Thursday, September 29, 2016

சேலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா?
போராடி பெற்ற திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மோடியின் ‘‘மேக்இன் இந்தியா’’ - ஸ்டாண்டப் இந்தியா என்பதற்கான அர்த்தமா?
சேலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி
திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள தமிழக உரிமை கோரும் போராட்ட அறிக்கை

கருநாடகத்தைப் பார்த்த பிறகாவது தமிழக அரசு செயல்படுமா?

போராடிப் போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் திட்டத்தை எதிர்த்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளே இல்லை; மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கக் கூடாது என்று திராவிடர் இயக்கமும், தமிழ்நாட்டிலிருந்த அத்துணை அமைப்புகளும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததுண்டு.

பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்


1967 இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின், அன்று பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி 1970 இல் கலைஞர் (தி.மு.க. ஆட்சி) முதல்வராக இருந்தபோது சேலம் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார் (16.9.1970).

ஆனாலும், அதற்கு அடிக்கடி, ‘‘மூடுவோம், மூடுவோம் அல்லது தனியாருக்குத் தாரை வார்ப்போம்‘’ என்ற அச்சுறுத் தல்கள் அறிவிப்புகள் தொடர்ந்தன; லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் கூறப்பட்டதுண்டு. பின்னர் லாபம் கொழிக்கும் ஆலையாகவே செயல்பட்டது தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு!

உருக்காலை கேட்ட தமிழ்நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்துவதுபோல உருட்டாலை (எவர்சில்வர் தகடுகள்) உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையாகத்தான் இருந்தது!
தனியார் மயமாக்கிடும் மிகப்பெரிய ஆபத்து!

தனியார் மயம் கொள்கையைக் கொண்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, திட்டக் கமிஷனைக் கலைத்து, ‘நிதி ஆயுக்‘ என்ற ஒரு நிர்வாக அமைப்பினை அமைத்தது. அவ்வமைப்பின் பரிந்துரைப்படி - (20.9.2016 நாளிட்டது) 22 பொதுத் துறை நிறுவனங்களின் அரசு பங்குகளில் பெரும்பான்மையை தனியாருக்கு விற்று விடுவது - 51 சதவிகிதத்திற்கும் கீழே - ஏதோ பெயரளவில் பொது நிறுவனம் என்பதுபோல குறைந்த அளவு பங்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தனியார் மயமாக்கிடுவது என்ற அறிவிப்பு மிகப்பெரிய ஆபத்து ஆகும்!
இதில் வேலை பார்க்கும் சுமார் 2000 பேர்களின் குடும்பங்கள் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட) பலரும் வேலைகளை இழக்கும் அபாயம் உடனடியாக ஏற்படக்கூடும்.
அம்பானி, அடானி - டாட்டா பிர்லாக்களின் நிறுவனங்களில் ஒரு பகுதியாக...

தனியாருக்குப் பெரும் பங்குகள் இருந்தால் அடிப்படையில் அவர்கள்தான் உண்மை ஆளுமை உடையவர்களாகி, நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு ‘சமூகநீதி’ குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அம்பானி, அடானி - டாட்டா பிர்லாக்களின் நிறுவனங்களில் ஒரு பகுதியாகவே சேலம் உருக்காலை என்ற உருட்டாலை ஆக்கப்பட்டு, பொதுத் துறை தன்மையை அது அறவே இழக்க நேரிடும்!

காரணம், 3000 கோடி திட்டம் இழப்பில் நடக்கிறது என்றால், நிபுணர்களைக் கொண்டு அதனை லாபத்தில் நடத்துவதற்குரிய புதிய வழிமுறை ஆக்க ரீதியாக அலசி ஆராய்வது முக்கியமே தவிர, மூடு விழா செய்வது சரியான தீர்வாகாது; தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் என்பது மத்திய அரசின் எண்ணமா?

நெய்வேலி என்.எல்.சி. ஆலை, திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனம், கல்பாக்கம் அணுமின் உற்பத்தி சாலை, ஆவடி ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலை, சேலம் உருக்காலை ஆகியவை தமிழ்நாட்டின் ‘‘பஞ்ச ரத்தினங்கள்’’ என்று கூறப்படுபவை. இந்த நிறுவனங்கள் மோடி ஆட்சியில் முடக்கப்படும் ஆபத்துகள் தலைதூக்கி வருகின்றன.

