Tuesday, December 15, 2015

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை:
சட்ட விரோதமாக கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி! தமிழக முதல் அமைச்சர் எதிர் நடவடிக்கை எடுக்காதது- ஏன்?
குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப்  பூட்டுவதில் பயனில்லை - அவசரம்- அவசியம்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2015/dec/05/a15.jpg

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
வேறு எந்த அணையும் இத்தனை முறை ஆய்வுப்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு வல்லுநர்களைக் கொண்ட 13 ஆய்வுகள் இதுவரை முல்லைப் பெரியாறு ஆணைமீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தனை ஆய்வுகளும் அணை மிக உறுதியாக உள்ளது என்று ஒருமித்த முடிவைக் கூறியுள்ளன.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இவை எல்லாவற்றிற்குப் பிறகு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் (5 நீதிபதிகள் கொண்ட அமர்வு) அணையில் 142 அடி உயரத்திற்கு நீர்த் தேக்கப்படலாம் என்பதை தெளி வாக  திட்டவட்டமாக  தீர்ப்பாகவே கூறி விட்டது.
இதற்குப் பிறகும் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோல, கேரள மாநில அரசு (அங்கு எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் இதே நிலைதான்) முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக உள்ளது. அணை உடைந்தால் இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கிப் போய் விடும் என்று ஒப்பாரி வைப்பது - எந்த வகையில் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் உகந்தது?
142 அடி நீர் உயர்ந்தும் அணைக்கு ஆபத்து இல்லை
ஒரு நெருக்கடி இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அண்மையில் பெய்த கடு மழையினால் முல்லைப் பெரியாறு அணை 142 அடி உயர நீரை எட்டிவிட்டது.
142 அடி நீரை எட்டினாலும் அணைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதை இயற்கையே நிரூபித்து விட்டது. 142 அடி நீரை தேக்கினால் அணைக்கு ஆபத்து, அணை உடையும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த கேரள அரசின் பொய்யழுகை - மாய்மாலம் - இதன் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது.
குற்ற உணர்வின் வெளிப்பாடு!
இந்த நிலையில் உளவியல் ரீதியாகக் குற்ற உணர்ச்சியோடுதான் அமைச்சரவையைக் கூட்டி, அதன் அடிப்படையில் பிரதமரையும் சந்தித்து, புதிய அணை ஒன்றைக் கட்ட ஆதரவு அளிக்கு மாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி.
செய்தியாளர்களிடம் கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டி என்ன பேசியுள்ளார்? முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
999 ஆண்டுகள் இந்த அணை உடையாமல் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?
142 அடி வரை அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம்  என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியுமா? (இதைவிட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை வேறு எந்த வகையில் கேலி செய்ய முடியுமோ!) என்றெல்லாம் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்; அதனை அடுத்து, பிரதமரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமேதாவித்தனமோ!
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடுமை யான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைச் சுட்டிக்காட்டி, அந்த நிலை கேரளாவிலும் நிகழ வேண்டுமா என்று வெகு, தந்திரமாக அதிமேதா வித்தனமாக கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த அணையும் உடைந்து விட வில்லை. தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் ஏரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தவறினை இத்துடன் இணைக்கக் கூடாது. சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும், கேரள அரசு இவ்வளவுத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டின் இந்த உயிர் நாடிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? தமிழ்நாட்டின்  நிலையை முன் வைக்காதது ஏன்?
தி.மு.க. தலைவர் உட்பட பல கட்சித்தலைவர் களும் இப்பிரச்சினை குறித்து உரத்த முறையிலே குரல் எழுப்பியும்கூட, தமிழ்நாடு அரசு நெடுந் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
கேரள முதல் அமைச்சர் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளார்; மத்திய அரசு இதில் எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிவிக்கப் பட வேண்டும். கேரள அரசை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொன்னாலும்கூட அதனை மதிக்கக் கிஞ்சிற்றும் தயாராக இல்லை என்பது யதார்த்தம்!

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகுமா மத்திய அரசு?
ஜஸ்டிஸ் கே.டி. தாமஸ் உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்தபோது - கேரள அரசின் அடாவடிப் போக்கால், முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதையும் பிரதமர் நினைத்து  பார்க்க வேண்டும்.  (இவ்வளவுக்கும் - அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரே!)
இதற்கு மேலும் அரசியல் காரணத்துக்காகவோ, வேறு காரணத்துக்காகவோ மத்திய அரசு வேறு மாதிரி நடந்து கொள்ளுமானால், அது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு இரையாக வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டி வரும்; அந்த விஷப் பரீட்சையை மத்திய அரசும், பிரதமரும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.  யாருக்கோ வந்த விருந்தா?
பிரமதரின் அலுவலக கதவைத் தட்டி திறக்கச் செய்து, கேரள அரசு சட்ட விரோத செயலுக்காக அழுத்தம் கொடுக்கும் நிலையில், சட்டத்தையும், நியாயத்தையும், நீதிமன்ற தீர்ப்பினையும் வலு வாகத் தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு யாருக்கோ வந்த விருந்து என்பதுபோல நடந்து கொள்வது - மிகப் பெரிய மக்கள் போராட்டத்துக்கு  வழி வகுத்து கொடுத்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து மக்கள் நலனுக்கு விரோதமாகவே தன் அணுகுமுறைகளை  வைத்துக் கொண்டி ருக்கும் தமிழ்நாடு அரசு - மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள தன்மையில், இந்தப் பிரச்சினையில் காட்டும்  செயலின்மை மூலம் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தில் மூழ்க நேரிடும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் சுட்டிக் காட்ட வேண்டியது எங்களின் கடமையாகும். குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்? அவசரம் -  அவசியம்!
தமிழ்நாடு அரசு எழுந்து செயல்படட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.12.2015

இவற்றை இழக்கப் போகிறோமா?
முல்லைப் பெரியாறு
இந்த அணையின் உயரம்- 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம்  2,08,000 ஏக்கர்
தமிழகத்தில் 15 லட்சம் விவசாயிகள் பாசனத் திற்கும்,  60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
பயன்பெறும் மாவட்டங்கள் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், போன்ற மாவட் டங்கள் முழுமையாக முல்லைப்பெரியாறு அணையால் பயன் பெறுகின்றன.  விருது நகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் சில பகுதிகள் முல்லை பெரியாறு அணையால் பயன்பெறுகின்றன.   2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 ஆவது முறையாக 142 அடி உயரம் தண்ணீர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.   142-அடி உயரம் தேக் கினால் அணை உடையும் அபாயம் என்ற கேரள அரசின் அழுகை பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...