Tuesday, May 30, 2017

பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (4)

பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறையில் பரிதிமால் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் (27.5.2017) அன்றைய தொடர்ச்சி...
தந்தை பெரியார் எழுதிய இந்த உரை வரலாற்றுச் சிறப்புடையது. நாகம்மையார்தமக்கும், இயக்கத்திற்கும் ஆற்றிய தொண்டினைப்பற்றி மிக உருக்கமாகவும், ஒரு தனித்தன்மையுடனும் கூறுகிறார். அதை இங்கே எடுத்துக்கூற நேரம் போதாமையால் விட்டுச் செல்கிறேன். நாகம்மையாரைப் பற்றியே இந்த அறக்கட்டளைப் பொழிவில் கூற ஏராளமாக இருக்கிறது என்ற போதிலும், தந்தை பெரியாரின் வாழ்வின் இரண்டாம் பகுதியில் அவரைப் பேணிக்காத்து 95 வயது வரை வாழ வைத்து, அதுவும் உலகில் எந்தப் பெண்மணியும் பெற்றிராத ஏச்சும், பேச்சும், இழிமொழிகளும் பெற்று வாழ்ந்த அற்புத அன்னையார் - அம்மா மணியம்மையார்.
காந்திமதி என்ற இயற்பெயருடைய, திராவிட இயக்கக் குடும்பத்தைச்சேர்ந்த வேலூர் கனகசபையின் புதல்வி அவர்.
தந்தை மறைந்த பின் 1943ஆம் ஆண்டில் தம் 23ஆம் வயதில் தந்தை பெரியாரின் உதவியாளராக, தொண்டராக, நலம் பேணுபவராக வந்தபோது காந்திமதி என்ற பெயர் க.அரசியல்மணி, கே.ஏ.மணி என்று அறியப்பெற்றிருந்தது. தந்தை பெரியாருக்காகத் தன் இளமையை, மணவாழ்க்கையை, குடும்பத்தைத் துறந்து வந்தவர். ஆரம்பத்தில் ஏராளமான கட்டுரைகளைக் "குடி அரசில்" வடித்திருக்கிறார். பெரியாருடன் பயணம் செய் வது, இயக்கச் சுவடிகள் விற்பது, உடல் நலனைக் கண்டிப் புடன் பேணுவது ஆகியவை மட்டுமே அவருடைய பணிகள்.
எந்த அளவிற்குப் பெரியாரின் உடல் நலனைப் பேணினார் என்பதற்கு கோவை அய்யா முத்து எழுதிய எழுத்துக்கள் சான்று.
அதே வேளையில் தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது ஆனபோது விசாரணை அலுவலர் உங்கள் மதம் என்று கேட்டபோது ‘திராவிட மதம்' எனவும், உங்கள் சாதி என்று கேட்டபோது ‘சாதி இல்லை' என்று பதில் தந்திட்ட கொள்கைப் பிடிப்பாளர்.
மணியம்மையாரின் வாழ்க்கையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவு 1943 முதல் 1949 வரையிலானது.  இப்பிரிவில் தந்தை பெரியாரின் நலம் மட்டும் பேணியவர், "குடி அரசு" ஏட்டின் பதிப்பாளர், திராவிடர் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்.
இரண்டாவது காலக்கட்டம் 1949 முதல் 1973 வரையிலான காலம். இக்காலக்கட்டம்மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏச்சும், இழிவுப் பேச்சும் ஏற்றுத் தந்தை பெரியாருடன் நிழலாய்ப் பயணித்த காலம். தந்தை பெரியாரின் உடல் நிலை அவ்வப்போது பாதிப்படைந்த வேளையில் அருகிருந்து இவர் மட்டும் காத்திருக்கவில்லையென்றால் தந்தை பெரியார் 95ஆண்டுக் காலம் உயிர் வாழ்ந்திருக்க இயலாது. இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியாரின் திருமண ஏற்பாட்டை - திருமணத்தை அல்ல, திருமண ஏற்பாடு தான். அதனை விமரிசித்த அண்ணாவே, ஒரு முறை அவரைச் சந்தித்த ஆசிரியர் வீரமணி, "விடுதலை" சம்பந்தம் ஆகியோரிடையே உரையாடிய போது கூறியதே சான்று ஆகும்.
