Friday, December 28, 2012

திராவிடர் கழகத்தை எதிர்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும்!


பெரியார் ஊழித் தீ - யாரும் அழிக்க முடியாது!
திராவிடர் கழகத்தை எதிர்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும்!
எண்ணூர் பெரியார் சிலை திறப்பு விழாவில் எழுச்சித் தமிழர் கர்ச்சனை!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் துவங்க இருக்கும் மருதம் தொலைக்காட்சிக்கு தொல்.திருமாவளவன் அவர்களிடம் தமிழர் தலைவர் மூலமாக தங்க நாணயம் நன்கொடை வழங்கிய தோழர் (எண்ணூர், 25.12.2012)
எண்ணூர், டிச. 27- திராவிடர் கழகத்தின் கொள்கையை எதிர்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.
எண்ணூரில் 25.12.2012 மாலை நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது:
புதிய தலைமுறைக்கு பகுத்தறிவுச் சிந்தனை வெளிச்சத்தைப் பரப்பித்தான் இங்கே தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டுள்ளது. அதற்காகப் பாடுபட்ட தோழர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
யாருக்குச் சிலை திறப்பு?
நாமெல்லாம் தலைநிமிர்ந்து நடமாடமுடிகிறது என்றால் அதற்கான உரிமையைப் பெற்றுத் தந்த தலைவருக்கு நன்றி செலுத்தவே இங்கே சிலை திறக்கப்படுகிறது. நன்றி உணர்வு உள்ளவர்கள் வரவேற்பார்கள். நன்றி உணர்வு இல்லாதவர்கள் குறை கூறுவார்கள். அதுபற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மூதறிஞர் என்று கூறப்படும் ஆச்சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியிலே எங்கள் கலைஞர் அமரமுடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் அய்யா.
நான் தலை நிமிர்ந்து நிற்பது யாரால்?
இந்த மேடையிலே தலைநிமிர்ந்து நிற்கிறேன் - தோளுயர்த்தி நிற்கிறேன் என்றால் அதற்கான முழுப் பொறுப்பு தந்தை பெரியார் என்பதை மிகுந்த நன்றியோடு, உண்ர்ச்சியோடு தெரிவித்துக் கொள் கிறேன் (பலத்த கரவொலி).
திருமாவளவன் இப்படிப் பேசுகிறானே - உரிமை முழக்கமிடுகிறானே என்று சிலர் ஆத்திரப்படு கிறார்கள்.  நியாயமாக என்மீது ஆத்திரப்படுவதை விட என்னை தன்மான உணர்வோடு உரத்தக் குரலில் பேச வைத்த தந்தை பெரியார் மீது ஆத்திரப் படவேண் டும். எனக்கு இந்தத் துணிவைத் தந்த தந்தை பெரியாரிடம் ஆத்திரப் படவேண்டும். துணிவிருந்தால் தந்தை பெரியாரை எதிர்த்துப் பேசுங்கள் பார்க்கலாம்.
ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி
அந்த ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி சாதாரணமானதல்ல!
டாக்டர் அம்பேத்கர் ஜாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்துப் பேசினார். போராடினார் என்றால் அதற்கொரு நியாயம் இருக்கிறது. அவரே ஜாதிக் கொடுமையால் அவமதிக்கப்பட்டவர். அதற்காகப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் தந்தை பெரியாருக்கு என்ன அவசியம் வந்தது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவரா?
கீழ் ஜாதி என்று தள்ளி வைக்கப்பட்டவரா? இல்லையே! அவர் நினைத்திருந்தால் பார்ப்பனர் களின் தோளில் கை போட்டுக் கொண்டு செல்லலாமே!
அந்தஸ்துள்ள குடும்பத்தில் பிறந்தவர். பொரு ளாதார வளமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ வாழ்ந்திருக்க முடியும். தான் வகித்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு  செல்வச் செழுமைகளை எல்லாம் உதறி எறிந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தானே குரல் கொடுத்தார்? அதற்கான பாதையைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார்?
எத்தனை எத்தனை இன்னல்களை அதற்காக அவர் எதிர்கொள்ள நேரிட்டது? அழுகின முட்டையால் அடிக்கவில்லையா? எதற்காக அவர் அதனை ஏற்றுக் கொண்டார்? யாருக்காகப் போராடினார்? ஒட்டுமொத்த தமிழர் சமுதாயத்துக் குத்தானே வாழ்நாள் முழுவதும் போராடினார்.
பெரியாருக்கு ஈடு - இணை உண்டா?
எத்தனை அரசர்கள் தோன்றினார்கள்? எத்தனை மகான்கள், மகாபுருஷர்கள் எல்லாம் வந்தார்கள்? யாரும் ஜாதி இழிவைப் பற்றிக் கவலைப்பட வில்லையே. பெரியார்தானே சிந்தித்தார். அவர் சிந்தித்து எடுத்துச் சொன்னபிறகுதானே நமக்கு உணர்வு வந்தது? பெரியாருக்கு முன்னால் இதே கருத்தைக்கூட சிலர் அங்கொன்றும், இங்கொன்று மாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்.
இயக்கம் கண்டது யார்?
அயோத்திதாசர் பேசி இருக்கிறார், எழுதி இருக்கிறார் - வைகுந்த சாமி சொல்லியிருக்கலாம். அய்யன் காளிகர் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் தனிப்பட்டவர்கள் சொன்ன கருத்துக்களே தவிர, அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இயக்கம் நடத்தியவர் யார்? களத்தில் நின்று போராடியவர் யார்?
தனக்குப் பின்னாலும் அந்த இயக்கம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவர் யார்?  தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு தமிழர் தலைவர் எவ்வளவு சிறப்புடன் இயக்கத்தை நடத்திச் செல்லுகிறார்!
உலகத்திலேயே திராவிடர் கழகம் போன்ற நாத்திகத்தை - பகுத்தறிவைப் பறைசாற்றும் இயக்கம் உண்டா? அமைப்பு உண்டா? கிடையாதே! (பலத்த கரவொலி) பகுத்தறிவு பரப்பும் ஒரே விசன் (vision) திராவிடர் கழகமே.
ஜாதி என்னும் பருப்பு இங்கு வேகாது என்று சொன்னார்கள். அது முற்றிலும் உண்மை. பெரியார் என்னும் நெருப்பு சாதாரணமானதல்ல - அது ஒரு ஊழித் தீ! யாராலும் அதனை அணைக்க முடியாது - அழிக்கவும் முடியாது!
என்னை ஓரங்கட்டலாம்
திருமாவளவனை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டலாம். ஆனால் பெரியார் இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது.  பெரியார் இயக்கம் என்றால் அதில் திருமாவளவனும் இருக்கிறான்.
என்னை யாரும் தனிமைப்படுத் தவும் முடியாது. அந்தத் தைரியத்தில்தான் திருமா வளவனும் இருக்கிறான். சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்றாரே தந்தை பெரியார். கொலை வாளினை எடடா சில கொடியோர் செயல் அறவே என்று புரட்சிக் கவிஞர் பாடவில்லையா? புரட்சிக் கவிஞர் என்ன ரவுடியா? வன்முறையாளரா?
அத்துமீறு என்றால் திருமாவளவன் வன்முறை யைத் தூண்டுகிறான் என்று சொல்லலாமா?
பெரியார் திடலில் வளர்ந்தவன் திருமாவளவன்

