Thursday, July 24, 2014

கோபமும், உப்பும்! ஓர் ஒப்பீடு!


 பொதுவாக கோபப்படுதல் உடலுக் கும் நல்லதல்ல; நம் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்கூட விரும்பத் தக்கதல்ல. சில பிள்ளைகளைத் தொட் டால் சிணுங்கிகளாக எதற்கெடுத்தா லும் கோபப்படுவது மாதிரி, குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்து விடு கிறார்கள்.

அதற்காக கோபமே வராதவர் களாகவே மனிதர்கள் எல்லாம் மாற வேண்டும் என்று கூறுவது வாழ்வியல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை நாம் எவரும் மறந்துவிடக் கூடாது.

சினம் (கோபம்) என்பது சேர்ந் தாரைக் கொல்லிதான் - உண்மைதான்.

அடக்கமாக எதிர்கொள்ளவேண் டிய பலவற்றை, உரத்து ஓங்கிய குரலில் பேசி இருப்பதையும், இனி வர வேண் டிய பல உயர்வுகளையும் கூட இழந்த வர்கள் பல ஆயிரக்கணக்கில் உண்டு.

நமது உளப்பாங்கு, உடல்நிலை எல்லாவற்றையுமே அதிக கோபம் பெரிதும் கெடுத்துவிடுகிறது!

ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) பலருக்கு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், அடிக்கடி சிலர் எல்லை மீறிய கோபத்தை அவர்கள் வெடித்த எரிமலை போல் கொட்டித் தீர்ப்பதேயாகும் என்பது மருத்துவர்களின் கணிப்புகளில் ஒன்று.

அதோடு, ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) உடைய பலருக்கு, திடீர் திடீ ரென்று கோபம் கொப்பளித்துக் கொண்டு வருவதும் தவிர்க்க இயலா தவை என்பது விசித்திரமான ஒன்றுதான்!

எல்லை மீறிய கோபம் வரும்போது அதை அடக்குவதைவிட, உடலுக்கு, உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து, கேடு வேறில்லை. வெடித்து வெளியே கொட் டப்பட்டு, கோபம் தாங்காமல் வெளி யேறி விடுவதனால், இயல்பு நிலைக்கு மனிதர்கள் திரும்பும் வாய்ப்புள்ளது.

அதிகக் கோபம் வரும்போது உடன் அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு பகுதிக்குச் சென்று அமர்ந்தோ, நடந்தோ இருப்பது நாம் அதிலிருந்து விடுபட உதவி செய்வதாகும்!
எப்போதும் கோபமே வராதவர் இவர் என்று யாரையாவது நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்தால், அவரை எளிதில் நம்பி விடாதீர்கள்!

மனிதர்கள் அழவேண்டிய நேரத்தில் அழவேண்டும்; சிரிக்கவேண்டிய நேரத் தில் சிரிக்கவேண்டும் - கலகலப்பாக. வெட்கப்படவேண்டிய நேரத்தில் வெட்கப்படவேண்டும். அதுதான் இயல்பு நிலை. அதை விடுத்து, கோபம் வர வேண்டிய நேரத்தில்கூட அவர்கள் கொஞ்சுவதுபோலவோ அல்லது மிக சாந்தமாக அதனை சகித்துக் கொள் வதோ, சமாளித்துக் கொண்டதாகக் காட்டுவதோ, அவர் உண்மை மனிதர் அல்ல; ஒப்பனை மனிதர் என்பதற்கான அடையாளம் ஆகும். அவர் நம்மிட மிருந்தோ அல்லது அவரது தலைமை - எஜமானர் - மேலாளர் இவர்களில் எவரிடமிருந்தோ, எதையோ பெற, திட்டமிட்டு நாடகமாடுகிறார், நடிக்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும்.

உடம்புக்கு உப்புச் சேர்க்கை போன் றதே, வாழ்க்கையில் கோபம் வருவதும், கொள்வதும்!
உணவில் உப்பு தேவைதான். அது கொஞ்சம் கூடி விட்டால், நன்கு சமைத்த உணவு உண்ணுவதற்கு ஏற்ற தாகாமல், குப்பையில் எறியவேண்டிய தாகி விடுகிறதல்லவா, அதுபோல!

ஆனால், அதேநேரத்தில் போதிய அடிப்படை உப்பு சத்து உடல்நலம் கெடாமல் இருப்பதற்கு மிகவும் இன்றி யமையாததல்லவா?

உடம்பில் உப்புச் சத்து கூடுதலில் சிறுநீரகம் கெடுகிறது; மிகவும் குறைந் தால் மற்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் - உயிர்க்கொல்லி யாகவும் ஆகிவிடுகிறது!

கூடினாலோ, இருதயம் திடீரென்று நின்று விடுகிறது - மாரடைப்புமூலம். எனவே, அளவான கோபம், நியாயமான கோபம் - அளவான உப்பு போன்றே தேவை! தேவை!!

அக்கிரமம், அநீதி இவற்றை சகிக் காத கோபம் தேவையல்லவா?

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...