Tuesday, April 5, 2016

இடஒதுக்கீடு, சமஸ்கிருத வாரம், ‘பாரத் மாதா கி ஜே’ எல்லாவற்றிலும் இரட்டை வேடம்!


எதிர்ப்பால் பின் வாங்கும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!

அதிகாரம் ஆணவப் போதைகளை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடும் ஆர்.எஸ்.எஸின் முரண்பாடுகளையும், அதிகார ஆணவப் போதைகளையும் முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆரியக் கலாச்சாரமான சனாதன பார்ப்பனீயக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காகவே, ஹிந்து மகாசபை என்ற பழைய பார்ப்பனியப் பாதுகாப்பு, வெளிப்படையாகத் தெரிவதால் அந்த மதவெறி அமைப்பின் பக்கம் வர அஞ்சும் அப்பாவி மக்களை ஈர்க்க, ‘தேச சேவை’ என்ற போர்வை போர்த்தப்பட்டு, அதன் முகமூடி அமைப்பாக 1925இல் மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பே ஆர்.எஸ்.எஸ். என்ற ‘ராஷ்டிரிய சுய சேவக் சங் ஆகும்! (R.S.S.)

‘சித்பவன்’ பார்ப்பனர்களுக்கு கூடாரமே ஆர்.எஸ்.எஸ்.
அதன் மூலம் முக்கிய தலைவர்களிலிருந்து அதனிடம் பயிற்சி பெற்று காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே வரை இந்த ‘சித் பவன்’ மகாராஷ்டிர பார்ப்பனரேயாவர்!
சமூகநீதிக்கு  எதிராகக் குரல் கொடுத்து வர்ணப் பாதுகாப்பை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து, தேசியத்தைப் புகுத்த பிள்ளையாரை ஒரு ஆயுதமாக மகாராஷ்டிரத்தில் கொண்டு வந்த உத்தியைக் கையாண்ட பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனரும் சித்பவன் பிரிவு பார்ப்பனரே! இவர் கீதையையும் அதன் வர்ண தர்மங்களையும் போற்றியவர் (வி.டி. சவார்க்கரும் அதே பிரிவுதான்)
தீண்டாமை எதிர்ப்பு என்பதும்கூட ஒரு பாவனைதான்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் ஹிந்துத்துவாவைப் புகுத்திப் பார்ப்பனீய மறுமலர்ச்சிக்கான சமஸ்கிருதத்தை - அதன் கலாச்சார பண்பாடுகளை நாடு தழுவிய அளவில் பரப்புதல் - வர்ண தர்மத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்போது, ஒரு தந்திர உத்தியாக, தீண்டாமையை எதிர்ப்பதைப் போல் காட்டிக்  கொள்வது!
“பேசுநா இரண்டுடையாய் போற்றி,
தந்திரமூர்த்தி போற்றி”
என்று அறிஞர்அண்ணா “ஆரிய மாயை” நூலில் குறிப்பிட்டதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆர்.எஸ்.எஸ்.!
அடிப்படை மூலக் கொள்கையை அடைய அவ்வப்போது உத்திகளையும் தந்திரங்களையும் அஸ்திரங்களாக ஏவி, வியூகங்களை மாற்றி அமைப்பது ‘அவாளுக்கு’ கை வந்த கலையாகும்!
எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு  அனுமதியில்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது; பிறகு மெல்ல 10 ஆண்டுக்கு பின் பெண்களை உள்ளே சேர்த்து, அவர்களது சம உரிமையை மனப்பூர்வமாக ஏற்காமல், ‘அவர்கள் வேலை குடும்பப் பாங்கோடு வீட்டிற்குள்ளே இருப்பது தான் நல்லது’ என்று தேன் தடவிய பூச்சு கொண்ட பேச்சு பேசுகிறது!
அரசியலில் ஈடுபடுவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். எழுதிக் கொடுத்தது என்னாயிற்று?
முதல் முறை ஆர்.எஸ்.எஸ். தடை (1948) செய்யப்பட்டபோது, மத்திய அரசிடம் இவர்கள் கொடுத்த வாக்குறுதியில் அரசியல் அமைப்பு அல்ல ஆர்.எஸ்.எஸ். என்று கூறியதுடன், சட்ட திட்டங்களை இனி வகுத்துக் கொள்வோம் என்பதுதான். (அதுவரை கிடையாது).
சென்னைப் பார்ப்பனர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிதான் இவர்களுக்காக மத்திய உள்துறை அமைச்சருடன் பேசி, எழுதி, தடை நீக்கம் செய்யப் பயன்பட்டவர்!
