Saturday, June 27, 2015

காஞ்சி சங்கராச்சாரியார்மீதான கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுமா?

- மின்சாரம்
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கராமன் ஒரு பட்டப் பகலிலே வரதராஜ பெருமாள் சன்னதியிலே படு கொலை செய்யப்பட்டார்.  அதற்குக் காரண மானவர் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்று ஒருமுகமாக பேசப்பட்டது அப்பொழுது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா; ஒரு தீபாவளி நாளில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார் (11.11.2004).
வேலூர் மத்திய சிறைச் சாலையில் இந்த லோகக்குரு 61 நாள்கள் கம்பி எண்ணியது. இவரது சிஷ்யக் கே()டி விஜயேந்திர சரஸ்வதி 31 நாள்கள் கம்பி எண்ணினார். நாள்தோறும் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார்.
இந்தக் கைது முதல் அமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்த கால கட்டத்தில் நடந்திருந்தால் அடேயப்பா என்ன களேபரம் செய்திருப்பார்கள்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக்கில் என்ன எழுதினார்?
(1) வலுவான சாட்சியங்கள் அடிப் படையிலேயே கைது நடந்திருக்கிறது.
2) மைனாரிட்டிகளைத் திருப்திபடுத்த இந்தக் கைது என்பதும் சரியில்லை.
3) எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை காரணமாக இந்தக் கைது என்பதும் சரியல்ல.
4) அரசியல் லாபக் கணக்கில் எடுக்கப் பட்ட நடவடிக்கையா என்றால் அதுவும் இல்லை.
5) நள்ளிரவில் அய்தராபாத் சென்று காவல்துறை எடுத்த நடவடிக்கையையும் குறை சொல்ல முடியாது.
ஆக, சோ வட்டாரத்தாலேயே குற்றம் சொல்லப்பட முடியவில்லை என்பது முக்கியமானது.
இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலையானதானது - நீதி மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நெருப்பு அலைகளை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ் சாட்சிகள் என்பதை எந்த வழக்கிலாவது கேள்விப்பட்டதுண்டா? இந்த அதிசயம் இந்த வழக்கில் முக்கியமாக நடந்தது. பிறழ் சாட்சிகள் இந்த அளவு ஏன் ஏற்பட்டது என்று விசாரிக்கப்பட்டதா? இல்லையே! இந்த வழக்கில் புதுச்சேரி நீதிபதி இடையில் மாற்றப்பட்டுள்ளார். நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திர சரஸ்வதி பேரம் பேசினார். அதற்கான குறுந்தகடுகள் எல்லாம்கூட வெளியில் வந்தன. இவை எல்லாவற்றிற்குப் பிறகும்கூட ஜெயேந் திரரும் விஜயேந்திரரும் இவர்களின் கூட்டாளிகளும் விடுதலை செய்யப்பட் டனர் என்பது சகிக்கவே பட முடியாத ஒன்று.
இந்தத் தீர்ப்பின்மீது மேல் முறையீடு  செய்யவும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தவறி விட்டது.  இப்பொழுது இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சி யான ரவி சுப்பிரமணியம் தான் பிறழ் சாட்சியாக மாறியதற்கான சூழ்நிலையை யும் நிர்ப்பந்தத்தையும் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜூனியர் விகடன் வார இதழில் (21.6.2015) பக்கம் 9,10) வெளி வந்துள்ள சேதிகள் முக்கியமானவை.
அரசு சாட்சியாக இருந்த நீங்கள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? நான் பிறழ்சாட்சி ஆகிவிட்டேன் என்று ஒரு வரி தகவல் மட்டும்தான் வெளியே தெரியும். அதற்குப் பின்னால் என்னென்ன நடந்தது என்று உலகத்துக்குத் தெரியாது. சிறைத் துறையின் முன்னாள் டி.அய்.ஜி.யாக இருந்த ஒருவர்தான் இந்த விவகாரங்களுக்கு சூத்ரதாரி. அவர், இப்போது காஞ்சி மடம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரியாக இருக் கிறார். அவர் மூலமாக அப்பு, கதிரவன் ஆகியோர் என்னை மிரட்டினர். புதுச் சேரிக்கு எவிடென்ஸ் கொடுக்க செல்வ தற்கு முதல் நாள் அன்று காஞ்சிபுரம் சப்-ஜெயிலுக்குள் இருந்த என்னை கதிரவன், தனி அறையில் என்னைச் சந்தித்தார். காஞ்சி பெரியவருக்கு எதிராக கோர்ட்டில் ஏதாவது சொன்னால் உன் கதையையே குளோஸ் பண்ணிடுவோம் என்று நேருக்கு நேர் மிரட்டும்போது நான் என்ன செய்ய முடியும்? அதுவும் அரசு சாட்சியாக ஜெயிலுக்குள் இருக்கும்போதே இந்த நிலை. தனி மனிதனாக நான் என்ன செய்ய முடியும்? உயிர் பயம்... அவர்கள் சொல்படி நடக்க வைத்தது. பண பலம், ரவுடிகள் பலம் மூலம் கொலை வழக்கில் இருந்து அனை வரும் விடுதலை ஆகி விட்டார்கள். அவர் களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றுதான் இப்போது முதல்வர் தனிப் பிரிவில் புகார் கொடுத்துள்ளேன்
சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வந்து ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. இப்போது ஏன் புதி தாகப் புகார் சொல்கிறீர்கள்?
