Friday, March 4, 2016

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வகையறாக்கள் “செலக்டிவ் அம்னீஷியா”

 - ஊசி மிளகாய்

மக்கள் மறதியே தமது பொது வாழ்வின் பொய்யுரைகளுக்கு அடிக்கட்டுமானம் என்று கருதி ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் அவரது ‘ஆத்மார்த்த’ சீடகோடிகளாகி அரசியல் பதவிகளை அனுபவிப்பவர்களான பா.ஜ.க.வுக்கும், திடீர் தேச பக்தி பீறிட்டுக் கிளம்பி பெரும் பிரவாகமாய் ஓடத் தொடங்கி விட்டது!
எங்கெங்கு காணினும் தேச பக்தி! மத்திய பல்கலைக் கழகங்களில் எத்தனை அடி உயரத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்ற தாக்கீது!
ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி, டி. இராஜா முதலிய பல்வேறு கட்சியினரையும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர், மாணவர் கன்னையாகுமார் போன்ற பலர்மீதும் தேசத் துரோக (Anti - National) குற்றச்சாட்டு - 124A  செக்ஷனின் பிரயோகம்!
இவர்களது  பூர்வ சரித்திரம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது என்ற போலி நினைப்பு.
‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்று பாட்டிகள் கூறும் கிராமிய அனுபவ மொழி!
இந்தியாவின் தேசியக் கொடியாக  மூவர்ணக் கொடியை ஏற்க மறுத்தவர்கள் - மறுப்பவர்கள் இன்றும் அவர்கள் தலைமையகத்தில் (நாகபுரி) காவிக் கொடி, பாரத் மாதா கொடியை ஏற்றும் நபர்கள்.
ஹிட்லரின் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் இவர்தம் முந்தைய அடையாளம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ ஏடு (ஆங்கிலம்) ‘ஆர்கனைசர்’ அதன் மூன்றாவது இதழில் (17.7.1948ல்) “இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாதென்றும், காவிக் கொடியைத்தான் “தேசியக் கொடியாக” அறிவிக்க வேண்டும்“ என்றும் எழுதியது!
அது மட்டுமா?
“இந்தியாவை ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதையும் ஏற்க முடியாது. இந்தியா ஒரு இந்துத்துவா நாடு. செங்கோட் டையில் காவிக் கொடியைத் தான் பறக்க விட வேண்டும்’’ என்று ஆகஸ்டு 14, 1947 ஆர்கனைசர் ஏடு எழுதியது - மறந்து போய் விட்டதா? அல்லது மறைக்கப்படுகிறதா?
“இந்திய மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்த வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள் ளது. ஆனால் ஹிந்து மக்கள் இதற்கு ஒரு போதும் மரியாதை தர மாட்டார்கள். மூன்று வர்ணம் என்று கூறுவதே தீங்கானது. மூன்று வர்ணத்தை முன்னிறுத்துவது மோசமான மனநிலையை மக்களிடம் உருவாக்கும். மேலும் இதனால் நாட்டிற்கு கேடு உண்டாகும்“ என்று எழுதியது.
இது மட்டுமா? அவர்களது தத்துவக் கர்த்தா குருநாதர் கோல்வால்கர், அவரது ‘ஞானகங்கை’ (Bunch of the thoughts) புத்தகத்தில் என்ன கூறுகிறார்?
“நம்முடைய தலைவர்கள் நாட்டிற்கு புதிய கொடியை உருவாக்கியுள்ளார்கள். ஏன் அவ்வாறு செய்துள்ளார்கள்? நம்முடைய நாட்டிற்கு சொந்தமாகக் கொடி இல்லையா?
கடந்த ஆயிரக்கணக்ககான ஆண்டுகளாக நமது நாடு தேசிய சின்னம் இல்லாமலா இருந்தது? சந்தேகமில்லாமல் இவற்றை நாம் பெற்றிருந்தோம். இப்படி இருக்கையில் ஏன் இந்த முட்டாள்தனமான வேலையைச் செய்கின்றனர்?”
இப்போது இவாள் செய்வது...?
முன் இவர்கள் பதவி ஏற்றபோதுகூட இந்திய தேசியக் கொடியில் நடுவில் உள்ள ‘அசோக சக்கரத்தை’ அப்புறப்படுத்த வேண்டுமென்று அத்வானி போன்ற தலைவர்களேகூட கூற வில்லையா?
வசதியாக இவையெல்லாம் இப்போது “செலக்டிவ் அம்னீஷியா” நோய்க்கு ஆளாகி விட்டதா ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அமைப்புக்கு?
பாபாசாகேப் அம்பேத்கரை நாக்கில் நரம்பின்றி, வாக்கில் வாய்மையின்றி வசைமாரி பொழிந்தவர்கள் இன்று அம்பேத்கர் முகமூடியை அல்லவா அணிந்து அவனியில் பவனி வந்து அவரையும் அணைத்தே அழிக்க முயலுகின்றனர்!
அம்பேத்கரே சொன்னாராம் காவிக் கொடியே தேவை என்று! இப்படி ஒரு கொயெபெல்ஸை மிஞ்சும் புருடா இவர்களது ஏட்டில் பரப்பப்பட்டு வருகிறது.
அட திடீர் தேசபக்த திலகங்களே, கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் அய்யா!


.

 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...