தமிழர் தலைவர் மீது வன்முறை தூண்டுதல் காவல்துறையில் புகார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் தினமலர் - வாரமலரில் (3.3.2019) கேள்வி பதில் பகுதியில் எழுதியது கண்டு தமிழ்நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தின மலரையும் கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தினமலர் ஆசிரியர், வெளியிடு பவர், பதிப்பாளர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரா விடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் - சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று (5.3.2019) புகார் மனு கொடுத்தார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் ஆகியோரும் உடன் சென்றிருந்த னர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையரும் கூறினார்.

ஆனால் ஒன்று 'தினமலர்', 'துக்ளக்', 'விஜயபாரதம்' வட்டாரங்களுக்கும் - அவர்களைச் சாந்தவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் கொள்கை நாட்டுக்கானது - தமிழ் மக்களுக்கானது - எங்களைக் கொல்லுவதால் அது அழிந்து விடாது - மாறாக மேலும் மேலும் வீறு கொண்டு தான் எழும் - எந்தக் கொம்பனாலும் அதனை அசைக்க முடியாது - அசைக்கவே முடியாது - எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதுதான் விஞ்ஞானம் என்றார்.

பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தி என்னைப் பாடை கட்டி தூக்கிச் சென்றனர். அது குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டனர்.


பார்ப்பனர்கள் பாடைக் கட்டித் தூக்கிச் சென்றுள்ளார்களே என்று கேட்டபோது "ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள்' தூக்கிச் சென்றார்களே  - இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!" என்று சொன்னேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...