சங்கராச்சாரியார் உள்பட அனை வருமே குறுகிய கால சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆகி விட்டனர். ஆனால், சுமார் 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு, ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.2013 அன்று உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது. நான் வெளியே வந்த பிறகும் ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதிரவனும் இறந்து விட்டனர். எனவே, நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன். பிறழ்சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட எனது செயலை எனது மனசாட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இரவும், பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராதா கிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வக்கீலை 8.6.2015 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மைகளை எல்லாம் கூறுவதற்கான ஆலோசனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.
புகார் கொடுத்த பிறகு உங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்ததா?
ஆம். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் அரசு வழக்கறிஞரை நான் அன்று சந்தித்தபோது ஜெயேந்திரர் வழக்கறிஞர்களும் அந்த வழக்கில் தொடர் புடைய சுந்தரரேசய்யரும் என்னைப் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார். பெரியவா இன்றைக்கு வரச் சொன்னார். சாயங்காலம் வந்துவிட்டுப் போ என்றார். நானும் மாலையில் ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது ஜெயேந்திரர் என்னிடம், என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப் போகிறாயா? உன்னையும் உன் குடும்பத் தையும் தொலைச்சிப்புடுவேன் என்று மிரட்டினார். அங்கிருந்த சுந்தரேசய்யர் என்னைப் பார்த்து, நீ பெரியவாளை பகைச்சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. சென்ட்ரல் கவர்மென்ட்டுக்கே ஆலோசக ராக அவர் இருப்பது தெரியாதா? என எச்சரித்தார்.
சிறிது நேரத்தில், காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்.அய்.-யாகப் பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் வந்தார். அவர், நீ பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய் தால் காணாமல் போயிடுவாய். பக்குவமா நடந்துக்கோ என்று எச்சரித்தார். இவர் களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்தேன்
காஞ்சி மடத்தில் நீங்கள் நடத்திய பேரம் படியாததால்தான் இப்போது புகார் கொடுத்ததாகச் சொல்கிறார்களே?
பணம் பொருளுக்கு ஆசைப்பட்டிருந் தால் நான் எப்போதோ செட்டில் ஆகி இருப்பேன். 9 வருடங்கள் ஜெயிலில் இருக் காமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தி ருப்பேன். பணத்தோடு பல நாடுகளைச் சுற்றி வந்திருப்பேன். 9 ஆண்டுகாலம் காத்திருந்து பணம்கேட்டு இப்போது மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் அம்மா ஆட்சி யில் நீதி நிலைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தைரியமாகப் புகார் கொடுத் துள்ளேன். முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல், பல சாட்சிகளை இவர்கள் கலைத்துள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் உள்ள எஞ்சிய சாட்சிகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர் உள்ளிட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சொல்கிறார் ரவிசுப்பிரமணியம்.
ரவி சுப்பிரமணியத்தின் இந்தப் பேட்டி தன்னிலை விளக்கம் கொண்டதாகவே இருக்கிறது. கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவியிடமும் ஜெயேந்திரர் சார்பில் பேரம் பேசப்பட்டது (பெட்டிச் செய்தி காண்க).
இதன் அடிப்படையில் மேல் முறையீடு செய்யப்படுமா? நாடே எதிர்ப்பார்க்கிறது.
--------------
--------------
ஜெயேந்திரர் பேரம் பேசினார்
உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?
என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும் அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும் தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே மிரண்டு போயிட் டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.
அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ, மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப் போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும் தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன். மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார். ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட சொல்லியிருக்கார்.
ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம் கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக்காரர்களோ வந்தா மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன் சொல்லணும்? அவர் தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே ஆகணும்!
சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)
--------------
குற்றப் பத்திரிகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் வியாழக்கிழமை இரவு (11.11.2004) கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் வெள்ளிக்கிழமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மா மகன் சங்கரராமன். இவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 2004 செப்டம்பர் 3ஆம் தேதி மாலை கோயில் அலுவலகத்தில் இருந்த சங்கரராமனை அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக  வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்படுவதற்கு 2 நாள்களுக்கு முன்னர் ஜெயேந்திரருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து சங்கரராமன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். உங்களைப் பற்றிய எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்லி விடுவேன் என்று அவர் அக்கடிதத்தில் ஜெயேந்திரரை மிரட்டியுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். காலை 6.15 மணிக்கு போலீஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு (எண்1) ஜெயேந்திரர் அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜி. உத்தமராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார் - அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் காலை 7.35 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குற்றப்பிரிவு 302,120-பி, 34,201 ஆகிய பிரிவுகள்: கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் போலீசார் ஜெயேந்திரர்மீது பதிவு செய்துள்ளனர்.
(தினமணி 13 நவம்பர், 2004, சனிக்கிழமை சென்னை)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...