"வீரமணி எனக்கு இன்று என்ன வயதோ அந்த வயது அன்று அய்யாவிற்கு. இன்று எனக்கு என்ன என்ன நோய்த் தொல்லைகள் இருக்கின்றனவோ அத்தனையும் அவருக்கு இருந்தது. ஆனால் அவரைக் காத்து 95 ஆண்டுகள் வாழ வைத்த பெருமைக்குரியவர் என்றால் மணியம்மையார்தான்" என்று குறிப்பிட்டார். "புயல் வருகிறது" என்று எல்லாம் விமரிசித்த அண்ணாவின் மொழிகள் இவை.
1943 முதல் அய்யாவுடனே இருக்கிறார். 1949இல் தான் திருமண ஏற்பாட்டைச் செய்கிறார். திருமண வயதில் ஒருவர் எதற்காகத் திருமணம் செய்வாரோ - அதாவது காம சுகம், பிள்ளைப் பேறு எல்லாம் அற்ற நிலையில் அதனைச் செய்கிறார் என்றால் அது எதற்காக என்பதை எண்ணிப் பார்க்காமல் வசை பாடினர். இழிசொற்களால் அர்ச்சித்தனர்.
1943 முதல் உடன் இருப்பவரைத் திருமணம் செய்து தான் அவர் ஏதேனும் பெற வேண்டுமா? எனவே இது திருமண ஏற்பாடுதான். இயக்கத்தைக் காத்தல் பொருட்டுச் செய்த ஏற்பாடு. இதில் தந்தை பெரியாரின் தொலைநோக்கு வெளிப்பட்டது. எப்படி?
மூன்று பேருடைய கணிப்புப் பொய்த்தது. அந்த மூவர் - இராஜாஜி, அண்ணா, கவிஞர் பாரதிதாசன்.
இராஜாஜியிடம் தந்தை பெரியார் தம் திருமண ஏற்பாட்டை எடுத்துக் கூறியபோது, எந்த அளவிற்கு  தந்தை பெரியாரின் நம்பிக்கை சரியாக இருக்கும்? யோசித்துச் செய்க எனத் தன் அவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அண்ணாவோ இயக்கத்தைப் பிளந்து தனி இயக்கம் கண்டார்.
புரட்சிக் கவிஞரோ திருமண ஏற்பாட்டைக் கண்டித்து அன்னையாரை இழிவாகக் கூறிக் கவிதையே படைத் தார். ஆனால், இந்த மூவருடைய எண்ணங்களும் தோற்றுப் போயின. அன்னையின் அருந்தொண்டினால்.
அண்ணா என்ன கூறினார் என்று பார்த்தோம்.
புரட்சிக் கவிஞர் ஓர் அற்புதக்கவிதையைப் படைத்து அன்னையின் அருந்தொண்டைப் பாராட்டி, பெரியாரை வாழ வைத்த பெண்மணி என்று சுட்டிக்காட்டி "அந்தப் பொடிப் பெண்ணை அன்னை என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது" என்று எழுதினார் என்றால், மேலே குறிப்பிட்ட மூவரின் கணிப்பையும் பொய்யாக் கியவர், தந்தை பெரியாரின் கண்ணாடி பார்த்த பார் வையே சரியானது என்று காட்டியவர் அன்னை மணியம்மையார்.
(தொடரும்)
தந்தை பெரியார் மறைந்தபோது இனி இயக்கம் அவ்வளவுதான் என்று எண்ணியவர்களின் எண்ணத்தில் மண் விழும்படி அன்னை வீரிட்டெழுந்தார். அய்யாவின் எண்ணம் பொய்த்து விடாதபடி புது வீராங்கனையாகக் கொள்கை கொடி கட்டிப்பறக்கச் செய்பவராகத் தந்தை இல்லாத சோகத்தை நெஞ்சில் தாங்கிப் புறப்பட்டார்.
