Wednesday, January 9, 2013

தி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்!- கி.வீரமணி வரவேற்பு


தி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்!
கலைஞர் அறிவிப்பு-காலச் சிலாசாசனம்!
சாதித்துக் காட்டுவார் மு.க. ஸ்டாலின்
கட்டுப்பாடு காத்து தி.மு.க.வின் பணிகள் தொடரட்டும்!
தமிழர் தலைவரின் மிக முக்கிய அறிக்கை
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
தி.மு.க. தலைமைப் பொறுப் புக்கு மு.க. ஸ்டாலினை நான் முன் மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். கட்சியின் தேர்தலில் குறிப்பாக தலைமைக் கழகத்தின் தேர்தலில் - தலைவராகவோ, பொதுச் செயலாளர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால், அதை முன் மொழிந்து பொதுக் குழுவிலேதான் பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமே யானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி - இப்போது சொல்கிறேன் -  ஸ்டாலினைத்தான் முன் மொழி வேன். ஏனென்றால், இது ஏற்கெனவே பொதுச் செயலாளர் பேராசிரியர் முன் மொழிந்து, அதை நான் வழிமொழிவ தாகத்தான் அர்த்தம்.
- இவ்வாறு 6.1.2013 அன்று  அண்ணா அறிவாலயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை யளிக்கும் வகையில் மானமிகு சுயமரி யாதைக் காரராக என்றும் வாழும் தமிழ்ச் சமுதாய தனிப் பெரும் தலைவர், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அளித்துள்ள பதில், வெறும் சொற் கோவைகள் அல்ல; தி.மு.க. தொண்டர் களுக்கும், உறுப்பினர்களுக்கும் நாட்டுக் கும் அறிவிக்கப்பட்ட செப்பேடு, சிலாசா சனம்; சீரிய நல் கல்வெட்டும் ஆகும்.
சமுதாய கொள்கை உடைய ஒரே அரசியல் கட்சி தி.மு.க.!
தி.மு.க. என்பது, உண்மையான இன உணர்வாளர்கள், திராவிட சமுதாய வளர்ச்சியில் ஆழமான பற்றும், பாசமும் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மாபெரும் இனப் பாதுகாப்பு அரண் - பெரியார் தம் லட்சியங்களை அண்ணா வழியில், அரசியலில் - முடிந்தவரை அயராது செயலாக்கம் செய்யும் ஓர் அற்புதமான அரசியல் விஞ்ஞானம் என்பது தெரியும்; தெரிய வேண்டும். சமுதாயக் கொள்கை கொண்ட அரசியல் இயக்கம் என்பது தி.மு.க. மட்டுமே! இது தி.மு.க.வுக்கே உரித்தான தனிச் சிறப்பு!
தாய்க் கழகமான திராவிடர் கழகத்தி லிருந்து 1949இல் அது பிரிந்த நிலையில், அதன் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்:
தி.மு.க. தாய்க் கழகமான தி.க.வுக்கு வாழையின் கீழ்க் கன்று போல் அமையாது; மாறாக, ஆல மரத்தின் விழுதாகவே என்றும் இருக் கும். திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவே என்றும் இயங்கும் என்று கூறினார்.
அது வெறும் பேச்சல்ல; நீர் மேல் எழுத்தல்ல என்று நிரூபித்துக்காட்ட காலவெள்ளத்தையும் அண்ணா பயன்படுத்திக் கொண்டார்; 1967-ல் தாம் பறித்த வெற்றிக்கனியை நேரே திருச் சிக்கே சென்று தனது தலைவர் தந்தை பெரியார்தம் காலடிகளில் காணிக்கையாக வைத்து ஆசி பெற்றார்; அமைச்சரவையை அய்யாவுக்கே காணிக்கை என்று சட்டப் பேரவையில் கூறி சரித்திரம் படைத்தார்!
