Friday, October 2, 2015

தூய்மை இந்தியா என்னும் ஏமாற்றுத் திட்டம்

சமூக நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பின்பற்றிய தலைவர்களின் பிறந்த நாளை கொச்சைப் படுத்தும் விதமாக மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகின்றன.
இந்திரா காந்தி பிறந்த நாளில் கழிப்பறைத் திட்டம், காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் போன்ற வைகளைக் கூறலாம். தூய்மை இந்தியா திட்டம் ஒராண்டு விளம்பரத்திற்கு மாத்திரம் ரூ.120 கோடிகள் வரை செல விடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அறியவருகிறது.  தூய்மை இந்தியா திட்டம் நேற்றோடு ஓராண்டு முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தேசிய பொதுநல மாணவர் அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும், கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின.
இந்த கருத்துக் கணிப்பின் படி பெருவாரியான மக்கள் தூய்மை இந்தியா திட்டம் ஒரு ஏமாற்றுத் திட்டம் என்றும், அரசு தூய்மைத் தொழில் புரியும் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தாலே தூய்மை இந்தியா திட்டம் எளிதில், வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளனர்.
முன்னாள் ஆம் ஆத்மி உறுப்பினரும், சமூகத் தொண்டு நிறுவனத் தலைவியுமான சஜியா இல்மீ தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அது தொடர்பான செலவீனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் விவரங்கள் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தூய்மை இந்தியா திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக இருந்தன.
பத்திரிகை அலுவலகங்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் பெரும் தொகைகள் சென்றுள்ளன; விளம்பரத்திற்காக ரூ.100 கோடிவரை செலவு செய்துள்ள இந்த அரசு, தனியார் விளம்பரதார நிறுவனங்களுக்கு ரூ,20 கோடி வரை செலவழித்துள்ளது. இந்த விளம்பரங்களினால் ஏதாவது பலன் ஏற்பட்டதா என்பது குறித்து அரசு கண்காணிப்பும், ஆய்வும் இதுவரை நடத்தவில்லை, முக்கியமாக டில்லி, மும்பை, லக்னோ, வாரணாசி போன்ற பல்வேறு வட இந்திய நகரங்கள் இன்றும் அசுத்தம் நிறைந்த நகரங்களாகவே காட்சி தருகின்றன, உண்மை என்ன வென்றால் டில்லி பாஜகவினர் வாகனங்களில் குப்பை களை அள்ளிக்கொண்டு வந்து தெருவில் வீசிவிட்டு, வீசிய குப்பைகளை அள்ளுவது போன்று நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். டில்லியில் மட்டுமல்ல, பல்வேறு நகரங்களிலும் பாஜகவினர் தூய்மை இந்தியா என்ற பெயரில் இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லி காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா கூறும்போது பாஜக தலைவர்கள் அனைவரும் குப்பை யைக் கூட்ட தூய்மைப் பணியாளர்களை விட்டு குப்பைக் கூளங்களை தெருவில் வீசச்சொல்கிறார்கள் என்று கூறினார்.
மாணவர் அமைப்பு எடுத்த கருத்துக் கணிப்பின்படி நாடு முழுவதும் பெரு நகரம், சிறுநகரம் என இரண்டு பிரிவாகப் பிரித்து 3 லட்சம், மக்களை சந்தித்தனர். இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் தோல்வி தெளிவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி தன்னுடைய பகுதிக்குத் தேவையான பணியாளர்களை நியமித்து, அவர்களின் பணிகளை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான கருவிகளைக் கொடுத்தாலே நகரங்கள் தூய்மையாகி விடும். ஆனால், அவர்கள் அடித்தட்டு - கீழ்ஜாதி மக்களாயிற்றே - உயர் ஜாதி மனம் கொண்ட பிஜேபி அரசின் கண்களுக்கு இவை எல்லாம் தெரியுமா? மாநகராட்சி நகராட்சி அலுவலங்களில் குப்பை அள்ளும் வாகனங்கள், இயந்திரங்கள் பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கிடக்கின்றன. மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாகிக்கொண்டு இருக்கிறது. நிர்வாகத்தைப் பிடித்துள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பகுதி எதிர்க்கட்சிப் பகுதி என்று தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் அவலம் நிகழ்கிறது, முக்கியமாக பாஜக கட்சியினர், தூய்மை இந்தியா என்ற பெயரில் நடத்தும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தூய்மையாக நகரங்களை உருவாக்குவதற்கு எல்லா மக்களுமே விரும்புகின்றனர். ஆனால் ஆட்சி அதிகா ரத்தை கையில் வைத்துள்ளவர்களின் செயல்பாடுகளால் நகரங்கள் குப்பையாகின்றன.  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரி விஜயலட்சுமி ஜோஷி தூய்மை இந்தியா திட்டத்தின் இயக்குநர் பொறுப்பில் பதவி வகித்தவர். இவர் திடீரென  செப்டம்பர் 2-ஆம் தேதி பதவியை விட்டு விலகினார்.
மேலும் இவரை மாற்றுப்பணிக்கு அரசு தன்னை நியமிக்கும் என்ற நிலையில் இவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளேடான இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  எந்த ஒரு சூழலிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எந்த ஒரு திட்டமும் சரியாக செயல்படவில்லை என்றும், மோடி தன்னிச்சையாக தூய்மை இந்தியா திட்டத்தின் அறிவிப்பு களை வெளியிடுகிறார் என்றும், இந்தத் திட்டம் ஆரம் பித்தது முதல் செப்டம்பர் இறுதிவரை எந்த ஒரு தலைமைச் செயலாளர் கூட்டத்தையும் கூட்டவில்லை என்றும், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் விரயமாவதாகவும் அந்தப் பத்திரிகை  வெளியிட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் மீதான வரவேற்பு மற்றும் பாராட்டுரைகள் அனைத்தும் மோடியைச் சென்றடைந்த போது தோல்வி மற்றும் எதிர்கட்சிகள் வெளிப்படுத்தும் உண்மை நிலைக்கு தலைமை இயக்குனராக இருக்கும் விஜயலட்சுமி ஜோஷியே பொறுப்பேற்கவேண்டியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு அதிகாரிகள் மக்கள் தொடர்பு அதிகாரிகள் அனைவரும் இதர அமைச் சகத்தில் இருந்து தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள், அவர்களின் முழுக் கவனமும் முதன்மையான பணி யிலேயே உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எந்த ஒரு நிர்வாக அதிகாரியும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பணியாற்ற மறுக்கின்றனர். இதன் காரணமாக விஜயலட்சுமிஜோஷி தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகின்றார். இதனால் அவர் பதவிவிலகினார் என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதுதான் விளம்பரக் காற்றால் பறக்கும் தூய்மை இந்தியா எனும் குப்பை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...