Monday, September 17, 2012

சில்லறை வர்த்தக அந்நிய முதலீடும்; சில்லரைத்தனமான விளக்கங்களும்


மத்திய அய்.மு.கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை விசு வாசத்துடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. வெள்ளியன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவை எடுத்த முடிவுகளைக் கண்டு பாரக் ஒபாமா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். இனி அவர் மிக தைரிய மாக இரண்டாம் முறையாக அதிபர் ஆவதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வார்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனங் களும் மன்மோகன்சிங் அரசின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. படுபாதாளத்தில் இருக்கும் அமெரிக்க பொருளா தாரத்தை தூக்கிநிறுத்த படாதபாடு பட்டு வரும் ஒபாமா சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு செயல்படும் விதம் போது மானதாக இல்லை.
பொருளாதார சீர்திருத்தங்களை விரைந்து அமலாக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித் திருந்தார்.அது மறைமுகமாக மன்மோகன் சிங் அரசுக்கு விடுத்த எச்சரிக்கைதான். அமெரிக்காவின் நலனுக்கு எது முக் கியம் என்பதை ஒபாமா நன்கு அறிவார். மன்மோகனும், அமெரிக்கா என்ன விரும்புகிறது என்பதை அறிவார்.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால் இந்தியாவிற்குச் செல்லும் வெளி வேலை ஒப்பந்தங்களை (அவுட் சோர் சிங்) வெட்ட வேண்டும் என்று கூறியவர் தான் ஒபாமா. இந்தியா சில சீர்திருத்த நடவடிக்கைகளைச் செய் தாக வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு, முன்னர் புஷ் அரசும் பின்னர் ஒபாமா அரசும் நிர்ப்பந்தம் அளித்து வந்திருப்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை உயர்த்தப்பட்ட பின்னணியில், இங்குள்ள சில  அரசியல் கட்சிகளிடையே சில அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சொந்த பல மற்ற மன்மோகன்சிங் அரசுக்கு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ் வாதி கட்சியும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அரசு கவிழ வேண்டியது தான்.
இந்த இரு கட்சிகளும் தங்களது மாநில அரசியலில் மக் களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அய்முகூட்டணி அரசு மூழ்கிக்கொண்டிருக் கும் நிலையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கட்சிகள் எந்த நேரத்தி லும் ஃபீஸ் ஒயர் பிடுங்க தயங்காது என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான் வெளியேறுவதற்கு முன்னர் அவசர அவசரமாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கும் முடிவை மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துள் ளனர் என்று கூறப்படுகிறது.
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை 51 விழுக்காடு வரையும் ஒற்றைப் பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 விழுக்காடு வரையும் அந்நிய முதலீடுகளை அனு மதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையும் தரச்சான்றிதழ் அளிக்கும் ஸ்டாண்டர்டு அன் பூவர்ஸ், பிட்ச் அன்ட் மூடி ஆகிய நிறுவனங்களும் என்ன சொல்லியிருக்கின்றன தெரியுமா? உலகளாவிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு கவிழ்ந்து விட்டது என்று கூறியுள்ளன. அந்த உலகளாவிய நிர்ப்பந்தம் என்பது உண்மை யில் அமெரிக்க நிர்ப்பந்தம்தான் என விளக்க வேண்டியதில்லை.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு அதிகப்படியான விலையை பெறுவார்கள் என்றும் கிரா மப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்படும் என்றும் சிலர் வாதிடு கிறார்கள். ஆனால் ஏற்கனவே சில்லரை வர்த்த கத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்த நாடுகளில் இருந்து வரும் அதிகாரபூர்வ தகவல்கள் அவர்களின் கூற்றைத் தள்ளுபடி செய்கின்றன.