நிதிப் பற்றாக்குறையினை ஈடுகட்டுவதற்காக விற்கிறார்களாம்

இலாபத்தில் நடைபெறும் பொதுத் துறை நிறுவனங்களாகிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள், திருச்சி பி.எச்.எல். என்ற கனரக யந்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளையும், தங்களது  நிதிப் பற்றாக்குறையினை ஈடுகட்டு வதற்காக விற்கிறோம் என்று முந்தைய மத்திய அரசும் கூற, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததும், அதன் பங்கை தமிழக அரசிடமே கொடுங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடிதம் எழுதியதும் நினைவிருக்கலாம்!
மலேசியாவின் இரட்டைக் கோபுரம், மெல்போர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அந்த அளவு தரம் வாய்ந்த சேலம் இரும்பு உருக்காலைக்கு பிரிட்டன் அரசின் பாதுகாப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இங்குத் தயாரிக்கப்படும் இரும்புத் தகடுகளை 37 நாடுகள் விரும்பி வாங்கிக் கொண்டுள்ளன. நீண்ட கால கோரிக்கையான வெப்ப உருட்டாலை 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்கள் முதல் 25 ஆயிரம் டன்கள் வரை உற்பத்தி செய்த சாதனை சேலம் ஆலைக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.

‘எவர்சில்வர் தகடு’ ஆலையாக ஆக்கியதை எதிர்த்தே சேலத்தில் திராவிடர் கழகம் கண்டனக் கூட்டம், கடும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெற்றது; பிறகு மூடும் அபாயம் நீங்கியது!  (1995 இல் ஒருமுறையும், 2010 இல் ஒருமுறையும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுண்டு).

இலாபத்தில் சேலம் உருக்காலையை
இயங்க வைக்க முடியும்


தனியாருக்குத் தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது; சேலம் இரும்பாலையின் நட்டத்தைப் போக்க, நெய்வேலி, திருச்சி மத்திய நிறுவனங்களுக்குத் தேவையானவற்றை சேலம் உருக்காலையில் சிறு தொழிற்பிரிவுகளை அமைத்தாலே இலாபத்தில் அதனை இயங்க வைக்க முடியும் என்பது வல்லு நர்கள் கருத்தாகும்! ரயில்வே பெட்டிகள் தயாரிப்புப் பிரிவு, பி.எச்.எல். மூலம் மின்சார அனல் மின்சாரத் தயாரிப்புப் பிரிவு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து செய்தால், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் பயன்படும் வகையில் செய்ய முடியும்.

நட்டத்தைப் போக்க நடவடிக்கை
எடுக்க முன்வரவேண்டும்


‘மனமிருந்தால் மார்க்கமுண்டு.’ எனவே, மத்திய அரசு, இந்தத் தனியாரை எஜமானர்களாக்கும் இம்முயற்சியைக் கைவிட்டு, நட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
நமது தமிழ்நாடு அரசும், முதல்வரும் தமிழ்நாட்டு எம்.பி.,க் களும் உடனடியாக பிரதமர், கனரக இரும்புத் தொழிற்சாலை அமைச்சர் ஆகியோரைக் கண்டு இதனைத் தடுத்து நிறுத்திட ஆவன செய்யவேண்டும்.

மேக் இன் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பிரதமர் மோடியின் கோஷம் தலைகீழ் அர்த்தம் கொண்டதுதானோ? அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள ‘சோஷலிஸ்ட்’ என்பதனை இந்த அரசில் நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அக்டோபர் 3 ஆம் தேதி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இதற்கு முதல் கட்டமாக - 3.10.2016 திங்கள் அன்று சேலத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும். ஒத்தக் கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள், உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள முன்வரவேண்டும்.
சேலம் செயலாற்றும் காலம் என்று காட்டவேண்டும்; மோடி அரசு வெளியார்க்குத் தாரை வார்க்கும் அத்திட்டத்தைக் கைவிடும் வரையில் பல கட்டமாக அறப் போராட்டங்களைத் தொடர வேண்டியிருந்தால், திராவிடர் கழகம் அதனை கடமையாகக் கருதிச் செயல்படுவதற்கு ஒரு போதும் தயங்காது!
ஆயத்தமாவீர்!

ஆபத்தைத் தடுப்பீர்!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
26.9.2016  

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...