Tuesday, October 20, 2015

பா.ஜ.க.விற்கு முதலாளி யார்? ஆர்.எஸ்.எஸ்.தானே!


பா.ஜ.க.விற்கு முதலாளி யார்? ஆர்.எஸ்.எஸ்.தானே!
மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.
நாமக்கல்லில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

நாமக்கல், அக். 19- பா.ஜ.க.விற்கு முதலாளி யார்? ஆர்.எஸ்.எஸ்.தானே! மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
3.10.2015 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற தந்தை பெரி யார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  அவரது உரையின் நேற்றை யத் தொடர்ச்சி வருமாறு:-
மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
பா.ஜ.க.விற்கு அரசியல் ரீதியான முதலாளி யார் என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெருமை என்னவென்றால், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக் கிறது என்றால், அது ஆர்.எஸ்.எஸ். என்பது யாரும் மறுக்கப் பட முடியாத உண்மையாகும்.
காந்தியாரைக் கொன்ற கோட்சே பயிற்சி எடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, காமராசரை உயிரோடு கொல்ல முயன்ற அமைப்பு. இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா?
இன்றைக்கு அவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் மேலிருந்த கோபத்தால், மாற்றி வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு வந்த மாற்றம் என்னவென்றால், ஏமாற்றம்தான் மிச்சம்.
சோனியா காந்தி பிகாரில் என்ன பேசினார்கள் தெரியுமா, எங்களுக்குச் சுயமரியாதை முக்கியம் என்று. யாராக இருந்தாலும், கடைசியில் தந்தை பெரியாரின் கொள்கைக்கு வந்தாகவேண்டும்.
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன், தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெறுகிறது. அப்படி போராடிப் போராடி, எல்லாக் கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? கருப்புச் சட்டைதான் அதற்கு மருந்து. நெருக்கடி வந்தால், அதற்குத் தீர்வு கருப்புச்சட்டைதான். அதிலேயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அய்யப்பன் கருப்புச் சட்டை இருக்கிறது; அது சீசன் சட்டை. 
அய்யோ அப்பா! அய்யோ அப்பா என்கிறார்கள். ஹரிகர புத்திரா என்கிறார்கள். அதனை நாங்கள்தான் விளக்கி னோம், ஹரி என்றால் விஷ்ணு; ஹரன் என்றால், சிவன். விஷ்ணுவிற்கும் - சிவனுக்கும் எப்படி பிள்ளை பிறக்க முடியும்? அதனை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆம் பளைக்கும், ஆம்பளைக்கும் பிள்ளை பிறக்குமா? இதைத் தானே ஊர் முழுவதும் கத்திக்கொண்டு சுற்றி வருகிறார்கள். ஹரிஹர புத்திரா! ஹரிஹர புத்திரா! என்று. இதனை விளக்கிச் சொன்னால், உங்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும்.
இன்றைக்குக் குஜராத் நிலைமை என்ன? இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் குஜராத்தில் உள்ள பட்டேல் சமுதாயத்தினர். ஆனால், இன்றைக்கு அந்தச் சமுதாயத் தைச் சேர்ந்த ஹர்தீக் பட்டேல் என்கிற இளைஞனின் தலைமையில் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
பட்டினியாக இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்
இட ஒதுக்கீட்டை, வகுப்புவாரி உரிமைப்படி எல் லோருக்கும் கொடுப்பதில், பெரியாருக்கு ஒன்றும் ஆட் சேபணையில்லை. ஆனால், இருப்பது கொஞ்சம்தான். சாப்பிடவேண்டியவர்கள் நிறைய பேர். டிமாண்ட் அன்ட் சப்ளை என்று சொல்கிறார்களே, பொருளாதாரத்தில் - அதுபோன்று, சப்ளை குறைவாக இருக்கிறது; டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. 