1973இல் இயக்கத் தலைமைப் பொறுப்பைத் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றுக் கொண்டவர் செய்த முதல் பணி, தந்தை பெரியாரின் செயல் முடிப்பது. அவர் வகுத்து தந்த பாதையில் நடைபோடுவது என்று முடிவெடுத்தார்.
ஒரு மாபெரும் இயக்கத்தலைவியான அவரிடம் இருந்த இந்த அரிய பண்புகளை, எளிமையை எடுத்துக் கூறாவிடில் மணியம்மையார் பற்றிய கூற்று நிறைவு பெறாது.
எளிமையென்றால் அவ்வளவு எளிமை. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள், அவருடைய சொந்தச் சொத்துக்கள் ஏராளம். ஆனால் அவர் நினைத்திருந்தால் ஆடம்பரமாக இல்லாவிடினும், மிகச் சொற்ப வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம். அப்படி வாழ்ந்திருத்தால் கூட 58 வயது என்பதைத் தாண்டி மேலும் சில காலம் வாழ்ந்திருக்கக்கூடும். அவரோ மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
திருச்சியிலிருந்து சென்னை வரும்போது மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் மக்கள் கூட்டத்தோடு ஒருவராக அமர்ந்து வருவார். வருபவர், மாற்று உடை என்று ஒரு சேலை, பாவாடை இவற்றை ஒரு துணிப்பையில் எடுத்து வந்து இரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வந்து விடுவார். திடலில் இருந்து தகவல் அறிந்து அழைத்துவரச் சென்றால், "இந்த ரயில் நிலையம் அருகிலேயே திடல் இருக்கிறது. எதற்கு வீணாக வர வேண்டும்" என்று கடிந்து கொள்வார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்ன இரண்டு தகவல்களை இங்கே பதிவு செய்தால் சரியாக இருக்கும். "விடுதலை" ஆசிரியர் மணியம்மையார். எனவே கவிஞர் "விடுதலை" பொறுப்பேற்ற போது தலையங்கம் தான் எழுதுவது சரியாக இருக்காது என்று பழைய தலையங்கங்களையே வெளியிட்டு வந்தார்.
ஒரு நாள் மணியம்மையார் கவிஞரை அழைத்து "நாளை முதல் ‘விடுதலை'யை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். அறிவிப்பு வெளியிட்டு விடு" என்று சொல்ல அதிர்ச்சியுற்ற கவிஞர் "ஏன் அம்மா? அவ்வாறு செய்ய வேண்டும்?" என்று கேட்க "பின் என்ன பழைய தலையங்கங்களையே போட்டுக்கொண்டு இருந்தால் தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். உன்னை எழுதச்சொன்னேன். நீ எழுதத் தயங்குகிறாய்? பின் பத்திரிகை நடத்தி என்ன பயன். நிறுத்தி விட வேண்டியது தான்" என்று சொல்ல அதன் பின் தாமே தலையங்கம் எழுதுவதாகச் சொல்லி அப்பணியைச் செய்து வந்திருக்கிறார்.
அம்மாவின் பண்பிற்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சென்னை புரசைவாக்கத்தில் கண் அறுவைச் சிகிச்சையினை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மருத்துவமனையில் செய்து கொண்டவரை கவிஞர் சென்று கண்டிருக்கிறார். "என்ன அம்மா இப்படி சொல்லாமல் வந்து மருத்துவ மனையில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அன்னையார் "டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். நர்ஸ் மருந்து ஊற்றுகிறார். எனக்கு உணவு முதலியன கொடுப்பதற்குத் தங்கை மகள் உடன் இருக்கிறாள். நீ என்ன செய்யப் போகிறாய்! சரி வந்ததற்கு விடுதலையைப் படித்துக் காட்டி விட்டுப்போ" என்று கூறிவிட்டாராம். எவ்வளவு எளிமையான குணம் என்று பாராட்டாமல் இருக்க முடியாது.
