Wednesday, February 12, 2014

கிரிக்கெட் சூதாட்டம்: அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை


ஊழல், லஞ்சம் என்பது பற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரச்சினை இருந்து வருகிறது. ஊழல், லஞ்சம், பேரம், சூதாட்டம் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான் - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வும் வேண்டியது தான்.

ஆனால் நம்நாட்டு ஊடகங்கள் அரசியலில் நடை பெறும் ஊழல்களைப் பற்றித்தான் ஓங்காரக் கூச்சல் போடுகின்றன.

திறமையைப் பயன்படுத்தித் தீரவேண்டிய விளையாட் டில் கூட சூதாட்டம் நடைபெறுகிறதே!. விளையாட்டுகளில் கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்ஸிங்) தான் பிரதான மானது.

மற்ற விளையாட்டுகளில் சூதாடுவது கொஞ்சம் கடினம்! கிரிக்கெட்டில் அதற்கு தாராளமான அளவு இடம் உண்டு. மேலும் பணம் காய்ச்சித் தொங்கும் மரமாக -  சந்தையாக அது ஆகிவிட்டதால் சூதாட்டம் பெரிய அளவிற்கு சூடு பிடிக்கிறது. எத்தனையாவது ஓவரில் எந்த பந்தை எப்படி வீச வேண்டும்? எப்படி அவுட்டாக வேண்டும்? என்பது வரை முன்னதாகவே முடிவு செய்யப்படுகிறது. இதற்கு உடன் படும் விளையாட்டுக்காரர்களை வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் கூறிட வேண்டும்.

பார்ப்பனர் - பணக்காரர் - பனியாக்களின் முக்கூட்டு ஒப்பந்தம் - இதில் புகுந்து விளையாடுவதால் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்.

சூதாட்டம்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடிய சீனிவாசன் அவர்களின் மருமகன் குருநாத் மெய்யப் பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப் பாளர் ஆவார். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் அய்பிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர் என்பது நீதிபதி முகுல்முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பரின் மாமனார் - இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதையும் தாண்டி, அகில உலக அமைப்பின் தலைவராகவும் பெரிய பதவிக்குச் சென்றுள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை உயர்ஜாதிப் பார்ப்பனர் களின் தனி உடைமையாகவே பெருமளவுக்கு ஆகிவிட் டது. இல்லாவிட்டால் இந்திய மண்ணுக்குரிய ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அந்நிய நாட்டு விளை யாட்டான கிரிக்கெட்டை முதன்மைப் படுத்துவார்களா?  இங்கு மட்டும் சுதேசியம் காணாமல் போய்விடும்.

டெண்டுல்கர் என்ற பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததோடு பாரத ரத்னா பட்டமும் வழங்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

கிரிக்கெட்டில் கூட உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்கள் கபில்தேவும், தோனியும் அணித்தலைவராக இருந்தபோதுதானே!

இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் பாரத ரத்னா மட்டும் டெண்டுல்கருக்கு.

எல்லாம் வருண பேதம் தான்!

பண மழை கொட்டுகிறது

இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

ஏ பிரிவுக்காரர்களுக்கு (7 பேர்) ஓர் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். பி - பிரிவிலும் ஏழு பேர்; அவர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.35 லட்சம். சி - பிரிவினர் மூவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.20 லட்சம்.

இதோடு முடியவில்லை. உள்நாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம்; வெளிநாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2.40 லட்சம்.
அணியில் இடம் பிடித்தால் போதும், விளையாடாமல் இருந்தாலும் அந்தத் தொகை கிடைத்துவிடும். இது அல்லாமல் விளம்பரம்மூலம் கிடைப்பதோ கோடிக்கோடி ரூபாய்கள். ஆண்டு ஒன்றுக்கு மொத்த குத்தகை.

அய்.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது; விளையாட்டுக்காரர்களை (விளையாட்டு வீரர்கள் என்று கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நாம் கூறுவது கிடையாது!) ஏலம் எடுக்கிறார்கள் என்பதைவிட, இவர்கள் ஏலம் போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இது எத்தகைய கேவலம்! முதலில் அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்யவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

பார்ப்பனர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால், காற்றடித்துப் பறக்க விடுகிறார்கள். அதன் தீய விளைவு நம் ஊரில் வயல்வெளிகளில்கூட நம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர். நம் மண்ணுக்குரிய சடுகுடு காணாமல் போய்விட்டதே!

நம் இளைஞர்களைப் பீடித்த நோயாகவே கிரிக்கெட் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான கலாச்சாரச் சீரழிவு தான். செண்டை மேளம் என்று கேரளாவிலிருந்து இப் பொழுது இறக்குமதி ஆகிவிடவில்லையா? எளிதில் அயல் கலாச்சாரத்திற்கு விலை போவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாதோ - வெட்கக் கேடு, நம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை இதிலும் ஏற்படுத்தவேண்டும்.

கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
12.2.2014 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...