அப்படி இருக்கையில், அதனை யாருக்குக் கொடுப்பது? நீண்ட நாள்களாக சாப்பிட்டு சாப்பிட்டு பெருத்துப் போயிருப்பவர்களுக்குக் கொடுப்பதா? சாப்பாடு என்றாலே என்னவென்று நீண்ட நாள்களாகப் பார்க்காமல் பல நாள்கள் பட்டினியாக இருக்கிறார்களே அவர்களுக்குக் கொடுப்பதா? என்கிற நிலை வரும்பொழுது, பட்டினியாக இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்வதுதான் சமூகநீதி, இட ஒதுக்கீடு. இதைச் சொன்னதுதான் நீதிக்கட்சி; இதைத்தான் சொன்னது திராவிடர் கழகம். பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வந்ததே இதற்காகத்தான்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் என்பது  சட்டமாக்கப்பட்டு விட்டது. பெரியார் காலத்தில்கூட இந்த நிலைமை இல்லை. பெரியாருடைய தொண்டர்கள் - பெரியாருடைய பணியைச் செய்ததினால் ஏற்பட்டிருக் கிறது. ஏனென்றால், பெரியார் என்பது வெறும் உருவமல்ல; பெரியார் என்பது தத்துவம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம். ஆகவே,  பெரியாருடைய அந்தப் பணி வளர்ந்து, உத்தரப்பிரதேசம் மற்ற மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. மண்டல் காற்று வீசுகிறது என்றார், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் ஊர்வலம் நடத்தினோம்; அந்த ஊர்வலத்தில் முழக்கம் எழுப்புவோம்; அந்த முழக்கம் என்னவென்றால், கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு; அய்.ஜி., அய்.பி.எஸ். எல்லாம் அவாளா? என்று.
ஆனால், இன்றைய நிலைமை என்ன? நம்மாள்கள் எல்லாம் காவல்துறையில் உயரதிகாரிகளாக இருக்கிறார் கள்!
ஒருமுறை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பெரியாருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நன்றிப் பெருக்கோடு பெரியாரை அழைத்து, சென்னையில் ஒரு விழாவை நடத்தி, அய்யா நீங்கள் இல்லையானால், நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று நன்றியுணர்ச்சி யோடு சொன்னபோது,
உங்களுக்குத் தகுதி இல்லையா? திறமை இல்லையா?
அய்யா அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா?
நீங்களெல்லாம் ஏதோ வந்திருக்கிறீர்கள் சரி!  நீங்கள் சொன்ன பாராட்டுரை என் காதில் ஏறவில்லை; நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த உயர்நீதிமன்றம் இருக் கிறதே 110 ஆண்டாகி இருக்கிறதே (அப்போது) இதுவரை யில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூட நீதிபதியாக வர வில்லை. அது ஏன்? உங்களுக்குத் தகுதி இல்லையா? திறமை இல்லையா? ஆற்றல் இல்லையா? அந்தக் கவலைதான் எனக்கு. அதற்காக இனி நான் போராடுவேன் என்று அய்யா அவர்கள் சொன்னார்.
அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். இந்த ஆட்சி கண்டிப்பாக அதனைச் செய்யும், இந்த ஆட்சி செய்யாமல் வேறு எந்த ஆட்சி செய்யும் என்று அய்யா அவர்கள் பேசிவிட்டு வந்தார்.
அய்யா அவர்கள் என்னை அழைத்து, விடுதலையில் தலையங்கம் எழுதுங்கள் என்று கூறினார்.
உடனடியாக விடுதலையில் தலையங்கத்தை எழுதினோம். கலைஞர் அவர்கள் விடுதலை தலையங்கத் தைப் படித்து முடித்துவிட்டு, சட்ட அமைச்சர் மாதவனை உடனே அழைக்கிறார், பட்டியலை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்கிறார்.
மாவட்ட நீதிபதிகள் யார்? யார்? என்கிறபோது,
வரிசையில் 12 ஆவது இடத்திலுள்ள ஜோலார் பேட்டையைச் சேர்ந்த, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் மாவட்ட நீதிபதியாக இருக்கிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதியான வரதராஜன்
உடனே தலைமை நீதிபதி வீராசாமியிடம் பேசச் சொன்னார்.
சமூகநீதி அடிப்படையிலே வரதராஜன் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என்று வலியுறுத்தப்பட்டது.
12 ஆவது இடத்திலிருந்த மாவட்ட நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக 1971 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். பிறகு அவரே, உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாகவும் உயர்ந்தார்.
பார்ப்பான் ஏன் தி.மு.க.வை வெறுக்கிறான்? பார்ப் பானுக்கு என்ன கோபம்? ஆரியத்திற்கு என்ன கோபம்? அக்கிரகாரத்திற்கு என்ன கோபம் கலைஞர் மேல்?தி.மு.க. மேல்?
பெரியாரின் சாதனை!
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி மேலே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், 80 வயது பார்ப்பான் வழக்குரைஞராக இருக்கிறான். அந்த வழக்குரைஞர் வாதாடும்போது என்ன சொல்லி வாதிடவேண்டும்,
ஓ, மை லார்ட்! அதைச் சொல்லித்தானே ஆரம்பிக் கிறார்கள். ஓ, என் கடவுளே, கடவுளுக்குச் சமமானவரே என்று சொல்லித்தானே ஆரம்பிக்க வேண்டும். ஓ தாழ்த்தப்பட்டவனே! என்று சொல்ல முடியுமோ?