இப்படி அம்மாவின் எளிமைக்கு இன்னும் பல சான்று காட்டலாம். மேலும் ஒன்றே ஒன்று. "விடுதலை" சம்பந்தம் இல்லத்திருமணம் மறுநாள் அம்மாவின் தலைமையில் நடைபெற இருக்கிறது. திடலில் பெரிய பந்தல் போட்டு விளக்கு அலங்காரத்துடன் தடபுடல் விருந்து ஏற்பாடுகள் பலமாக இருந்தன.
திருச்சியிலிருந்து மாலை அம்மா வந்து சேர்ந்தார்கள். பலத்த ஏற்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி. ஆசிரியரை அழைத்தார்கள். "வீரமணி நாம் திருமணங்களை எளிமையாக நடத்தவேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். ஆனால் நம் திடலிலேயே இவ்வளவு ஆடம்பரமா? நாளை நான் வரப்போவதில்லை" என்று கூறி விட்டு ஷெனாய் நகர்  சுந்தரவடிவேலு இல்லம் சென்றவரை ஆசிரியர் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார்கள்.
எளிமைக்கு மட்டுமல்ல; துணிச்சலுக்கும் தொண்டர்களை மதித்துப் போற்றுவதிலும் அம்மாவின் வாழ்வில் இடம் உண்டு.
1957இல் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப் பட்ட வேளையில் திருச்சி சிறையில் இறந்த இரு தொண்டர்களின் உடலைக் கொடுக்காமல் சிறை நிருவாகம் அழிச்சாட்டம் செய்தபோது அன்னையார் சென்னை வந்து அமைச்சர்களிடம் பேசி இருவர் உடலையும் வெளிக்கொணர்ந்து காவிரிக் கரையில் புதைக்க முயன்றபோது, காவல்துறை அதிகாரிகுறிப்பிட்ட பாதை வழியேதான் செல்ல வேண்டும் என்று கட்டளையிட "முடியாது" என்று மறுத்துச் சாலையில் அமர்ந்து மறியல் செய்தவர் நம் தங்கத்தாய் மணியம்மையார். இது நடந்தது திராவிடர் கழக ஆதரவு பெற்ற காமராசர் ஆட்சியில்.
அதைப் போலவே பின்னால் திராவிடர் கழக ஆதரவு பெற்ற கலைஞர் ஆட்சியில் அம்மாவின் சாதனை நிகழ்வு இராவண லீலா நடத்தியது. தடையை மீறி இராவண லீலா நடத்த முயன்றபோது டில்லியில் இருந்த இந்திரா அரசு தமிழகத்தில் ஆட்சி செய்த கலைஞர் அரசை அதை எப்படியும் நடத்த விடாமல் தடுக்கும்படி நெருக்கடி கொடுத்தது.
தலைவர் கலைஞர் காவல்துறை ஷெனாயையும், துரையையும் அனுப்பி அம்மாவிம் பேசச் சொன்னார். அம்மாவிடம் வந்து பேசினர். அம்மா உறுதியாக இராவண லீலா நடைபெறும், இராம, லட்சுமணர் உருவங்களுக்குப் பெரியார் திடலில் எரியூட்டப்படும் என்று கூறிவிட்டார். எனவே அவர்கள் அம்மாவிடம் விடை பெற்றுச் செல்கையில், "அய்யாவாக இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை நிறுத்தியிருப்பார்" என்று சொல்ல, அம்மா நச்சென்று அவர்களிடம் சொன்ன பதில் "ஆமாங்க! அவர் தலைவர். அவர் சொன்னால் தொண்டர்கள் மீற மாட்டார்கள். நான் இயக்கத் தலைவியானாலும் தொண்டர் தான். நான் சொன்னால் எந்த அளவிற்கு கேட்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது" என்று கூறிவிட்டார்.
