Thursday, November 17, 2016

வாராக் கடன்காரர்களை என்ன செய்ய முடிவு?

ரூபாய் நோட்டுகள் மாற்றம், புதிய நோட்டுகள் அறிமுகம் மற்றும் நோட்டுகள் செல்லாத்தன்மை குறித்து அறிவிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், அவர் நிலையில் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. ஆனால், பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் திடீரென தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பதும், அவர் அறிவித்த பிறகு நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறைச் செயலாளர் வேறு வேறு விதமாக அறிக்கைகள் தொடர்ந்து விடுவதும், ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று இறுதி முடிவு எடுக்கப்பட்ட தேதியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் போன்ற குழப்பமான செயல்களால் நாட்டின் பணப் பரிமாற்றம் முற்றிலும் உறைந்து போய்க் கிடக்கிறது.
மோடி இந்த புதிய ரூபாய் நோட்டுப் பணி குறித்து கூறும்போது இந்தப் பணி கடந்த 6 மாதமாக நடைபெறுகிறது என்று கூறிக்கொண்டு வருகிறார்.
தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அக்டோபர் 6 ஆம் தேதி பதவியேற்றார்.
புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் போது ஆளுநரின் கையொப்பமில்லாமல் அச்சடிக்க முடியாது.  ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியில் இருக்கும்போதே தனியார் நிறுவன பொருளாதார ஆலோசகர் ஒருவர் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியினை கண்காணித்தது எப்படி? முக்கியமாக உர்ஜித் படேல் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பொருளாதார நிர்வாக தலைமை இயக்குநராக பணியாற்றியவர். அதானி குழும வர்த்தக ஆலோசகர் குழுவில் முக்கியப் பொறுப்பை வகித்தவர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவரிடம் பணப் பரிவர்த்தனை போன்ற மிகவும் முக்கியமானத் தகவல்களை மோடி பகிர்ந்துள்ளது சரியானதுதானா?
இதனடிப்படையில் இந்த ரூபாய் நோட்டு ரத்து விவகாரத்தில் தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களான அதானி மற்றும் அம்பானி குழுமத்தின் ஆலோசனையின்கீழ் நடத்தியுள்ளார் பிரதமர்  என்றெல்லாம் செய்திகள் உலா வருகின்றன.
2015 ஆம் ஆண்டு இந்திய வாராக் கடன் பட்டியலில் மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரை நிதிஅமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. அதில் முதலிடம் பிடித்த குழுமம் எது? மோடியின் நெருக்கமான, இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்படேல் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக பணிபுரிந்த அம்பானி குழுமம் தான் அது.
1)  ரிலையன்ஸ் குழுமம் (அனில் அம்பானி) - 1,25,000 கோடிகள்
2)  வேதாந்தா குழுமம் - 1,03,000 கோடிகள்
3)  எஸ்ஸார் குழுமம் - 1,01,000 கோடிகள்
4)  அதானி குழுமம் - 96,031 கோடிகள்
5)  ஜே.பி குழுமம் - 75,163 கோடிகள்
6)  ஜே.எஸ்.டபிள்யு (ஜிண்டால்) - 58,171 கோடிகள்
7 )  ஜி.எம்.ஆர் குழுமம் - 47,976 கோடிகள்
8 )  லாண்கோ குழுமம் - 47,102 கோடிகள்
9 )  வீடியோகான் குழுமம் - 45,405 கோடிகள்
10 ) ஜி.வி.கே குழுமம் - 33,933 கோடிகள்
இந்த பட்டியலில் உள்ள முதல் பத்து நிறுவனங்கள் அனைத்தும்,மோடிக்குமிகவும்நெருங்கியநண்பர் களுக்குரியவை என்பதை நாடே நன்கு அறியும். பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களின் உறவினர்களையும் கணக்கிட்டு  இந்த வாராக்கடனை கூட்டினால் மொத்தம் 7,32,781 கோடி ரூபாய் வருகிறது.
கருப்புப் பணம் என்று கூறி நாட்டு மக்களை பொருளாதார அவசர நிலைக்குத் தள்ளியுள்ள மோடி கூறும் கருப்புப் பணம் வெறும் 5 விழுக்காடு மட்டுமே! இந்த 5 விழுக்காடு கருப்புப் பணங்களும் நோட்டுகளாக இல்லாமல், தங்கமாகவும், நிலங்களாகவும், பங்குவர்த்தகத்தில் பங்குப் பத்திரமாகவும்தான் உள்ளன. இந்தக் குறைந்த விழுக்காடு கருப்புப் பணத்தை வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையை திறம்பட பயன்படுத்தினால் சில நாள்களில் வெளிக்கொண்டு வந்துவிடலாம்.
திமிங்கலங்களை விட்டுவிட்டு கெண்டைக் குஞ்சு களை வலை வீசிப் பிடிக்க முயலுவது ஏன்?
கருப்புப் பண நடவடிக்கைகளை வரவேற்பவர் களைக்கூட அதனைச் செயல்படுத்திட மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகள், செயல்பாடுகள் முகம் சுளிக்க வைக்கின்றனவே!
இன்னும் 50 நாள்கள் பொறுத்துக் கொள்ளச் சொல் கிறார் பிரதமர்; அதுவரை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பட்டினிச் சாவூருக்குப் பயணம் செய்யவேண்டுமா? நோயைவிட வைத்தியம் வக்கிரத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடாதல்லவா!
‘நாயர் பிடித்த புலிவால்’ என்பார்களே, அது இது தானோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...