Wednesday, September 30, 2015

நேபாளத்திற்கு ஒரு அளவுகோல் - இலங்கைக்கு ஒரு அளவுகோலா?





கோவை வட்டார மாநாட்டில் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி

கோவை, செப். 29_ நேபாளத்திற்கு ஒரு அளவு கோல்_ இலங்கைக்கு ஒரு அளவுகோலா? என்று கோவையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் அவர்கள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா _ திராவடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 28.9.2015 அன்று மாலை 6 மணியளவில் கோவை, செல்வபுரம், சிவாலயா திரையரங்கு எதிர்புறம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத் தலைவர் பா.மோகன் தலைமை தாங்கினார்.
தமிழர் தலைவர் உரை
மாநாட்டில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:_
மிகுந்த எதிர்ப்பார்ப்புடனும், எதிர்ப்புடனும், சிறப்போடும் அடாத மழை பெய்தாலும் விடாது நடத்துவார்கள் என்பதற்கிணங்கவும் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பு, சலசலப்பு என்று சொல்லி இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் போன்ற மதவாத அமைப்புகள் இக்கூட் டத்தை நல்ல முறையில் விளம்பரப்படுத்தியதற்கு நன்றி! இதை தவறாமல் செய்யுங்கள். எங்களை எதிர்க்கும் நண்பர்களை நாங்கள் எதிரிகளாகக் கருதுவதில்லை. இன எதிரிகளைத் தவிர யாரையும் நாங்கள் எதிரியாகக் கருதுவதில்லை! பூனை எலியை பிடிக்க வேண்டுமே தவிர எங்களைப் பிடிக்கக்கூடாது.
பெரியார் கேட்டார்
தந்தை பெரியார் அவர்கள் 29 பதவிகளை ராஜி னாமா செய்துவிட்டு பொதுமக்களுக்கு தொண்டாற்ற வந்தார். நமக்காக 95 ஆண்டு காலம் வாழ்ந்தார். அவர் பதவி வேண்டும் என்று கேட்டாரா? வாக்கு வேண்டும் என்று கேட்டாரா? படிப்பு ஏன் எங்களுக்கு இல்லை? என்று கேட்டார்! எங்களுக்கு ஏன் தகுதி இல்லை? என்று கேட்டார்! எங்களை நாலாம்ஜாதி அய்ந்தாம்ஜாதி என்று எழுதி வைத்துள்ளார்களே! பெண்களை கீழானவர்களாக்கி வைத்துள்ளார்களே! மலத்தை மிதித்தவன் அது பட்ட இடத்தை கழுவி நிம்மதியடைகிறான். என்னுடைய பாட்டாளி சமுதாயத்தை தொட்டால் தீட்டு என்கிறாயே என்று கேட்டவர் பெரியார்! 1000 ஆண்டுகால அடிமைத் தனத்தை ஒழித்த பெருமை பெரியார் கைத்தடிக்கே உண்டு! நாங்கள் இல்லையென்றால் இடஒதுக்கீடு வருமா-?
ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் பி.ஜே.பி ஒத்திகை பார்க்கிறது. சமூகநீதிக்கு எதிராக யார், எந்த பிற் போக்கு சக்திகள் படமெடுத்து ஆடினாலும் பெரியார் கைத்தடி தடுக்கும், ஒடுக்கும் மத்திய, மாநில ஆட்சியின் அவலம் மின் மிகை மாநிலமா? மின் புகை மாநிலமா? என்கிற வகையில் கரண்ட் கட் கோவை போன்ற இடங்களில் அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வெளிமாநிலங்களிலிருந்து மின் சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறது. காவிரி நீர் மேலாண்மை கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதே! மத்திய, மாநில அரசுகள் இதை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை. எல்லா மாநிலங்களிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலோ எல்லா தலைவர்களும் தனித்தனிதான்!
நேபாளம் கலாச்சார உறவு கொண்ட நாடு. அங்கு இந்து நாடு என்பது போய் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளதே; நினைத்துப் பார்க்க வேண்டும். நேபாளம் மதச்சார்பற்ற நாடாக அமையக் கூடாது என்று மத்திய அரசு தலையிடுகிறதே இலங்கைப் பிரச்சினையில் ஏன் தலையிடவில்லை! இலங்கையில் மத்திய அரசு என்ன செய்தது? நேபாளத்திற்கு ஒரு அளவுகோல் _ இலங்கைக்கு ஒரு அளவுகோலா?
மீனவர் பிரச்சினையிலும் தமிழக அரசு கடிதம் மேல் கடிதம் என்ற நிலைதான்! நடவடிக்கை இல்லை. முதல்வர் போட்ட தீர்மானமும் ஏட்டுச் சுரைக்காய் கதைதான்!
மனுதர்மம் வந்தால் ஜாதித்தொழில் வரும்! மதவாதிகள் சொல்வது போல் மனுதர்மம் அரசியல் சட்டமாக வந்தால் என்ன ஆகும்? என்பதையும் குலக் கல்வித் திட்டத்தை அன்றே ஒழித்தவர் பெரியார் என்பதையும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரியார் தேவைப்படுகிறார், தேவைப்படுவார், எப் போதும் தேவைப்படுவார்! பெரியார் கருத்து எப் போதும் தேவை! மக்களின் மூச்சுக்காற்று திராவிடர் கழகம்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று வருகின்ற இந்நேரத்தில் அனைவரும் ஓரணியில் சேரவேண்டும். எங்களுக்கு கட்சி, ஜாதி, மதம் என்பது இல்லை. கொள்கை, இனஉணர்வு, மனிதாபிமானம் உண்டு. பெண்ணுரிமை பேண, கல்வி உரிமை பெற மூடநம்பிக்கையை எதிர்க்க பெரியார் தேவை! என்று தமிழர் தலைவர் உரையாற்றினார்.
செயலவைத் தலைவர் உரை