பார்ப்பானையே சொல்ல வைத்தாரே அதுதானே பெரியாரின் சாதனை!
இதுதானே ரத்தம் சிந்தாதபுரட்சி! இதுதானே திராவிட இயக்கத்தின் சாதனை!
அவன் என்ன மகிழ்ச்சியாக அந்த வார்த்தையைச் சொல்லுவானா? உள்ளுக்குள்ளே என்ன நினைத்துக் கொண்டு சொல்வான் - பெரியார் ஒழிக! கலைஞர் ஒழிக! தி.மு.க. ஒழிக! திராவிடர் கழகம் ஒழிக! என்று நினைத்துக் கொண்டுதானே, ஓ மை லார்ட்! என்று சொல்லுவான்.
அவன் என்ன நினைக்கிறான் என்பது நமக்கு முக்கியமல்ல, அவன் அப்படி நினைக்க நினைக்க இந்த இயக்கம் வெற்றி பெறுகிறது என்பதுதான் முக்கியம்!
பழனியில் பாடை கட்டி தூக்கிய பார்ப்பனர்கள்!
நீண்ட நாள்களுக்கு முன்பு, பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். அதில், பாப்பாத்திக்களும் கலந்துகொண்டனர். அந்த ஊர்வலத்தில் என் உருவப் பொம்மையைப் பாடை கட்டி தூக்கினார்கள்.
அந்த ஊர்வலம் நடைபெற்று ஒரு 10 நாள்கள் கழித்து அங்கு சென்றேன், என்னிடம் செய்தியாளர்கள், என்னங்க உங்களுக்குப் பாடை கட்டித் தூக்கினார்களே, பிராமண சங்கத்தினர் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று.
வரவேற்கிறேன், மிகவும் மகிழ்ச்சி என்றேன்.
பார்ப்பான் வீட்டில் சாவு விழுந்தால், அவர்கள் தூக்க மாட்டார்கள்; அதற்குப் பதிலாக சவுண்டி பார்ப்பான்களை வைத்துத்தான் தூக்குவார்கள். பார்ப்பனர்கள் வீட்டில் யாராவது இறந்துபோனால், சவுண்டி பார்ப்பானை வைத்துத் தூக்குகின்ற பார்ப்பனர்கள், ஒரு சூத்திரன் (எனது) பாடையைத் தூக்கினார்கள் என்றால், பெரியார் வெற்றி பெற்றார் என்றுதானே அர்த்தம். ஜாதி ஒழிந்துபோனது என்றுதானே அர்த்தம். எனக்கு மிகவும் சந்தோசம் என்றேன் செய்தியாளர்களிடம்!
பெரியார் எப்படி எங்களை வளர்த்திருக்கிறார் என்றால், அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல், எதிர்க்க எதிர்க்க நாங்கள் உயருவோம். அதனால்தான் இன்று பெரியார் அவர்கள் உலகளாவிய பெரியாராக இருக்கிறார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால், திராவிடர் கழகம் எழுதி கொடுத்த சட்டம்தானே அது. அதனுடைய வரலாறு இன்றைய இளைஞர்கள் பல பேருக்குத் தெரியாதே! நீங்கள் எந்தக் கட்சிக்காரராகவாவது இருங்கள்; பா.ஜ.க.வோ, ஆர்.எஸ். எஸ்.சோ, யாராக இருந்தாலும் நாங்கள் யாரையும் எதிரி என்று கருதுவதில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தாழ்த் தப்பட்டவர்களுக்கு இன்றைக்கு இட ஒதுக்கீடு கிடைத் திருக்கிறது என்றால், அதன் காரணமாக அய்.ஏ.எஸ்., அய். பி.எஸ்., அதிகாரிகளாக நம்மாள்கள் வருகிறார்கள் என்றால், அந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தானே!
இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டார்கள் என்றால், நம்மாள்கள் உயர முடியுமா? அதற்குக் குரல் கொடுக்க இந்த இயக்கம் தேவையில்லையா? பெரியார் தேவைப்பட வில்லையா? பெரியார் என்கிற மாமருந்து இருந்தால்தானே வேர்ப்புழுக்களை எல்லாம் அழிக்க முடியும்.
மூன்று பார்ப்பனர்களை வைத்து நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட்டம்!
முதன்முதலாக இட ஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் ஒரு சட்டம் இடம்பெற்றது என்றால், தமிழ்நாட்டிலுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்தான். அந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை நிறைவேற்றியவர் யார்? இன்றைய முதலமைச்சராக உள்ள ஜெயலலிதா அவர்கள்தான்.
