Saturday, June 15, 2013

இணைய தளக் கட்டுரைக்கு மறுப்பு (1)

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி!
திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்! - ஆர்
பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த அருள் என்கிற தோழர் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும் - திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு எனும் கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அக்கட்டுரை எம் நண்பரால் எமக்கு அனுப்பப்பட்டு நாம் அதை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தோம். அக்கட்டுரை தொடர்பாக எமது கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.
தோழர் அருளின் கட்டுரை மொத் தம் ஏழு பக்கங்கள் உள்ளன. அதில் நுதல் பொருள் (Subject Matter) முழுவதுமாக இல்லை. நிகழ்வரத்தை (Facts) அவர் நடுநிலையோடும் ஆரா யவில்லை, எழுதவும் இல்லை. மேலும் அவர் ஒரு தலைப்பட்சமாகவே எழுதி யிருக்கிறார். ஆயினும் அவருக்கு நாம் நன்றி தெரி விக்கின்றோம். 1921 ஆம் ஆண்டு பின்னி ஆலை வேலை நிறுத் தம் வரலாற்றுப் புகழ் பெற்றது ஆகும்.
இந்நிகழ்வு நீதிக்கட்சி காலத்தில் - அவர்களின் ஆட்சியின்போது நடைபெற்று இருக்கிறது, ஆகவே இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண் டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத் தியாயம் இடம்பெறும். எம் மனத்தி லிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச் சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா? பின்னி வேலை நிறுத்தம் குறித்து நிரம்பச் செய்திகள் இருக் கின்றன. ஆனால், கட்டுரையாளர் அருள் ஏதோ ஒன்றை தனக்குச் சாதகமானது போன்ற கருத்தை இணைய தளத்தில் கொளுத்திப் போட்டு விட்டார்.
நமது நாவலர் நெடுஞ்செழியன் மேடைகளில் உரை நிகழ்த்துகிறபோது - எதிரிகளுக்குப் பதில் சொல்கிறபோது, மொட்டை தாதன் குட்டையில் விழுந் தான் என்பதுபோலப் பேசினால், எழுதினால் எப்படி? என்று எதிரிகளை வினவுவார். மொட்டை தாதன் என்றால் எந்த ஊர் மொட்டை; எந்த இடத்தில் உள்ள குளத்தில் விழுந்தான்? என்கிற விவரம் வேண்டாமா? என்று கேட்பார். அதைப்போல நாமும் இந்த இணைய தளக் கட்டுரையாளரைக் கேட்கத் தோன் றுகிறது. அவர் எழுதியுள்ள கட்டுரையில் விவர அடர்த்தியும், ஆழமும் இல்லாமல் பிரச்சினை என்ன என்பதைப் படிப்ப வருக்குப் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கிறது.
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் நிகழ்வுகளைப்பற்றிய நிகழ்வரங்களின் உண்மைகளை நாம் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
சென்னை மாநகரத்தின் பழைய தலைமுறையினருக்கு பி அண்ட் சி மில் என்றால் நன்றாகத் தெரியும். இப்போது அந்தப் பெயர் மெல்ல மறைந்து வருகிறது. அந்த மில் மூடி 17 ஆண்டுகள் ஆகி விட்டன. சுமார் 118 ஆண்டுகள் இந்த ஆலை நடைபெற்று வந்திருக்கிறது. ஆலை தொடங்கப்பட்டு 40 ஆவது ஆண் டில் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒரு வேலை நிறுத்தத்தை சந்தித்தது - சென்னை! அவ்வேலை நிறுத்தம் நிகழ்ந்த ஆண்டு 1921. இதைப்பற்றி இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவையும், அவசியமும் நமக்கு இருக்கிறது.
பங்கிங்காம் மில் (1878), கர்நாடிக் மில் (1882) என்கிற இரண்டு ஆலைகள் சென்னை சூளை பட்டாளம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாலைகள் இரண்டும் 1920 முதல் ஒரே நிர்வாகத் தின்கீழ் செயல்பட்டன. இந்த ஆலைகள் தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டு களுக்குப் பிறகுதான் சென்னைத் தொழி லாளர் சங்கம் என்கிற அமைப்பு உருவா யிற்று. அப்போது எந்தவித சட்டங்களும், தொழிற்சங்கம் பற்றி இயற்றப்படவில்லை. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் அநேகமாக முதல் உலகப் போர் முடிந்த நேரம், அந்தக் கால நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?
உணவுப் பஞ்சம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இப்பகுதிகளில் மழையே இல்லை, காய்ச்சலால் பலர் மடிகின்றனர், வாழ்க்கையே வெறுமையாய் இருக்கிறது
- என்று அந்தக் கால பஞ்ச நிலை மையைக் குறித்து 28.10.1918 ஆம் நாள் மறைமலையடிகள் எழுதிய நாள் குறிப்பு கூறுகிறது.
இப்படி ஒரு நிலைமை இருந்த போதுதான் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் சென்னை மாநகரெங்கும் தோற்றுவிக்கப்பட்டன. ஏன்? போலீ சாருக்கும் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். எந்தவிதமான தொழிற்சங்க சட்டங்களும் அப்போது இயற்றப்படவில்லை. இங்கே இடது சாரி இயக்கத் தலைவர்களின் மார்க் சியம் பயிலப்படவில்லை. அதனைப் பற்றிய நிழலுருவப் பேச்சு இல்லை. ஆனால், பின்னாளில் மார்க்சிய பார்வையில் வேலை நிறுத்தத்தைப் பார்த்தார்கள்; ஆராய்ந்தார்கள். அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் சிக்கலை - பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் ளவே விரும்பினார்கள். எனவே, தேவைக் கருதிதான் சங்கம் உருவா கிறது. வாழ்நிலையிலிருந்து ஓர் அமைப்பு கட்டப்படுகிறது; உருவா கிறது. இரண்டு ஆலைகளிலுமாகச் சேர்ந்து தோழர் அருள் குறிப்பிடுவது போல 14,000 தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.
ஆண்டு    ப.ஆலை    கர்.ஆலை
1878            300                     -
1907           4304                3954
1920           5526                5158
இதுதான் வரலாறு சொல்கிற புள்ளிவிவரமாகும். புகழ்பெற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றபோது பதி னொயிரம் தொழிலாளர்கள் என்று திரு.வி.க. எழுதுகிறார். புள்ளி விவரப்படி இரு ஆலைகளிலும் சுமார் 11,000 பேர் பணியாற்றி வந் திருக்கிறார்கள்.
(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...