Friday, October 9, 2015

உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; இதயம் ஓய்வெடுக்க முடியாது! இதயம் போன்றதுதான் திராவிடர் கழகம்!


உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உடுமலை, அக். 8- உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், இதயம் ஓய்வு எடுத்தால், உயிர் போய்விடும். இதயம் போன்றது தான் திராவிடர் கழகம். நாங்கள் ஓய்வெடுக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
30.9.2015 அன்று உடுமலையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
முதலாவது அரசியல் சட்டத் திருத்தம்
இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியாவில் உண்டானது என்று சொன்னால், அப்பொழுது நேரு பிரதமராக இருந்தார்; அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபொழுது, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் செய்த மாபெரும் கிளர்ச்சி - கட்சி வேறுபாடின்றி மக்கள் அவரோடு இருந்ததனால்தான், இன்றைக்கு வகுப்புவாரி உரிமை சட்டம்.
நேரு சொன்னார், ஏன் இந்த அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்று கேட்டால், இது இந்தியாவில், தமிழ் நாட்டில் மட்டும் நடந்தது என்று மட்டும் நினைக்காதீர்கள்; அதனுடைய எதிரொலி மற்ற இடங்களிலும் கேட்கும். அதனால்தான் அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்றார்.
முதல் அரசியல் சட்டத்தை பெரியார் திருத்தினார். பெரியாருக்கு எத்தனை எம்.பி. இருந்தார்கள்? எப்படி அரசியல் சட்டத்தைத் திருத்த முடிந்தது? பெரியார் இமயமலை; பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டனர். அதெல்லாம் இருக்காது; ஊருக்கு நான்கு வயதானவர்கள் இருப்பார்கள், அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.
ஆனால், பெரியார் காலத்தில் இருந்த இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 41 சதவிகிதம் (25+16) - காமராசர் ஆட்சிக் காலத்தில். பிறகு தி.மு.க. ஆட்சி காலத்தில் 49 சதவிகிதம்.
50 சதவிகிதத்திற்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என்று ஒரு பூச்சாண்டி காட்டினார்கள். அப்பொழுது முதலமைச்சர் அண்ணா  அவர்கள் மறைந்து, கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சட்டநாதன் ஆணையத்தைச் சேர்ந்தோர் திருச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்தனர். நீங்கள் முதலில் பரிந்துரை செய்யுங்கள், 49 சதவிகிதம் கொடுக்கலாமே என்றார் பெரியார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழ்தானே!
அந்தக் கமிட்டியில் இருப்போர், மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று சொன்னார்கள்.
ஏன்? என்று பெரியார் கேட்டார்.
அவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று சொன்னார்கள்.
அப்படி ஆட்சேபித்தால், நான் சொல்கின்ற பதிலைச் சொல்லுங்கள் என்று பெரியார் ஆரம்பித்தார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழேதான் என்று சொன்னார்.
இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்கிறது.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறதா? இல்லையா என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் 49 சதவிகிதம்; பெரியாருக்குப் பிறகு இன்றைக்கு 69 சதவிகிதம்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அத்துணை பேரும் அனுபவிக்கிறார்கள் கட்சி வேறுபாடின்றி. நாளைக்கு இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகள் கல்லூரிக் குச் செல்ல முடியுமா? இதனை ஒழிப்பதற்குத்தானே இன்றைக்கு நாடி பிடித்துப் பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லியிருக்கிறாரே!
வடக்கே லாலு பிரசாத், நிதிஷ்குமார் அவர்கள் உடனே என்ன சொன்னார்கள், இரண்டாவது மண்டல் புரட்சி வரும். இட ஒதுக்கீட்டில் நீங்கள் கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்; இட ஒதுக்கீட்டை உங்களால் ஒழிக்க முடியுமா? என்று கேட்டனர்.
உடனே அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது; ஆர்.எஸ். எஸ். பாம்பு தலையை உள்ளே இழுத்துக் கொண்டது.
இன்றைக்கு வெளிவந்த இந்து பத்திரிகையில் வெளி வந்த செய்தியைச் சொல்கிறேன்.
