Tuesday, July 17, 2012

எந்த நெருக்கடிக்கும் அஞ்ச மாட்டேன்!


தனியீழம் என்பது தான் என் ஆசை - டெசோ மாநாடு குறித்து கலைஞர் பேட்டி



சென்னை, ஜூலை 17- தனியீழம் என்பதுதான் என் ஆசை என்று கூறிய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சென்னையில் ஆகஸ்டு 12இல் நடக்க உள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்ப வர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செய்தியாளர் :- டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதாக இதுவரை ஒப்புக் கொண்டுள்ள தலைவர்கள் யார் யார்?
கலைஞர் :- மத்திய அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  திரு சரத் பவார்  மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அமைச்சரும்,  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான  திரு.பரூக் அப்துல்லா  சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதி யிருக்கிறார்.   அய்க்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் திரு.சரத் யாதவ்  சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.    லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் திரு.ராம் விலாஸ் பஸ்வான்  சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நைஜீரிய  நாட்டின்  ஈடோ மாநில வர்த்தகத் துறை அமைச்சர் திரு. அல் ஹாஜி மூசா அகமத் வருவதற்கு சம்மதம் தெரிவித்து  ஈ. மெயில்  அனுப்பியிருக்கிறார்.   ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைத் தூதர் திரு. நாசிம் மாலிக்  சம்மதம் தெரிவித்து, ஈ. மெயில்  அனுப்பியிருக்கிறார்.
மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள  உலக அளவில் உள்ள  ஈழத் தமிழ்  அமைப்புகளின் நிர்வாகிகள்  -  அமெரிக்கா, கனடா,  இங்கிலாந்து,  நார்வே,  பிரான்ஸ்,  ஜெர்மனி,  ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து,  தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து  தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள்  மாநாட்டில் கலந்து கொள்பவர்களாகவும்,  பார்வையாளர்களாகவும்  வரவிருக்கிறார்கள்.
தமிழர் தேசிய கூட்டணித் தலைவர் திரு. சம்பந்தன், எம்.பி., தமிழர் தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் திரு. மாவெ சேனாதிராஜா, எம்.பி., ஆகிய இருவரும்  வருவது பற்றி ஒப்புதல் தந்து பேசியிருக்கிறார்கள்.    திரு.எஸ். யோகேஸ் வரன், எம்.பி.,  மாநாட்டிற்கு வர ஒப்புதல் தந்திருக் கிறார்.
தமிழர் தேசிய மக்கள் முன்னணித் தலைவர்  திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், President, Tamil National Peoples Front,  தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  திரு செல்வராஜ் கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,  திரு. சுமேந்திரன், எம்.பி., ஆகியோரெல்லாம்  மாநாட் டிற்கு வருவதைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.   இவர்கள் தவிர  திரு.சரவணபவன், எம்.பி.,  அவர்களும் பேசியிருக்கிறார். நான் முதலில் சொன்னபடி, உலக அளவில் உள்ள  பல ஈழத்தமிழ்  அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்பவர்களாகவும், பார்வையாளர்களாகவும்  இந்த மாநாட்டிற்கு  வருகிறார்கள்.
தனியீழம் பற்றி
செய்தியாளர்:- இந்த டெசோ மாநாட்டில்  தனி ஈழம் கோரி  வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற வாய்ப்புகள் இருக்கிறதா?
கலைஞர் :- தனி ஈழத்தைப் பற்றி  கருத்து  இருக்கிறதே தவிர, அதை இப்போது  அழுத்தந் திருத்தமாகச் சொல்லி,  அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக  உத்தேசமில்லை.  ஏனென்றால்  அங்கே நடைபெற்ற  ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு,  ஆயுதப் போராளிகளை  சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள   இந்த நேரத்தில்  எஞ்சியுள்ள  இலங்கைத் தமிழர்களைப் பாது காப்பது,  அவர்களின்  வாழ்வாதாரங்களை  வளப் படுத்துவது,  அவர்களுக்கு போரினால் ஏற் பட்ட இன்னல்களைக்களைவது,   இவற்றில் எப்படி யெல்லாம்  நடவடிக்கை எடுக்கலாம்,  நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம்  என்பதற்காகத் தான்  இந்தமாநாட்டைக்கூட்டி,  அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும்  நாங்கள் முக்கியமாகக்கருதி,  அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில்  அறவழியில்  நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய  திட்டமாகும்.
செய்தியாளர் :- ஏற்கெனவே  தனி ஈழம் தான் எங்களின் குறிக்கோள் என்று சொல்லியிருந்தீர்கள்.   தற்போது அதை மாற்றுவதற்கு, மத்திய அரசிலே இருந்து  தி.மு.க.விற்கு ஏதாவது நெருக்கடி இருக்கிறதா?
கலைஞர் :- மத்திய அரசின் நெருக்கடி எதுவும் இல்லை.   நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
செய்தியாளர் :-  டெசோ மாநாட்டில்  போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  தீர்மானம் நிறை வேற்றப்படுமா?