வெளிப்படையாக நாங்கள்(R.S.S.) அரசியலுக்கு வர மாட்டோம் என்று கூறிக் கொண்டே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2014) வெளிப்படையாக அரசியல் காட்சிகளை அரங்கேற்றியவர்கள் இவர்கள்!
இரண்டு வகையான பேச்சுகளும், நடத்தையும் இவர்களது வாடிக்கைகளில் வழமையாகி விட்டன!
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.
இடஒதுக்கீடு பற்றி பல பல்டிகள்
இதோ ஒரு சில:
பீகாரில் இடஒதுக்கீட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று (ஒழிக்க வேண்டுமென்பதை மறைமுகமாக) கூறி, எழுந்த கடும் எதிர்ப்பும், பா.ஜ.க. பீகாரில் சந்தித்த படு தோல்வியும் பேச்சை மாற்றி கட்டாயம் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே “பிளேட்டை” மாற்றிப் போட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.
‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லும்படி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கூறி, திட்டமிட்டே சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கும், மற்ற பொதுவானவர்களுக்கும் ஒரு இக்கட்டான சங்கடத்தை ஏற்படுத்தி தேசபக்தி சர்டிபிகேட்டை இவர்களிடமிருந்து தான் பெற வேண்டும் என்பது போன்ற ஒரு மாயையை  அதிகார ஆணவ போதை மூலம் அறிவித்து வருகின்றன!
மகாராஷ்டிர முதல்வரின் பாசிச குரல்!
மகாராஷ்டிர முதல் அமைச்சர் (பா.ஜ.க.) தேவேந்திர பட்னவிஸ் (மராத்திய பார்ப்பனர்) ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்த தேசத்தில் வாழ இடமில்லை என்று ஏதோ குடிஉரிமையை இவர்கள் பார்த்து மற்றவர்களுக்கு வழங்கும் பிச்சை போல பேசியுள்ளார்!
ஒரு பொறுப்பான பதவியில் உள்ள முதல் அமைச்சர் இப்படிப் பேசுவது அழகா? நியாயமா? ஏற்புடைத்தா?
எதிர்ப்பான கொந்தளிப்பான  வீச்சைத் தாங்க முடியாத நிலையில், உடனே ஆர்.எஸ்.எஸ். கட்சி டில்லியிலிருந்து அப்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மறுப்புத் தெரிவிக்கிறது!
சூழ்ச்சிப் படலம்!
ஏன் இரட்டை குரல்? எதற்காக இந்த இரட்டை வேடம்?
நோட்டம்(Feelers) விட்டுப் பார்க்கும் பார்ப்பனீயத் தந்திர முறைகளில் ஒன்று இது!
சமஸ்கிருத வாரம் கொண்டாட சுற்றறிக்கை விடுவது, பிறகு எதிர்ப்புப்  பலமாக வந்தவுடன் பின் வாங்குவது - இதெல்லாம் மக்கள் விழித்துள்ளனரா? என்று பார்க்கும் சூழ்ச்சிப் படல அரங்கேற்றமே!
இந்தப் பாசிசம் ஒரு போதும் பலிக்காது! ராம் ஜெத்மலானி போன்ற பிரபல வழக்குரைஞர்  பா.ஜ.க. தலைவர்களில் முன்பு ஒருவராக மதிக்கப்பட்டவர், ‘இப்போது நெருக்கடிகால சூழ்நிலை நிலவுகிறது’ என்று நேற்று தஞ்சையில் கூறியிருப்பது எதனைக் காட்டுகிறது?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாரத மாதாவின் கையில் தேசியக் கொடியா உள்ளது? மாறாக, காவிக் கொடி அல்லவா உள்ளது? இதன் நோக்கம் புரிகிறதா?
வந்தே மாதரம் பாடல்
‘வந்தே மாதரம்‘ பாடலேகூட இஸ்லாமிய சிறுபான்மை யினரைக் கொச்சைப்படுத்தும் தன்மையது என்பது எத்துணைப் பேருக்குத் தெரியும்?
1938இல் ஆச்சாரியார் (ராஜாஜி) முதலமைச்சராக இருந்தபோது சென்னை ராஜதானியில் - சட்டமன்றம் துவங்குமுன் வந்தே மாதரம் பாட்டு பாடக் கட்டளை இட்டு, பின்பு அது திரும்பப் பெற்ற பழைய வரலாறே இதன் நோக்கத்தை விளக்குவதாகும்.

இந்த இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
4.4.2016  



.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...