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு களை அதிகரிப்பதால் நோஞ்சானாக உள்ள வேளாண்துறை எழுந்து ஒடும் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இது உண்மையா? சாத்தியமா? அமெரிக்காவில் உள்ள விவசாயிகளை, அந்நாட்டில் சில்லரை விற்பனையில் பெருமளவு முதலீடு செய்துள்ள நிறு வனங்கள் காப்பாற்றவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அமெரிக்க அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் வேளாண் மசோதா ஒன்றை கொண்டுவந்துதான் அவர்களை காப்பாற்ற வேண்டிய தாயிற்று.மேலும் அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு விவசாயி களுக்கு 307 பில்லியன் டாலர் நிதியுதவி தரும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டியதாயிற்று.
எனவே சில்லரை வர்த்தகத்தில் வரும் நேரடி அந்நிய முத லீடுகளால் விவசாயிகளுக்கு ஒரு பய னும் இல்லை என்பதற்கு அமெரிக்க விவசாயிகளே சாட்சி. மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வந்தால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அந்த நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்று லாபம் ஈட்டமுடியும் என்று ஆசை காட்டப் படுகிறது. அய்ரோப்பிய நாடுகளின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்த பின்னரும் விவசாயி களுக்கு அந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் மானியம் அளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
அதன் பின்னரும் நிமிடத்திற்கு ஒரு விவசாயி விவசாயத் தொழிலை விட்டுச் செல்வதாக பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் கொள்கை குறித்த ஆய்வாளர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். மிகப்பெரிய நிறு வனங்கள் வந்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் விவசாயிகள் நேரடியாக பயன டைவார்கள் என்றும் ஒரு சிலர் வாதிடு கிறார்கள். அதுவும் எவ்வளவு மோசடி யான வாதம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தங்களது வேளாண் பொருட்களை விற்ற அமெரிக்க விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு மாறாக கடந்த நூற்றாண்டி லேயே 70 விழுக்காட்டிற்கு கீழ் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அது மேலும் மோச மாகி கடந்த 2005ஆம் ஆண்டு 4 விழுக்காடாக குறைந்து விட்டது. இதன் பின்னர் விவசாயத்தில் ஈடுபடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் மளமளவெனச் சரிந்தது.
இடைத்தரகர்கள் இல்லைதான். ஆனால் அவர்களது இடத்தில் தரக் கட்டுப் பாட்டாளர், தரப் பராமரிப்பாளர், சான்றிதழ் முகவர், பதனிடுபவர், பேக் கேஜிங் ஆலோசகர் என பல தரகர்கள் தோன்றி விட்டனர்! அவர்களையெல்லாம் சமாளித்தால்தான் ஒரு விவசாயி வருவாயை ஈட்டமுடியும். ஆனால் மிக வும் நவீன முறையில் விவசாயம் செய்யும் அமெரிக்க விவசாயி களுக்கே இது கட்டுப்படியாகவில்லை.
கடைசியில் அவர்கள் அரசின் மானியத்தை வைத்து தான் பிழைப்பை ஓட்டவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பிறகெங்கே அப்பாவி இந்திய விவசாயிகள் வளம் பெறுவது? பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வருவதால் விலை குறைந்து நுகர்வோரும் பலனடைவர்கள் என்று நுகர்வோருக்கும் வலைவிரிக்கப்படுகிறது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதியில் அங்கு விற்கப்படும விலையை விட திறந்தவெளிச் சந்தையில் பொருட்களின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
எனவே சில்லரை வர்த்தகத்தால் நுகர்வோருக் கும் பயன் இல்லை. கடைசியாக பன்னாட்டு சில்லரை வணிக நிறு வனங்கள் மிகப்பெரிய குளிர் பதன கிடங்குகளை வைத்திருக் கின்றன. எனவே இதனால் இந்தியா போன்ற இத்தகைய வசதி குறைவான நாடுகளில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அழுகாமல் பாதுகாக்கப் படும் என் றும் அழுகி வீணாவது தவிர்க்கப்படும் என்றும் வாதிடப்படுகிறது. அதிலும் உண்மையில்லை. காரணம் ஏற்கனவே உணவுக் கிடங்குகளை கட்ட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதி அளித்து பல ஆண்டுகளாகிறது.
