Thursday, October 17, 2013

அந்தரங்கம் புனிதமல்ல

இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).
எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?
5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh My Soul
என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!
ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!
ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...