18 ஆண்டுகள் பிரிவு அவர்களைப் பொறுத்தவரை, கனவாய் மறைந்து, கரைந்து போனது; காவலுக்குக் கெட்டிக்காரப் பணியை கருஞ்சட்டைக் கழகம்   இன எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் கேடயமாய் திராவிடர் கழகம் தந்தை பெரியார் தலைமையில் நேர்த்தியுடன் செயல்பட்டது - செயல்பட்டும் வருகிறது.
பெரியாருக்கு ஏற்பட்ட கவலை!
அண்ணா மறையும்போது அதன் எதிர்காலம் பற்றி  தி.மு.க.வினரைவிட அதிக கவலைப்பட்டவர் அய்யா அவர்கள் என்பது அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கே தெரியும்.
தி.மு.க. - கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி யாரும் போட்டு விடாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு
அவர்களுக்குள்ளே ஏதாவது பெரும் பிளவு, பிரச்சினை ஏற்பட்டு, கவிழ்த்துக் கொண்டால் ஒழியதி.மு.க.வை வீழ்த்த எவராலும் முடியாது  என்று கூறி எச்சரிக்கை மணியையும் ஓங்கி அடித்தார் அறிவு ஆசான் தந்தை பெரியார்!
அது மட்டுமா? அவர்களுக்குத் தந்தை யாக, குருவாக இருந்து பாடமும் எடுத்தார்;
அண்ணா சொன்ன  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் உள்ள மற்றமுன் இரண்டும்கூட எனக்கு முக்கியமல்ல; இயக்கம் காப்பாற்றப்பட, ஒழுங்குற நடைபெற கட்டுப்பாடுதான் உயிர் மூச்சு என்றும்  உணர்த்தினார்!
எந்த ஒரு இயக்கமானாலும் இது மிகவும் முக்கியமான பாலபாடமாகும்.
பெரியாரின் ஆணை
அண்ணா மறைவுற்ற நிலையில், அதனைக் கட்டிக் காப்பாற்றி கரை சேர்க்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதி என்ற கப்பல் தலைவனுக்கே (கேப் டனுக்கே) உண்டு என்பதை உணர்ந்தே, அவர்  தலைமையேற்க பெரியார் அவ ருக்கே ஆணையிட்டார். அதற்கு வாழும் சாட்சி உண்டு.  அறிஞர் அண்ணாவும் கலைஞரின் ஆற்றலை அளந்து சரியாக மதிப்பீடு செய்ததால்தான், மன்னார்குடி பொதுக் கூட்டத்தில்,
முற்பாதியை நான் எழுதுகிறேன் என்றால் பிற்பாதியை என் தம்பி கருணாநிதி செய்து முடிப்பார் என்ற கருத்துப்பட பொது மக்களுக்கே சொல்லத் தயங்க வில்லை.
கலத்தைச் செலுத்திய மாலுமி
கலைஞரின் தலைமையால் பல்வேறு சாதனைகள் ஒருபுறம் என்பதைவிட, சோதனைகள், நெருக்கடி காலத்தில் இயக்கத்திற்கு ஏற்பட்டபோது, அதனை எதிர்கொண்ட நேர்த்தி, அரசியல் ஞான அணுகுமுறை, இயக்கத்தால் வளர்ந்த பிறகு யூதாஸ் ஆனவர்களின் முதுகு  குத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி, சுனாமிகளையும் சந்தித்து, எதிர் நீச்சலில் போட்டு வெற்றி கண்டு, தி.மு.க. என்ற கலத்தை சேதாரமில்லாமல் செலுத்தும் சிறந்த மாலுமியாக இருந்து வருகிறார்!
அவருக்கு அருந்துணையாக அசைக்க முடியாத கொள்கை வீரராய் - அவரினும் மூத்தவராய் இருப்பினும், ஆற்றல் காரணமாக அவரையே தலைவர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அதை அகிலத்திற்கும் வெளிப்படையாக கூறும் இனமானப் பேராசிரியரும் அமைந்தது - பெரு வாய்ப்பே ஆகும்!