மூன்றாவது நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடந்தது. தொண்டர் பொருட்டு அம்மா எந்த அளவிற்குப் பொங்கி எழுவார் என்று காட்டக்கூடியது. இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டச்சென்றபோது, மறைமலையடிகள் பாலத்தில் அன்னை, ஆசிரியர் உள்ளிட்டோரை கைது செய்தபோது வேனில் அமர்ந்திருந்தவர், வெள்ளைச்சாமி என்ற காவல் அதிகாரி தொண்டரை அடித்துக் கொண்டிருந்ததைக் கண்டபோது வேனில் இருந்து இறங்கி, அந்த அதிகாரியிடம் "ஏன் அடிக்கிறாய்!" என்று துணிவுடன் கேட்டபோது, அங்கு வந்த வால்டர் தேவாரம் அந்த அதிகாரியைக் கண்டிக்காது, ஒரு மாபெரும் இயக்கத் தலைவியாம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரைப் பார்த்து, அவரெல்லாம் அந்தப்பதவிக்கு வரக்காரணமாக இயக்கத் தலைவி அன்னையாரைப் பார்த்து "மி ஷ்வீறீறீ sலீஷீஷீளீ ஹ்ஷீu" - "உங்களைச் சுட்டுக் கொல்வேன்" என்று மிரட்டியது கண்டும் மிரளாமல், அஞ்சாமல் துணிவுடன் இருந்தவர் அன்னையார். எளிமைக்கும், துணிச்சலுக்கும், அன்னைப் பண்புடன் இயக்கத் தோழர்களுக்குத்தோழர் நாகம்மையார்போல் வடித்துக் கொட்டிய, தாமே சமைத்துப் போட்ட ஒருதலைவியை வேறு எங்கும் காணமுடியாது. உலகிலேயே பகுத்தறிவு இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே தலைவியை வேறு எங்கும் காணவியலாது.
அன்னையாரின் தொலை நோக்கத்தையும், அருட்கொடை உணர்வினையும் கூறாவிடில் இந்த உரை நிறைவு பெறாது.
தொலைநோக்கு என்பது, தனக்குப்பின் இந்த இயக்கம் நிலை பெறுவது யாரால் என்று கண்டுபிடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணிதான் இயக்கத்தை வழிநடத்த, தந்தை பெரியாரை உலக மயமாக்க உகந்தவர் என்று கண்டறிந்த ஒன்று போதும் அன்னையாரின் பெருமை கூற! இயக்கத்தில் எவ்வளவோ மூத்த தலைவர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இருந்தனர். ஆயினும் அன்னையார் அதைக் கண்டு கொண்டாலும், இயக்கம் தழைக்க தந்தை பெரியாரின் தொண்டு சிறக்க ஆசிரியர் வீரமணியே தகுந்த வாரிசு என்று உயில் எழுதி வைத்தார்.
முக்கியஸ்தர்கள் ஆசிரியரிடம் வந்து அன்னையார் இருக்கையில் அந்தப் பொறுப்பை திருவாரூர் தங்கராசுவிடம் விட்டுக் கொடுக்கச் சொன்னபோது அவரும் ‘பெருந்தன்மையோடு, சரி' என்று சொல்லி விட்டார். அம்மாவிடம் போய்த் தன் செயலாளர் பொறுப்பைத் தமிழர் தலைவர் விட்டுக்கொடுக்க ஒத்துக் கொண்டார் என்றவுடன் அம்மாவுக்கு வந்ததே கோபம், "நான் கொடுத்த பதவியை விட்டுக்கொடுக்க உனக்கு உரிமை கொடுத்தது யார்?" என்று கேட்க ஆசிரியர் பணிந்தார். இதைப்போலவே இன்னுமொரு சம்பவம். மருத்துவமனையில் இருந்த அம்மா குழுக்கூட்டத்திற்கு வந்து தாம் வகித்த பொறுப்பைத் துறப்பதாகவும், ஆசிரியரிடம் அதனை ஒப்புவிப்பதாகவும் மருத்துவமனையிலேயே எழுதி எடுத்து வந்த கடிதத்தை ஆசிரியர் ஒப்புக்கொள்ளாது கிழித்துப் போட்ட நிகழ்ச்சியும் உண்டு.
இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள். எடுத்துச் சொல்லவும் ஆவல் தான். எனினும் கால நெருக்கடி கருதி இவ்வாய்ப்பு அளித்த தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக விளங்கிய முனைவர் ஏகாம்பரம், முனைவர் நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி கூறி இந்த அறக்கட்டளைப் பொழிவை நிறைவு செய்கிறேன்.
- தொடரும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...