பெரியார் அவர்களுடைய காலத்திற்குப் பின்பு, பெரியார் தொண்டர்களுடைய சாதனை - பெரியாருடைய பணியின் சிறப்பு அது. பெரியாருக்கு அதுதான் உண்மையான பெருமை!
அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார் தெரியுமா? காங்கிரஸ் தலைமையில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தார்.  நரசிம்மராவ் யார் தெரியுமா? அவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள். இவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர் ஆவார்.
குடியரசுத் தலைவர் பார்ப்பனர்; பிரதமர் பார்ப்பனர்; முதலமைச்சர் பார்ப்பனர் என்றாலும் பெரியார் வென்றார். சமூகநீதியை சாய்க்க முடியவில்லை. அதனால்தானே தமிழ்நாட்டில் இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.
இவ்வளவு பேரையும் வைத்து வேலை வாங்கி, இன்றைக்கு இட ஒதுக்கீட்டின் பயனை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் இந்த இயக்கம்தான் தோழர்களே!
நீங்கள் மானத்தோடு இருங்கள்; சூத்திரப்பட்டத்தைத் தாங்கிக் கொண்டு இருக்காதீர்கள்
அதற்காக எங்களை சட்டசபைக்கு அனுப்புங்கள் என்று உங்களைக் கேட்கிறோமா? எங்களை அமைச்சராக்குங்கள் என்று கேட்கிறோமா? நீங்கள் மானத்தோடு இருங்கள் என்று கேட்கிறோம். நீங்கள் சூத்திரப்பட்டத்தைத் தாங்கிக் கொண்டு இருக்காதீர்கள் என்று சொல்கிறோம். நீங்கள் மனிதர்களாக இருங்கள் என்று சொல்கிறோம்.
உழைக்காத சோம்பேறிப் பயல் பார்ப்பான்; உழைக்கின்ற என் சகோதரன் ஏன் அவன் பறையன்? எதற்காக அவன் தோட்டி? எதற்காக அவன் பள்ளன்? எதற்காக அவனைத் தொடாதே, எட்டி நில்! என்கிறீர்கள்!
மலத்தை மிதிக்கிறார்கள், மிதித்த இடத்தை மட்டும் கழுவிக் கொள்கிறார்கள்; சகதியை மிதிக்கிறார்கள், அந்த இடத்தை மட்டும் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள். என்னுடைய சகோதரன் இந்த நாட்டின் மண்ணுக்குரிய மைந்தன், அவன் உழைப்பு இல்லாவிட்டால், நீ மனிதனாக இருக்க முடியாது. நீ சக்கிலி பையன் என்று  கேவலமாகப் பேசுகிறாயே, அவன் செருப்பு தைத்துக் கொடுப்பதால்தான், நீ கால் சூட்டைத் தாங்கிக் கொள்கிறாய்.
ஜாதியை மூலதனமாக வைத்துக்கொண்டு வித்தை காட்டுகிறார்கள்
ஜாதி, ஜாதி என்று சொல்லி ஜாதியைப் பிரித்து, நம்மை எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அய்யா சொல்வார், மலம் எடுக்கின்றவர்களுக்கு நாற்றம் தெரியாது; பழகிப் போனதால் என்பார். அதுபோன்று நிறைய பேருக்கு இந்த ஜாதியில் இருந்ததினால், அது பழகிப் போயிற்று. இப்பொழுது அந்த ஜாதி உடைகிறது என்றதும், அந்த ஜாதியை மூலதனமாக வைத்துக்கொண்டு வித்தை காட்டுகிறார்கள்.
இப்பொழுது புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். கவுரவக் கொலை என்று. ஒரு ஜாதியில் உள்ள பெண் இன்னொரு ஜாதியில் உள்ள இளைஞரைக் காதலித்தால், அந்தப் பெண்ணை கொலை செய்யவேண்டும்; அதற்குப் பெயர் கவுரவக் கொலையாம். ஜாதி என்பதற்கு அறிவியல் பூர்வமானஅடிப்படை ஆதாரங்கள் உண்டா?
இப்பொழுது உடல் உறுப்புக் கொடையளிக்கிறார்கள்; பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் என்று வைத்திருக்கிறோம். இறந்ததும் உடலைக் கொடையாக மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கலாம். இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தால், அவரின் உறுப்புகளைக் கொடையாக அளிக்க முன்வரு கிறார்கள். குருதிக் கொடை அளிக்கிறார்கள்; விழிக் கொடை கொடுக்கிறார்கள்.
