Wednesday, April 13, 2016

துவாரகா சங்கராச்சாரியாரின் “துன்மார்க்க” உபதேசம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது - கருவறைக்குள் போகக் கூடாது என்ற பிற்போக்குச் சம்பிரதாயம் கடந்த 400 ஆண்டு களாக இருந்து வந்தது; அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம், அந்தக் கழிசடை சம்பிரதாயத்துக்குச் சவுக்கடி கொடுத்து, பெண்கள் தாராளமாக கருவறைக்குள் நுழையலாம் - பூஜை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது (1-4-2016).

அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களுமாக அக்கோயிலுக்குள் நுழைந்து மூல விக்கிரகத்தின் தலையில் எண்ணெய் ஊற்றி சாத்துப்படியும் செய்தனர். இதனால் அந்தக் கடவுள் கோபித்துக் கொண்டு நடை கட்டவில்லை.

இதுகுறித்து துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ள கருத்து அருவருப்பானது - இந்து மதத்தின் குரூரப் புத்தி - பெண்களை இழிவுபடுத்தும் போக்கு இன்று வரை மாற்றம் பெறவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்கிறது.

“மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக் களிப்பில் மிதக்க வேண்டாம். இந்தச் செயலைச் செய்ததற்காக தம்பட்டம் அடித்துக் கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

சனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல. சனிபகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கருவறைக்குள் நுழைந்தால் பெண்களுக்கு எதிரான கற்பழிப்புப் போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்“ என்று துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.

இந்து மதம் என்றாலே பெண்களை உயிருள்ள - மனிதரில்  ஓர் அங்கம் என்று எப்பொழுதுமே ஏற்றுக் கொள்வதில்லை. மற்ற ஆண்களை சார்ந்துதான் எப்பொழுதும் பெண்கள் வாழ வேண்டியவர்கள் என்பதைத் தானே மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது! (அத்தியாயம் 5 - சுலோகம் 148).

கணவன் இறந்தவுடன் தீக்குளித்துச் சாக வேண்டும் என்கிற சதியை இந்து மதம் வலியுறுத்துகிறது. இதுகுறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

“ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பதி வ்ரத்யத்தால் (கற்பு சக்தியால்) அவளைப் பாதிக்காமலேயே இருந்தது - குமாரிலட்டா உமிக்காந்தல் அக்னியில் கருகின போது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யானின் ஸாந்நித் யத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது அனேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்து வைத்துப் பூஜை பண்ணுவதுண்டு” (‘தெய்வத்தின் குரல்’ - இரண்டாம் தொகுதி - ‘உடன்கட்டை ஏறுதல்’ (பக்கம் 967, 968).

இவ்வாறு கூறியுள்ளாரே சங்கராச்சாரியார் - ஒரு சவாலை நாம் விடத் தயார். அக்கிரகாரத்தைச் சேர்ந்த இந்து மதத்திலும் சங்கர மடத்திலும் ஆழ்ந்த அனுதாபமும், வைராக்கியமும் கொண்ட ஒரே ஒரு பெண்ணை  அவர்கள் மொழியில் மிக உறுதியான பதிவிரதையை - தீயில் மூழ்கச் செய்து, உடுத்தியிருந்த உடை கருகாமல் வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

20ஆம் நூற்றாண்டிலும்கூட இப்படியெல்லாம் சொல்லக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பொழுது உயிருடன் இருக்கக்கூடிய காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்லுகிறார்?
“தர்ம சாஸ்திரங்களில் சதியைப்பற்றி (கணவன் இறந்தவுடன் தீக்குளித்துச் சாவும் கொடுமை) எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் நமது சமூகங்களில் சிலவற்றில் இந்தப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்கு நான் கண்டனம் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.”

- இப்படிக் கூறியிருப்பவர் யார் என்றால் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (‘The Week’ 11.7.1987)

பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கூறி கல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலிருந்த ஒரு பெண்ணை கீழே இறங்கச் செய்தவர் பூரி சங்கராச்சாரியார். அதனை எதிர்த்து அவரின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது (17.2.2001) அதன் காரணமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.

விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு (‘தினமணி’ தீபாவளி மலர் - 1997) காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதற்காக காஞ்சி மடத்தின் முன் திராவிடர் கழக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்கள் (9.3.1998).

இப்படி அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்து மதமும், அதன் வழி காட்டித் தலைவர்களான சங்கராச்சாரியார்களும் பெண்களை இழிவுபடுத்துவதையே தம் பிழைப்பாக. ரத்த ஓட்டமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில்தான் துவாரகாமட சங்கராச்சாரியார் சனி பகவான் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் பெண்கள் நுழைந்ததால் அவர்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்று தமது ஊத்தை வாயைத் திறந்து உபதேசித்துள்ளார்.

கோயில் என்பது விபச்சார விடுதி என்று காந்தியார் சொன்னதற்காகத் துள்ளிக் குதித்தவர்கள் சங்கராச்சாரியாரின் இந்தக் கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் குருக்கள் தேவநாதன் என்பவன் கோயிலுக்கு வந்த பெண்களைப் பாலியல் ரீதியாக சிதைத்து இருக்கிறானே - அவனைப் பற்றி எல்லாம் அதே
காஞ்சியில் உள்ள சங்கராச்சாரியார் கருத்துக் கூறியதுண்டா?

தன் எதிரிலேயே பெண்களை சூறையாடிய குருக்கள் பார்ப்பானை மச்சேந்திர நாதனும் பார்த்துக் கொண்டுதானே இருந்திருக்கிறான்.

இவர்களில் கடவுள்களே கற்பழித்தார்கள் என்று புராணங்கள் இருக்கும் பொழுது, ‘கற்பழிப்பு’ என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினை இல்லைதான்.
துவாரகாபீட சங்கராச்சாரியாரின் கூற்றினை எதிர்த்துப் பெண்கள் பொங்கி எழ வேண்டாமா? எழுவார்களா?

எங்கே பார்ப்போம்!






No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...