பிகாரில் நடைபெறுவது
தேர்தல் போராட்டமல்ல!
பிகாரில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Lalu Prasad - Modi as police file FIR
Lalu Prasad’s remarks at a public meeting at Terasia in Raghopur of Vaishali district on Sunday last. He had said the Yadavs should stand “united” as the Assembly polls marked a “battle between the backward and forward castes.”
அங்கே நடைபெறுகின்ற போராட்டம் தேர்தல் போராட்டமல்ல; பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், முன்னே றிய ஜாதிக்காரர்களுக்கும்தான். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், புளியேப்பக்காரனுக்கும், பசியேப்பக்கார னுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது. நீண்ட காலமாகப் பட்டினி இருக்கிறான் பாருங்கள் அவனுக்கும், செரிமானம் ஆகவில்லை என்று  ஏப்பம் விடுகிறான் பாருங்கள் அவனுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது.
அதைத்தான் லாலுபிரசாத் சொன்னார்.
Mr. Lalu Prasad also criticised the RSS, the BJP’s ideological mentor. “The RSS is an organisation of Brahmins and Mr. Modi should confer the Bharat Ratna on RSS chief Mohan Bhagwat for suggesting an end to reservation.”
யார் யாருக்கோ பாரத ரத்னா விருது தருவதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார் மோடி. மோகன் பகவத் என்கிற ஆர். எஸ்.எஸ். தலைவர் இருக்கிறார்; அவர்தான் இட ஒதுக் கீட்டை ஒழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற் காக அவருக்கு பாரத ரத்னா விருதை நீங்கள் கொடுத்து விடலாம் என்று கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.
இது பிகாரின் நிலை. குஜராத்தில் என்ன நிலை என்றால், அன்றைக்கு எந்தப் பட்டேல் ஜாதிக்காரர்கள் இட ஒதுக்கீடே வேண்டாம்; அதனை ஒழித்தே தீருவோம் என்று குஜராத்தில் சொன்னார்களோ, இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்; எதற்காக கேட்கிறார்கள்; அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா? இல்லையா? என்பதெல்லாம் பிறகு.
இட ஒதுக்கீடே வேண்டாம் என்று சொன்னவன், இன்றைக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறான். காரணம் என்ன? இன்றைக்கு சமூகநீதியால் எல்லோரும் முன்னேறி வருகிறார்கள்; நாம் பின்தங்கி விட்டோமே என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?
இந்த இட ஒதுக்கீடு போராட்டம் வந்திருக்கிறது என்றால், அந்தச் செய்தியும் இந்து பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது, அதனைப் படிக்கிறேன் கேளுங்கள்:
On Thursday, Patel women forced the BJP to cancel meetings or social functions at half a dozen places across the State.
In Naroda, Ahmedabad, party MLA Nirmala Waghvani fled the venue of a function in her constituency when more than 100 women of the Patel community stormed the venue with plates and rolling pins or spoons.
குஜராத் மாநிலத்தில் ஒரு ஆறு, ஏழு இடத்தில் பா.ஜ.க.வினர் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், அந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் காரணமாக நிறுத்திக் கொண்டார்கள். தட்டு, கரண்டி இவையெல்லாவற் றையும் எடுத்துக்கொண்டு பி.ஜே.பி. பெண் சட்டமன்ற உறுப்பினர் ஓடினார் என்று எழுதியிருக்கிறார்கள்.
பிகார், குஜராத், ராஜஸ்தான் இவை வடக்கே உள்ள மாநிலங்கள்.
இங்கே தெற்கே உள்ள கேரளாவில் என்ன நிலை என்பதைப் பாருங்கள். பெரியாருடைய சமூகநீதியை யாராலும் அழிக்க முடியாது. திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பவர்கள் கண் திறக்கவேண்டும்; அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி!
CPM to corner SNDP on quota - என்ற தலைப்பில் இன்றைய ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளிதழில் வந்துள்ள செய்தியைப் படிக்கின்றேன் கேளுங்கள்!
Backwards and Dalits have now seen the true face of the RSS, thanks to Bhagwat. It is also a major setback for the SNDP which is desperately trying to push the community to the Sangh Parivar camp said CPM state secretary Kodiyeri Balakrishnan.
கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்றால், இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது; நாங்கள் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். அதுமட்டுமல்ல,
நாராயண குரு தரும பரிபாலனத்தை எப்படியாவது இழுத்து அதனை ஆர்.எஸ்.எஸ். ஆக்கவேண்டும்; இந்து மதம் என்று ஆக்கவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே அதைக் கேட்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்; இதற்காகவே நாங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறோம். அக் டோபர் 2 ஆம் தேதியிலிருந்து ஒரு விழிப்புணர்வு பிரச்சா ரத்தை கேரளா முழுவதும் செய்யவிருக்கிறோம் என்று சி.பி.எம். கொடியேறி பாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு சட்டத்தை 9 ஆவது அட்ட வணை பாதுகாப்பிற்கு வருகிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் இட ஒதுக்கீட்டை எவ்வளவு சுலபமாக ஆக்கியி ருக்கிறோம். நீங்கள் எல்லோரும் சுலபமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
இன்றைக் குத் தமிழ்நாட்டில் எவ்வளவு சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக் கிறது என்று நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்டால், இன்றைய இளைஞர்கள் தெரியாது என்று பதிலளிக்கிறார்களே!
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம்
எப்போது தெரியும்?
இவ்வளவு பேர் நாம் உட்கார்ந்துகொண்டிருக்கி றோமே, மூச்சுக் காற்று விட்டால்தானே நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம். மூச்சு விடுதல் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிராண வாயு உள்ளே செல்கிறது; கரியமிலவாயு வெளியே வருகிறது. மூச்சு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்போது சோதித்துப் பார்க்கிறார்கள். மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் எப்போது தெரியும்.
இதயம் போன்றது திராவிடர் கழகம்
உடலில் மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், இதயம் ஓய்வு எடுத்தால், உயிர் போய்விடும். இதயம் போன்றதுதான் திராவிடர் கழகம். மற்ற வர்கள், யார் எப்படி இருந்தாலும், நாங்கள் ஓய்வெடுக்க முடியாது; எங்கள் உடல்நிலையைப்பற்றி கவலைப்படுவ தில்லை.
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் மூச்சுத் திணறும் போதுதான் தெரியும். மூக்கில் குழாயை வைத்து ஆக்சிஜன் செலுத்தும்போதுதான் தெரியும்.
இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எப்பொழுது சட்ட வடிவம் கொடுத்தார்கள் தெரியுமா? யாருடைய ஆட்சிக் காலத்தில் தெரியுமா? தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், சட்டமன்றத்திலேயே தான் ஒரு பாப்பாத்தி என்று சொன்ன அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது.
அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்; காங்கிரஸ் தலைமையில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது; நரசிம்மராவ் யார் தெரியுமா? அவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள். இவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர் ஆவார்.
குடியரசுத் தலைவர் பார்ப்பனர்; பிரதமர் பார்ப்பனர்; முதலமைச்சர் பார்ப்பனர் என்றாலும் பெரியார் வென்றார். சமூகநீதியை சாய்க்க முடியவில்லை. அந்த சட்டத்தை நிறைவேற்றியதால், அந்த அம்மையாரைப் பாராட்டினோம்.  ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்று பட்டத்தைக் கொடுத் தோம்.
அதில் ஒன்றும் தவறில்லையே! அதனால்தானே தமிழ்நாட்டில் இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.
‘‘மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர்’’ கலைஞர்
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில்தானே, இந்தியாவி லேயே தமிழகத்தில் மகளிருக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர்தானே! திராவிடர் கழகம்தான் அவருக்கு ‘‘மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர்’’ என்று பட்டம் கொடுத்தது.
ஆகவே, இந்த இட ஒதுக்கீடு சட்டத்தில் யாரும் கை வைக்க முடியாது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தினர் தான் இட ஒதுக்கீடு கோரி வருகிறார்கள் என்பதில்லை. கேரளாவில் உள்ள பார்ப்பனர்கள், கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து நாங்களும் உங்களோடு வருகிறோம், எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், நான் சென்னை பெரியார் திடல் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது உங்களைப் பார்ப்பதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகிறார் என்றார்கள். வரச் சொல்லுங்கள் என்றேன்.