ஆனால் முதலீடு களைதான் காணவில்லை.அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகுமா? இந்திய சில்லரை வணிக சந்தையின் மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கோடியே 20லட்சம் சில் லரை வணிகர்கள், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். உலக பகாசுர நிறுவனமான வால்மார்ட்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் 420 பில்லியன் டாலர்கள். இந்திய சில்லரை வணிகத்தின் ஒட்டுமொத்த மதிப்பை விடசற்று அதிகம். ஆனால் அந்த நிறுவனம் அளித்துள்ள வேலை வாய்ப்போ அதன் கிளைகள் உள்ள எல்லா நாடுகளிலுமாக வெறும் 21 லட்சம்தான்.
சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை மாநில அரசுகளின் விருப்பத்திற்கே விடுவதாக மன்மோகன் சிங் அரசு கூறி யுள்ளது. ஆனால் இது சாத்தியமா? மாநில அரசுகளால் இத்துறையில் அந் நிய முதலீடுகளை தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். ஒரு நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றால் அது தேசிய அளவிலான அனு மதியே தவிர மாநில அளவிலான அனுமதி அல்ல. மேலும் சர்வதேச வணிக நெறி முறைகள் படி உறுப்பு நாடு தனது வணிகத்தை முழுவதுமாக திறந்து விட வேண்டும்.
மேலும் இரு தரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (பிஅய்பிஏ) கையெழுத்திட வேண்டும். எனவே இந்தியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான அனுமதி அளிக்கப் பட்டதாகவே கருதப்படும். இந்த ஒப்பந்தத்தில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டன. எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனும திக்க மறுக்கும் மாநில அரசுகளை சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக ஏக போக நிறுவனங்கள் எளிதாக வளைக்க முடியும். சில்லரை வணிகத்தில் ஒரு பெரிய நிறுவனம் நுழைந்தால் எப்படி பாரம்பரிய சிறுவணிகர்கள் அழிந்து போகிறார்கள் என்பதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக காட்டமுடியும்.
மெக்சிகோவில் வால்மார்ட் நுழைந்த பிறகு பத்தாண் டுகளில் 50 விழுக்காடு சில்லரை வணி கத்தை விழுங்கி விட்டது என்று நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் கவனமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் மெக்சி கோவில் மானியம் என்ற பெயரில் உள்ளே நுழைந்த வால்மார்ட் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து 2011இல் 431 கிளைகளை துவக்கி தனது வணிகத்தை நிலை நிறுத்திக் கொண்டதுதான். அமெரிக்காவில் ஆர்க் கான்சாஸ் மாகாணத் தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உள் தணிக்கையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தனது கடையை விரிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் வால்மார்ட் மட்டும் 52 கோடி ரூபாயை லஞ்சமாக சிலருக்கு கொடுத்துள் ளதாக அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள் ளனர். ஒரு நிறுவனத்தின் லஞ்சமே இவ்வளவு என்றால் இந்தியாவில் நுழைய காத்திருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நேரம் எவ்வளவு கொடுத்திருப்பார்கள். அவர்கள் எத் தனை லட்சம் கோடி ஆதாயம் அடைவார்கள் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
எனவே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தால் அது இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும் காப்பாற்றப் போவதில்லை. வணிகர் களையும் வாழவைக் காது. எனவே நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும் காங்கிரஸ் - திமுக-திரிணாமுல் கூட்டணி அரசுக்கு பாடம் கற்றுத் தர மக்கள் நல அரசியல் இயக் கங்களும் மக்களும் களத்தில் இறங்க வேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.
-அ.விஜயகுமார்
நன்றி: தீக்கதிர் - 16.9.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


2 comments:

Anonymous said...

naatai kappartuvar yaro..?

வாலிபள் said...

அது சரி சார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால் எதிர்க்கிறீர்கள். தென் தமிழகத்தை சுடுகாடாக மாற்றப் போகும், ரஷ்யாவின் அணு உலைத் திட்டம் என்றால் ஆதரிக்கிறீர்கள். உங்க கேரக்டரையே புரிஞ்சிக்கிட முடியல சார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...