Friday, October 9, 2015

தந்தை பெரியார் பிறந்த நாளில் நாம் மேற்கொள்ளும் உறுதிமொழி என்ன?

தந்தை பெரியார் பிறந்த நாளில் நாம் மேற்கொள்ளும் உறுதிமொழி என்ன?
கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரை

சென்னை, அக்.9-  17.9.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - மகளிர் கருத்தரங்கத் தொடக்கத்தில் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இங்கே காலையில் இருந்து மிகச் சிறப்பான நிகழ்ச்சி களாக அன்னை மணியம்மையார் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலையிடுதல், தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தல், தந்தை பெரியார் அவர்களின் 21 அடி உயர சிலையை திறந்து வைத்தல், அதன் பிறகு, தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தேவை யான பகுத்தறிவுக் கருத்துகளையும், சமதர்ம கருத்துகளை யும் சொல்லக்கூடிய, வள்ளுவத்தைப் போற்றக்கூடிய பெரியார் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தி, அதைப்பற்றி திறனாய்வுகளை செய்து,. சிறப்புரை நிகழ்த்தப்பட்டன.
நமக்கெல்லாம் சுவாசமாக உள்ளே செல்லும் வகையில்
நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களும், நம்முடைய முனைவர் அவ்வை நடராசன் அவர்களும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினர். நாம் வள்ளுவத்தை எப்படி நேசிக்க வேண்டும்; சுவாசிக்கவேண்டும்; புரிந்து கொள்ளவேண்டும்; அறிந்துகொள்ளவேண்டும்; அவற்றை எப்படிப் பரப்பவேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள், நமக்கெல்லாம் சுவாசமாக உள்ளே செல்லும் வகையில்.
அதற்கடுத்ததாக இங்கே ஒரு சுயமரியாதைத் திரு மணம்; தாலியற்ற, புரோகிதர் அற்ற, வேத மந்திரங்களற்ற, மூடப்பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லாது அருமையாக தந்தை பெரியார் காட்டிய வழியில் திருமணம் நடைபெற்றது.
இந்த நாட்டில் உண்மையான சுயமரியாதை கருத்து களை எடுத்துச் சொல்லவேண்டும் என்றால், அதனை மகளிர்தான் முதலில் செய்யவேண்டும் என்பதற்காக, அதனை நிலை நிறுத்தும் வகையில், அறிவுறுத்தும் வகையில் இங்கே மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.
மானமும், அறிவும் உள்ளவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
1916 ஆம் ஆண்டிலிருந்து இன்று 2015 ஆம் ஆண்டு வரையிலும் நாம் பெற்ற நிலைகள்; நாம் இருக்கக்கூடிய சூழ்நிலைகள்; நாம் அடைந்த முன்னேற்றங்கள், மாற்றங்கள் இவை இன்று கல்வியால், தந்தை பெரியார் அவர்களின் புரட்சியால், தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் காட்டிய வழிமுறையால், அன்னை மணியம்மையாருக்குப் பிறகு நம்முடைய ஆசிரியர் அவர்கள் நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய சூழ்நிலையால், இன்று நாம் கல்வியில் மேம்பட்டிருக் கிறோம்; சமுதாயத்தில் மேம்பட்டிருக்கின்றோம்; நம் முடைய பொருளாதாரத்தில், அரசியல் அனைத்திலும் நாம் இன்று மேம்பாடடைந்த ஒரு சுயமரியாதை உள்ளவர்களாக, மானமும், அறிவும் உள்ளவர்களாக நாம் வாழ்ந்து கொண் டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்; அதற்காக தன்னுடைய வாழ்நாள் எல்லாம் போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். அவருடைய பேராட் டங்களினால்தான், இன்றைக்குப் பல தடைகள் இருந்த போதிலும், பல இடர்கள் இருந்தபோதும், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலை யில், ஜாதி ஓரளவிற்கு ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றால், பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றால், கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும்  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் முன்னேறி யிருக்கிறார்கள் என்றால், இன்றும் நாமெல்லாம் திருக்குற ளைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் இனத்தால் திராவிடர்களாய், மொழியால் தமிழர்களாய், மக்கள் சமூகத்தில் மனிதர்களாய், எண்ணங்களில் பகுத்தறி வாளர்களாக நாம் இருக்கிறோம் என்றால், காரணம் தந்தை பெரியார் அவர்கள்தான்.
ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, வாக்களித்ததின் விளைவு!
தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய உடல் வேத னையைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய வயோதிகத் னைப் பொருட்படுத்தாமல் நமக்காகப் போராடியதன் காரணமாகத்தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம். இன்று 18 வயதிலிருந்து 21 வயதுவரையில் இருக்கக்கூடிய இளைஞர்கள், அவர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இணைய தளத்தில் மட்டும் உழல்வதால்,  இந்திய நாட்டின் வரலாறு; திராவிடர்களின் வரலாறு என்று எண்ணிக் கொண்ட காரணத்தினால், அரசியல் கட்சிகள் அவர்கள் செய்த சில தவறுகளினால், அல்லது செய்யாது விட்ட சில செயல்களினால் அல்லது அவர்களுக்குள்ளே பிரித்து ஆளக்கூடிய அவர்களைப் பிரிக்கக்கூடிய சூழ்ச்சிகள் நடந்த காரணத்தினால், அவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்ட காரணத்தினால், இன்றைக்கு ஒரு மதவாத பாசிச ஆட்சி - ஒரு சமதர்மத்தை மறந்த சமத்துவத்தை மறந்த ஒரு வருணாசிரம தரும ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அது முந்தைய காலத்தில், 13 நாள் ஆட்சியாக, 13 மாத ஆட்சியாக, அய்ந்தாண்டுகள் மைனாரிட்டி ஆட்சியாக இருந்த அந்த ஆட்சியானது - இளைஞர்கள் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல், ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்து, வாக்களித்ததின் விளைவாக இன்றைக்குப் பெரும்பான்மை பெற்ற ஆட்சி யாக அது ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்!
அந்த ஆட்சியினால், இந்தி மொழி திணிக்கப்படு கிறது; சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது; பண்பாட்டை அவர்கள் மறக்கடிக்கப்படவேண்டும் என்று, நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னதைப்போல, திருக் குறளை கையில் தூக்கிக்கொண்டு வந்து, நமக்கே திருக் குறளைப்பற்றிச் சொல்கிறார்கள். அதே சமயத்தில், பகவத் கீதையை தேசிய நூலாக்கவேண்டும் என்று பேசிக் கொண் டிருக்கிறார்கள் என்றால், நம் மொழியை அழிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த இனத்தை எப்படியாவது அழிக்கவேண்டும்; திராவிடர் இனத்தைத் திரும்பவும் 16 ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இருக் கிறார்கள் என்றால், அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்றால், அதற்காகவே, சமதர்மத்தையும், மத சார்பற்ற ஒரு நிலையைக் கைவிட்ட நிலை இன்றைக்கு இருக்கிறது என்றால்,
நாம் திராவிடத்தால் உயர்ந்திருக்கின்றோம்; தமிழர் களாய், தன்மானம் மிக்கவர்களாய், திராவிடர்களாய், இன மானம் மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறோம் என்றால், இதற்கொரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்றால், அந்த அச்சுறுத்தல்கள் மாற்றப்படவேண்டும். அது தந்தை பெரியார் அவர்களின் 137 ஆம் ஆண்டு பிறந்த நாளான அன்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உறுதி மொழியாக இருக்கவேண்டும். உங்கள் பகுத்தறிவால் சிந்தித்துப் பாருங்கள்; சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்!
நம்முடைய ஆசிரியர் அவர்கள் மனதில் எண்ணி யதைப்போல, இந்த மாற்றத்தை, இந்தப் பாதுகாப்பை ஏற்படுத்தவேண்டும் என்றால், ஆண்களைவிட, பெண் களுக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. பெண்கள் தாய்ப்பாலோடு, பகுத்தறிவு பாலையும், அமுதூட்டுவதோடு, அறிவியலையும் ஊட்டி, சின்னஞ்சிறு குழந்தைகளில் இருந்தே, நம் குழந்தைகள் திராவிடர் சரித்திரம் தெரிந்தவர் களாக, தந்தை பெரியார் அவர்களின் புரட்சிக் கருத்துகளை, ஜாதி மறுப்பை, மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்கிற சிந்தனைகளை, பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்படவேண்டும் என்கிற சிந்தனைகளை, எதையும் அறிவால் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டு, யார் சொல்லியதாக இருந்தாலும், தந்தை பெரியார் அவர்களே சொல்லியிருக்கிறார், நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் எடுத்துக் கொள்ளாதீர்; உங்கள் பகுத்தறிவால் சிந்தித்துப் பாருங்கள்; சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து நான்கு நாள்கள் உரையாற்றினார்!
அப்படிப்பட்ட ஒரு சிந்தனையோடு செயல்படக் கூடிய ஒரு இளைய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்; அந்த சமுதாயத்தை குழந்தைப் பருவத்திலிருந்து நாம் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதற்காகவே, இந்த மகளிர் கருத்தரங்கத்தை அமைத்து, தந்தை பெரியார் அவர் களுக்கு 1970 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ என்கிற அமைப்பு கொடுத்த விருதைப்பற்றி, ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து நான்கு நாள் உரையாற்றிய கருத்துகள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் மனிதநேய கருத்து களை, மனிதர்களைப் பண்படுத்தக் கூடிய கருத்துகளை, மனிதனை மனிதனாக வாழ வைக்கக்கூடிய கருத்துகளை, பாசிசம் அழிக்கப்படவேண்டும்; வருணாசிரம தருமம் அழிக்கப்படவேண்டும் என்கிற கருத்துகளை மகளிர் கருத்தரங்கத்தில் பங்கேற்க உள்ளவர்கள் எடுத்துச் சொல்லத் தயாராக இருக்கிறார்கள்; நீங்கள் வாருங்கள், உங்கள் கருத்துகளைத் தாருங்கள்; உங்கள் கருத்துகளைக் கேட்க நாங்கள் இங்கே காத்திருக்கிறோம் என்று கூறி, அவர்களை அழைத்து நான் விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...