சாதாரணமாக விபத்துகள் நடக்காத நாளே கிடையாது; நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடக்கிறது; அந்த விபத்தில் அடிபட்டவர் ஒரு அய்யங்கார்; அருகிலுள்ள ஒரு மருத்துவ மனையில் அட்மிட் செய்கிறார்கள்; அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்; அதற்காக ரத்தம் தேவைப்படுகிறது என்று மருத்துவர் சொல்கிறார். உடனே அந்த அய்யங்காரிடம் உங்கள் ரத்த குரூப் என்ன என்று கேட்டால், அய்யங்கார் ரத்தம் என்றா சொல்வார்? ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் என்று சொல்கிறார் அந்த அய்யங்கார்.
நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று?
உடனே மருத்துவமனையிலிருந்து விளம்பரம் கொடுக்கிறார்கள், ஏ-1 பாசிட்டிவ் ரத்தம் தேவை என்று.
அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு, ஒரு இளைஞர் வருகிறார்; என்னுடைய ரத்தம் ஏ-1 பாசிட்டிவ்தான்; நான் இதற்குமுன் பலமுறை ரத்தம் கொடுத்திருக்கிறேன்; இப்போது ஏழாவது முறையாகக் கொடுக்க வந்துள்ளேன் என்று சொல்கிறார்.
அய்யங்கார் அவர்கள் மருத்துவரிடம் கேட்கிறார், டாக்டர், உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொன்னீர்களே, ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இல்லை, உங்களிடம் அனுமதி கேட்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம் என்ற மருத்துவர் ரத்தம் கொடுக்க வந்திருப்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்; ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்; அவர்களைத் தொட்டாலே தீட்டு என்று சொல்வீர்களே; தலையிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொள்வீர்களே! உங்கள் அனுமதியில்லாமல், அவருடைய ரத்தத்தை உங்கள் உடம்பில் ஏற்றலாமா? அதற்காக உங்களிடம் அனுமதி கேட்க வந்தோம் என்று சொல்கிறார்.
அய்யங்கார் என்ன, இல்லை இல்லை, நான் செத்தாலும் பரவாயில்லை என்றா சொல்வார்?
உடனே அய்யங்கார் மருத்துவரின் கையைப் பிடித்துக் கொண்டு, நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! இப்பொழுதெல்லாம் இதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? என்று சொல்வார்.
ஏனென்றால், அவர் பிழைக்கவேண்டும் பாருங்கள்; அதனால் அப்படித்தான் சொல்வார். இப்பொழுது ஜாதி எங்கே போனது?
சிறுநீரகம் பொருத்துகிறார்களே, முதலியார் சிறுநீர கத்தை முதலியாருக்கா பொருத்துகிறார்கள்? வன்னியர் சிறுநீரகத்தை வன்னியருக்கா பொருத்துகிறார்கள்? பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கண்களை எடுத்து, சென்னையிலுள்ள போர்ட்டீஸ் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்குப் பொருத்துகிறார்கள் - காவல் துறையினரின் ஒத்துழைப்போடு!
இவ்வளவும் எப்படி நடைபெறுகிறது? உன்னுடைய பிரம்மனுக்கு என்ன வேலை? உன்னுடைய கிருஷ்ணனுக்கு என்ன வேலை? இதையெல்லாம் மாற்ற முடியாது என்று சொல்வார்களா?
ஜாதி என்பது கற்பனை! அதனைத் தூக்கிப் பிடிப்பதுதான் இந்து மதம்
பெரியாருக்குத்தான் வேலை; பெரியாரின் பகுத்தறிவிற் குத்தான் வேலை; அங்கே அறிவியலுக்குத்தான் வேலை. ஆகவே, ஜாதி என்பது கற்பனை! அதனைத் தூக்கிப் பிடிப்பதுதான் இந்து மதம் என்கிற பார்ப்பன மதம்.
இதிலிருந்து எல்லாம் விடுபடுவதுதான் இட ஒதுக்கீடு, சமூகநீதி. அந்தச் சமூகநீதியைப் பாதுகாப்பதற்குத்தான் இந்த இயக்கம் தேவை! பெரியார் தேவை! இதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, இவ்வளவு சிறப்பாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அத்துணை பேருக்கும் நன்றி!
மீண்டும் நாமக்கல்லுக்கு வருவோம்; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக அடிக்கடி கூட்டம் போடுவார்கள்; அங்கே விடுதலை வாசகர் வட்டம் நடைபெறும். நீங்கள் அங்கே வரலாம். ஆகவே, இனிமேல் நாமக்கல்லுக்குப் பெருமையே, பெரியார் கருத்தைக் கேட்பதற்காக வரலாம் என்று சொல்லி, ஒத்துழைத்த அத்துணை பேருக்கும் நன்றி, காவல்துறையினர் உள்பட நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...