Wednesday, November 28, 2012

ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!


சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு மூலதனம் பிரச்சினை:
வாக்கெடுப்பு நடத்தினால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக மாட்டோம் என்ற தி.மு.க. நிலைப்பாடுதான் சரியானது!
தமிழர் தலைவர் அறிக்கை

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்துத் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (27.11.2012) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு மூலதன முதலாளிகளை அனுமதித்தால் நம் நாட்டு சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், காங்கிரஸ், மற்றும் ஒரு சிலர் தவிர, எல்லோரும் எதிர்க்கிறார்கள். ஏனோ ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை இதில் பிடிவாதம் காட்டுகிறது.
மாநில அரசுகளுக்குச் சுதந்தரம் உண்டு. அனுமதிக்கவோ, மறுக்கவோ என்று கூறிடும் நிலையில் இதில் பிடிவாதம் காட்டுவது முரண்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும்.
தி.மு.க. இதில் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது; வாக்கெடுப்பை வலியுறுத்தி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சி திட்டமிட்டே நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. மக்கள் விரோதப் போக்கே ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் கேலிக் கூத் தாக்குகின்றனர்.
வாக்கெடுப்பு நடத்தினால்கூட, இன்றுள்ள சூழ்நிலையில் பல எதிர்க்கட்சிகளே ஆட்சியைக் கவிழ்க்க அவசரப்படாதபோது, தயாராக இல்லாதபோது, இப்போது  பாராளுமன்றத்தை நடக்க விடாமல் செய்வது எப்படி  நியாயமானதாகும்?
இந்நிலையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க., ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; அதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் காரணமாக அமைய மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. திராவிடர் கழகம் தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டைப் பாராட்டுகிறது.
பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனை உள்ள எதிர்க்கட்சிகளும் இதே நிலையை எடுப்பதன் மூலம் மதவெறிக் கட்சிகளை கரங்களை மறைமுகமாக வலுப்படுத்தக் காரணமாகி விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை  
27.11.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...