எண்ணூரில் மோகன் குடும்பத்தார் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது.
நான் பெரியார் திடலில் வளர்ந்தவன். சமுதாயத் தைத் தெரிந்து கொண்டவன். அரசியலைக் கற்றுக் கொண்டவன். பெரியார், அம்பேத்கரை உள்வாங்கிக் கொண்டவன். ஆதலால் நாகரிகம் தெரிந்தவன். அவதூறாகப் பேச எனக்குத் தெரியாது. தமிழர் தலைவர் அடிக்கடி சொல்லுவார். எங்களுக்குச் சொந்த புத்தி தேவையில்லை; தந்தை பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்வார். நானும் அதைத்தான் சொல்லுகிறேன்.
வேண்டாம் அவதூறு!
வீணாக அரசியல் லாபத்துக்காக அவதூறுகளைப் பரப்பக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே மோதலை உண்டாக்க ஆசைப்படக் கூடாது. தொழிலாளர்கள் மத்தியிலே மாச்சரியங்களை ஏற்படுத்தக் கூடாது. எது சரி, எது தவறு என்று புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தைத் தமிழ் மண்ணில் தந்தை பெரியார் உருவாக்கி வைத்து உள்ளார். உணர்ச்சிகளைத் தூண்டி, வன்முறைகளை உருவாக்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம்.
தந்தை பெரியார் சிலை இல்லாத ஊரே இருக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களால் வணங்கத்தக்க, பின்பற்றத்தக்க தலைவர் தந்தை பெரியார். பெரியார் கொள்கைக்கு எதிர்ப்பு என்று வந்தால் திராவிடர் கழகத்தோடு தோளுக்குத் தோளாக நிற்பார்கள் விடுதலைச் சிறுத்தைகள் என்பதை பெரியார் சிலை திறப்பு விழாவிலே கூறிக் கொள்கிறேன் (கரஒலி அடங்க வெகு நேரமாயிற்று).
விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக வெடிக்கும் - முழங்கும். சொல், செயல்பாடு அனைத்திலும் துணை நிற்கும். பெரியார் வெல்க! ஜாதி ஒழிக!!
- என்று முழக்கமிட்டார் - விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...