கடும் உழைப்பிற்கு மறுபெயரே கலைஞர். இந்நிலையில் தேர்தல் வெற்றி - தோல்விகள் எந்த அரசியல் கட்சிக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே தவிர, இறுதியை முடிவு செய்யும்  எழ முடியாத சோகங்களாகி விடாது.
வேக நடை போடுவோர், தடுக்கி விழுவது போன்றது; அதனால் எந்த இயக்கமும் அழிந்து விடாது - கொண்ட கொள்கையில், லட்சியப் பயணத்தில் உறுதியாக இருந்தால்.
முடிந்து போன கதையல்ல தி.மு.க., அதனால்தான் தி.மு.க. இப்போது (விஸ்வரூபம்), பெரு உரு கொண்டு வருகிறது.
இதை முடிந்து போன கதை என்போர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதமையாகும்.
இந்நிலையில், முதிர்ச்சி ஒருபுறம் என்றாலும், தவிர்க்க இயலாத இயற்கை முதுமையும் எவர்க்கும் இயற்கை என்ப தால், அடுத்த கேள்வி எந்த  - இயக்கத் திலும்  நிகழக் கூடியதுதான் - அதிலும் கல்லடி பெறத் தயாராக இருக்கும் காய்த்த மரமாகும் தி.மு.க. விலக்காகுமா?
கேள்வி எழுப்பியோர் இருவகையினர்
அத்தகைய கேள்வி எழுப்பியவர்கள் இரு வகையினர்.
1. நல்லெண்ணத்தோடு நாட்டாருக்கு உணர்த்திட வேண்டும் என்ற அவாவு டையோர் ஒரு வகை;
2. இன எதிரிகள் - கலக மூட்டியே காசு சம்பாதிப்போர் - இன உணர்வு இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தங்கள் இனத்தின் மகுடங்களைப் பாதுகாக்கச் செய்யும் விஷமதான மனப்பான்மையுடை யோர் இன்னொருவகை!
இதை வைத்தே பல ஊடகங்கள் தீனி பொறுக்கி தினம் தினம் வாழ்கின்றன!
அவற்றுக்கெல்லாம் ஆணி அடித் ததைப் போல,   இந்த ஈரோட்டுக் குருகுல மாணவர் இணையற்ற முறையில் பதில் கூறி, இராவணனின் மைந்தன் - இந்திரனை ஜெயித்த இந்திரஜித்து என்று காட்டி விட்டார்!
தாய்க் கழகத்தின் மகிழ்ச்சி!
தாய்க் கழகம் இது கேட்டு மகிழ்ச்சிக் கண்ணீர்த் துளிகளை விடுகிறது!
முன்பும் கண்ணீர்த் துளிகள்; இப் போதும் கண்ணீர்த் துளிகள் - பன்னீர்த் துளிகளாக!
யாருக்கோ முடிசூட்டும் அறிவிப்பல்ல இது; உளறுவாயர்களே! இது நாதியற்றுப் போகும் கலகக் கூடாரமாக ஒருபோதும் ஆகாது - கருச்சிதைவு முயற்சிகளால் என்று பதில் கூறும் பாங்குதான் அம் மகிழ்ச்சிக்குக் காரணம்!
எதிர்காலக் கேள்வி குறிக்குக் கம்பீரமான விடையளித்த பகுதி இது.
எனவே தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களை கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, தாய்க் கழகத்திற்கு இப்போது கலைஞரின் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ளது!
கட்டுப்பாடு காப்பீர்!
மானமிகு கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி தேவையற்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்து முத்திரை பதித்து விட்டார். தலைமையின் அறிவிப்பை ஏற்று கட்டுப்பாடு காத்து தி.மு.க.வினர் வீறு கொண்டு களப்பணி செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.
கலைஞரின் ஆயுள் இதனால் நீளும், கழகத்தின் ஆயுளும், வளர்ச்சியும் இதன் மூலம் மேலும் வளரும்.
சருகுகளின் சலசலப்புகள் தானே அடங்கும். வாழ்க தி.மு.க., வாழ்க கலைஞர் - பேராசிரியர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.1.2013





இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...