அவர் என்னைச் சந்தித்து, ‘‘நான் பிராமணர் சங்கத்தின் சார்பாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்’’ என்றார்.
மிகவும் மகிழ்ச்சி;  என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன்.
நாங்கள் ஏழு சதவிகிதம் இருக்கிறோம்; எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக் கிறேன் என்றார்.
நான் உடனே, ஓ! பெருகிவிட்டீர்களா நீங்கள். 3 சத விகிதத்திலிருந்து ஏழு சதவிகிதமாக. பரவாயில்லை, எத்தனை சதவிகிதம் என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். சரி, அதற்காக என்னிடம் வந்திருக்கிறீர்களே? என்றேன்.
நாங்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்தோம். அவர் இட ஒதுக்கீட்டை கொடுத்துவிடலாம், அதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைப் பார்த்து, அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள் என்றார். அதற்காகத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார்.
அப்படியா! நண்பர் சேகர் அவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த இட ஒதுக்கீடு 50 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? மக்கள் சதவிகிதத்தில் 2 சதவிகிதமாக இருந்த உங்களுக்கு, 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டது நீங்கள்தானே! இட ஒதுக்கீடு செல்லாது என்று நீங்கள்தானே சொன்னீர்கள் என்றேன்.
உடனே அவர், எனக்குத் தெரியாதுங்க, அந்த விவரம் எல்லாம் என்றார்.
இன்றைக்குப் பார்ப்பனர் உள்பட இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் வகுப்புவாரி உரிமையில், அனைவருக்கும் அனைத்தும்; எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில் தவறில்லை. அடுத்தவர்களின் பங்கை சாப்பிடுவது என்பதுதானே தவறு.
இன்றைக்குப் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் இருக்கை ரிசர்வ் செய்யப்படுகிறது. யாராவது ஜன்னலில் ஏறி இடம் பிடிக்கிறார்களா? ரயிலில் செல்லும்பொழுதுகூட ரிசர்வ் செய்த இடத்திற்கு யாராவது சண்டை போடுகிறார் களா? அன் ரிசர்வ் கம்ப்பார்மெண்ட்டில்தான் இடம் பிடிப் பதற்குப் போட்டி போடுகிறார்கள்.
இன்றைக்கு இட ஒதுக்கீடு, சமூகநீதியை எந்த ஆர். எஸ்.எசோ, பி.ஜே.பி.யோ, மற்றவர்களோ நினைத்தாலும் ஒழிக்க முடியாது. இன்றைக்கு அவர்களே வந்து எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற அளவிற்கு பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்! இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதற்கு பகிரங்கமான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆகவேதான், பெரியார் தேவைப்படுகிறார்.
ஈழத்தில் எங்களுடைய சகோதரிகளான தமிழச்சிகள் 90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர்களுக்கு கை, கால் போனது! ராஜபக்சே என்கிற ஒரு அயோக்கியன், இனப்படுகொலை செய்த ஒரு கொலை காரன். அய்.நா. சபையில் பான் கி மூன் குழு அமைத்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே; அந்தப் போர்க்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குழுவில் இருந்த நவநீதம் அம்மையார் அவர்கள் விசாரிக்கச் சென்றார், அவரை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தினார்கள்.
தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே!
மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க. ஏன் வெளியேறி யது?  ஈழப் பிரச்சினையால்தானே, வெளியேறினார்கள்.
இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதனை எல்லோரும் பாராட்டி, வரவேற் றோம். அமெரிக்கா சொல்கிறது, உள்ளூர் விசாரணையே போதும்; சர்வதேச விசாரணை வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வருகிறது.
இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, இலங்கைக்கு ஆதர வாக அமெரிக்கா செயல்படுகிறது. ஆனால், நாம் தொப்புள் கொடி உறவு அல்லவா! இந்தியாவின் நிலைப்பாடு அப் படியா! எங்களுக்கு நீங்கள் மத்திய அரசு அல்லவா! நீங்கள் என்ன வேறொரு அரசா? வெளிநாட்டு அரசா? எங்கள் மக்கள் வாக்களித்ததினால்தானே மோடி இன்றைக்குப் பிரதமர்.
அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது அமெரிக்கா; வழிமொழிந்தது இலங்கை. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, இந்திய அரசு, இலங்கை அரசினுடைய நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கும் என்று சொல்கிறார்கள்.
மோடி வந்தால் மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்களே, எதில் மாற்றம் வந்தது? தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே! இதனைக் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களுக்கு மீன் பிடித் தொழில் தானே வாழ்வாதாரம். அவர்களை சிறைப் பிடித்துச் செல் கிறார்களே! தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார், பிரதமர் மோடிக்கு! இலங்கையிலிருந்து ரணில் இந்தியாவிற்கு வரும்பொழுது, கைது செய்தவர்களை வெளியில் விடுவார்கள்; அவர் சென்றதும் மீண்டும் மீனவர்களை சிறை பிடிப்பார்கள்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் என்ன நிலைமை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று எப்போதோ உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது! ஆனால், அதை செயல்படுத்தவில்லை என்று மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டிய அளவிற்கு வந்திருக் கிறதே!
திராவிடர் கழகம் கலங்கரை விளக்கம் போன்றது!
ஆகவே, நண்பர்களே நினைத்துப் பாருங்கள், இந்த இயக்கம் உங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம். எங்களுக்கு என்று எதுவும் தேவையில்லை.
எங்களுக்கு மாலை போட்டாலும், கல்லைப் போட்டாலும் - நீங்கள் எங்களைக் கண்டித்தாலும், வரவேற்றாலும், நீங்கள் எங்களைத் திட்டினாலும், வாழ்த்தினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த சமுதாயத்திற்கு நாங்கள் என்றென்றைக்கும் உயிர் மூச்சு இருக்கின்ற வரையில், தொண்டர்களாக இருந்து,
வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவர்களாக இருந்து, காவலர்களாக இருக்கக்கூடியவர்களாக இருந்து இந்தப் பணிகளைச் செய்வோம்.
எனவேதான், தமிழ்நாட்டில் தந்தை பெரியாருடைய பெரும் பணி என்பது இன்னமும் தேவைப்படுகிறது. எதிரிகள்  மறைந்தும், ஒளிந்தும் சில நேரங்களில் வெளியே வந்தும், சில நேரங்களில் உள்ளே சென்றும் இருக்கிறார்கள்.
அதனை அடையாளம் காட்டக்கூடிய ஒரு சரியான இயக்கம் - கலங்கரை விளக்கம்போன்றது இந்த இயக்கம். இதனுடைய வெளிச்சத்தில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும்; இல்லையென்றால், பாறைகளின்மீது கப்பல்கள் மோதவேண்டியது இருக்கும்.
ஆகவேதான், இந்த இயக்கம் அதனுடைய பணிகளை இடையறாது செய்துகொண்டிருக்கிறது. கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும்
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்’’ என்று சொல்லக்கூடிய இயக்கம் என்று சொல்லி, இந்த மழையையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வந்தீர்கள். எதிர்ப்பிலே இயற்கையையும் வெல்லக்கூடிய ஆற்றல் பகுத்தறிவாளர்களாகிய எங்களுக்கு உண்டு என்று காட்டக்கூடிய வண்ணம், எங்களோடு போட்டி போட்டு மழை தோற்றது - நாங்கள் வென்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!!
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங் கள்! நீங்கள் வந்தால், அதைக் கொடுப்போம், இதைக் கொடுப் போம் என்று சொல்லமாட்டோம். லட்சியத்தால் உங்களுக்கு மானத்தைக் கொடுப்போம், உங்களுக்கு அறிவை கொடுப் போம், உங்களுக்குத் தெளிவைக் கொடுப்போம் - இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்,
வாருங்கள் என்று கேட்டு, குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த நம் முடைய உடுமலை இயக்கத் தோழர்கள், அவர்களுக்கு ஆதரவு காட்டிய நண்பர்கள் எல்லோருக்கும் மனமுவந்த பாராட்டுத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...