மோடி என்ற பெயரால் என்ன மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? அந்த மோசடியை எடுத்துக்காட்ட இந்தக்கூட்ட வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஏமாற்று என்பது தான் மத்தியில் ஆளும் ஆட்சியின் லட்சணம். பகவத் கீதையை தேசிய புனித நூலாக்க வேண்டும் என்ப வர்கள் திருக்குறளைப் பற்றி எப்படி பேச முடியும்? இந்து மதம் என்கிற பேரில் இந்தியாவை கீழ்த்தர மாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ராமனைக் கடவுளாக ஏற்காவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். இவர்கள் யார்? முதலாளி வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள். மோடி ஏழைகளின் பிரதமரா? இல்லை, ஏழைகளுக்கு மோடியால் எந்தப் பயனும் இல்லை!
காகிதம் பொறுக்கியும், பிச்சை எடுத்தும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அட்சய திருதி யாருக்கு பார்ப்பன பனியாக்களுக்கு! ஏழைகளுக்கா? மதம் ஒழிக்கப்பட்டு மக்கள் மக்களாக வாழ வேண்டும்! மதத்தை வைத்து பிஜேபி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக ஆளும் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. ஆகவே, மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்! சிந்திக்கவேண்டும்! தத்துவத்தை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாகத்தான் தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்! ஒரு ஆண்டு முழுவதும் மக்களி டையே தந்தை பெரியாரின் தத்துவங்களை எடுத்துச் செல்வோம்! பெரியாரைப் பேசாத நாட்கள் நாங்கள் பிறவா நாட்களே!
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் உரை
கூட்டத்தில் கழகப்பொருளாளர் சு.பிறைநுதல் செல்வி அவர்கள் குறிப்பிட்டதாவது:_
மதவெறி ஒழிக்க, மனித தர்மம் காக்க, அறிவியல் சிந்தனை நிலைக்கப் போராடியவர் பெரியார்! பெண்கள் கல்வி கற்க முடியாது! பிள்ளை பெறும் இயந்திரமாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலைமாறி பெண்கள் கல்வி, சொத்துரிமை, வாரிசுரிமை, மணவிலக்கு, மறுமணம், இடஒதுக்கீடு ஆகிய உரிமைகளைப் பெறவும் தற்போது 33 சதவீதம் மகளிருக்காக இடஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்த பெண்கள் அணியமாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்!
மதவெறி, ஜாதிவெறி, பழைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒழிக்க தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்! ஒவ் வொரு வீட்டிற்கும் பெரியாரை கொண்டு செல்வோம்! புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அர்த்தமற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பெரியாரை பரவலாக எடுத்துச் செல்லவேண்டும்! திருக்குறளை யும், தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் பழக்கத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் ஒவ்வொரு மனிதனுக்கு எடுத்துச்சொல்லவும், சமூக நீதியைக்காப்பற்றவும் தந்தை பெரியாரின் 137ஆவது ஆண்டு பிறந்த நாளில் சூளுரைப்போம்! அதற்குத் தான் இம்மாநாடு! இவ்வாறு அவர் பேசினார்-.
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு
கூட்டத்தில் கோவை மாநகர 78ஆவது திமுக வட்ட கழகம் சார்பில் புருசோத்தமன், 77ஆவது திமுக வட்ட கழகம் சார்பில் மதியழகன், ஏ.எம்.உசேன், 77 ஆவது வட்ட மாவட்ட திமுக பிரதிநிதி மற்றும் 77 ஆவது வட்ட திமுக சார்பில் பால்ராஜ், பழனி சக்திவேல் (தி.க)  ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
கூட்டத்தில் பங்கேற்றோர்
முன்னதாக இந்நிகழ்வில் கோவை மாநகர கழகத் தலைவர் சிற்றரசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தி.பரமசிவம், சிங்கை ஆறுமுகம், பழ.அன்பரசு, தி.க.செந்தில்நாதன், சி.மாரிமுத்து, திலகமணி, இராசாமணி அம்மையார், ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி) அக்ரி.நாகராஜ் (ப.க) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மருத்துவ அணியைச் சார்ந்த மருத்துவர் இரா.கவுத மன், கோவை மண்டலத் தலைவர் வேலுசாமி, கோவை மாவட்டச் செயலாளர் ம.சந்திரசேகர், மாநில ப.க.துணை தலைவர் அ.முனியன், மாவட்ட ப.க. தலைவர் மரு. துரை.நாச்சியப்பன், மாநகர கழகச்  செயலாளர் ஆடிட்டர் ஆனந்தராஜ், மாவட்ட அமைப் பாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்முரசு, ஆட்டோ சக்தி (திதொச), பகுதி செயலாளர்கள் கவி. கிருட்டிணன், புண்ணியமூர்த்தி, கிருட்டிணமூர்த்தி, கதிரவன், பொன்குமார், கோவை மண்டல இ.அ.செயலாளர், ச.மணிகண்டன், மாணவரணி செயலாளர் ஆ.பிர பாகரன், கு.வெ.கி.செந்தில், தலைமை கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி, நீலமலை மாவட்டச் செயலாளர் நாகேந்திரன், தலைவர் கருணாகரன் உள்ளிட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த அனைத்து அணியினரும் பொதுமக்கள் பலரும் பெருந்திரளாக கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கூட்ட முடிவில் மே.பா.ரங்கசாமி நன்றி கூறினார்.
மந்திரமா! தந்திரமா!! நிகழ்ச்சி
பொதுக்கூட்டத்தின் துவக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசனின் ‘‘மந்திரமா’’, ‘‘தந்திரமா’’ எனும் பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையில் மனித குலத்தைச் சுரண்டும் மூடநம்பிக்கைகளை இந்நிகழ்ச்சி தோலுரித்துக் காட்டியது. இதைக் கண்ணுற்ற வெகு மக்கள் அறிவியல் மனப்பான்மை பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் கழகத் தலைவர் உரையாற்றினார் (கோவை, 28.9.2015)


20.8.2015 அன்று மறைவுற்ற திராவிடர் கழகத்தின் முன்னாள் பொதுக் குழு உறுப்பினரும், தணிக்கையாளருமான மானமிகு எஸ்.எம்.ராஜா அவர்களின் உருவப்படத்தை நேற்று கோவை, செல்வபுரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டு மேடையில் கழகத் தலைவர் அவர்கள் திறந்து வைத்து, கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை எஸ்.எம்.ராஜா குடும்பத்தாரிடம் தெரிவித்துக்கொண்டார். உடன் எஸ்.எம்.ராஜா குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் (கோவை, 28.9.2015).

கோவை மாநாட்டு மேடையில் ஈட்டி கணேசனின் ‘‘மந்திரமா? தந்திரமா?’’ நிகழ்ச்சி
கோவையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (கோவை, 28.9.2015)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...