கலைஞர்:- ஜெனீவா  மாநாட்டில்  நிறைவேற்றிய  தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்க வேண்டு மென்று வலியுறுத்திய இயக்கங்களில் தி.மு.கழகமும்  பிரதானமாக  இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.   அதனால் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.
செய்தியாளர்:- விடுதலைப் புலிகள் இயக்கத் திற்கு  இருந்த தடையை மத்திய அரசு  நீடித்திருக் கிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர்:- விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதைப் பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.   அது விடுதலைப் புலி களுக்கு மட்டுமான  தடை என்று கருத முடியாது.   பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்  தீவிர வாதம்,  ஆயுதப் போராட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதில்  நானும் அழுத்தந்திருத்தமான  கருத்து கொண்டவன்.
செய்தியாளர் :- நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் உங்களைச் சந்தித்த போது டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித் தார்களா?  அதைப்பற்றி பேசினார்களா?
கலைஞர் :- அது பற்றி பேசவில்லை.
செய்தியாளர்:- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் விடுத்த அறிக்கையில்  டெசோவிற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்லை என்றும், ஒருங்கிணைந்த இலங்கைதான் இருக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர்  :- ஞானதேசிகன் அவசரப்பட்டு அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன்.   நானும் அவரும் சந்தித்துப் பேசக் கூடிய நிலை, மிகுந்த இடைவெளி  வாய்ந்தது அல்ல.   ஒருவரோடொருவர் கலந்து பேசி  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்.   ஏன் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்பதைப் பற்றிக்கூட அவர் அறிந்து கொள்ள விரும்பாமல்,  அறிக்கை வெளி யிட்டிருப்பது  கெட்டவாய்ப்பே!.
தனித் தமிழீழம் என் நிறைவேறாத ஆசை
செய்தியாளர் :- நீங்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது, என்னுடைய நிறைவேறாத ஆசை  தமிழ் ஈழம்தான் என்று  சொல்லியிருந்தீர்கள்.   இப்போது அதைப்பற்றி?
கலைஞர் :- அதை எப்போதும் சொல்வேன்.   இப்போதும் சொல்கிறேன்.  என்னுடைய நிறை வேறாத ஆசை அதுதான்.
செய்தியாளர்:- தற்போது கொடுக்கப்பட்டுள்ள விவாதத்திற்கான கருத்துரு பேப்பரில், பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் சொல்லப் படவில்லையே?
ககலைஞர் :- இந்த மாநாட்டிற்கு வருகின்ற  பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம்  அறிந்து பிறகு முடிவெடுப்பதுதான் ஜனநாயகம் என்ற காரணத்தால்,  நான் எதையும் முன் கூட்டியே சொல்லி  யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை, அது நல்லதும் அல்ல.
செய்தியாளர்:- தனி ஈழம் பற்றி  தற்போது திறந்த மனதோடு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
கலைஞர்:- தனி ஈழத்துக்காக  போராட்டமோ, கிளர்ச்சிகளோ  எதுவும் இப்போது  இல்லை.   இப்போது இருப்பதெல்லாம் அடிபட்டுக் கிடக்கின்ற இலங்கைத்  தமிழர்களுடைய  ரணத்தை ஆற்றுவது  - அவர்களுடைய பசியைப் போக்குவது - அவர்களுடைய வாழ்வாதாரங்களை வளப்படுத் துவது என்பதுதான்.  இப்போதுள்ள அவசரமான தேவை இதுதான்.
சிங்கள ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியா?
செய்தியாளர் :- சிங்கள ராணுவத்திற்கு  தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகிறார்களே?   கலைஞர் :-  நாமும் அதைத் தொடர்ந்து  எதிர்த்து கண்டன அறிக்கை கொடுத்துக் கொண்டு வருகிறோம்.  அவர்களும் அவ்வப்போது  நம் முடைய மாநிலத்தில் உள்ள கட்சிக ளின் சார்பாகத் தருகின்ற கண்டனங்களை ஏற்றுக் கொண்டு,  நடவடிக்கை எடுக்கிறார்கள்.
செய்தியாளர் :- டெசோ மாநாட்டிற்கு காங் கிரசை அழைப்பீர்களா?
கலைஞர் :- எல்லோரையும்  அழைப்போம்.
செய்தியாளர் :- நேற்று சிதம்பரம் அவர் களைச் சந்தித்த போது, அவரை அழைத்தீர்களா?
கலைஞர் :- அவர் அரசியல் விஷயங்களைப் பேசுவதற்காக நேற்று வரவில்லை.   சென்னைக்கு வந்தபோது,  என்னைப் பார்த்தார்.  அவ்வளவுதான்.
செய்தியாளர் :- நீங்கள் கூட்டத்தில் பேசும் போது மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கப் போவதாகவும், அதன் மைய நோக்கம் தனி ஈழம் அமைவதுதான் என்றும் சொல்லியிருந்தீர்கள்.
கலைஞர் :- தனி ஈழம் கிடைத்தால் யாரும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்கள்.   ஆனால் இப்போதுள்ள நிலையைப் பார்க்க வேண்டும்.  இந்தியா சுதந்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.  இந்திய சுதந்திரம்தான் நம்முடைய குறிக்கோளாக இருந்தது.  அதற்காக பல ஆண்டுகள் பல முறை களில் போராட்டங்களை நடத்தினோம்.   அதைப் போலத்தான்  இதுவும்.
நெருக்கடி கொடுக்கப்பட்டதா?
செய்தியாளர் :- தனி ஈழம் என்பதை மாற்றிட, உங்களுக்கு ஏதோ ஒரு நெருக்கடி என்பதுதான் உண்மையா?
கலைஞர் :- நான் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டேன்.
செய்தியாளர் :- விடுதலைப் புலிகள் எல்லாம்  ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.   பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறார்கள்.  இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவைதானா?
கலைஞர்:- இது அரசுகளுக்கு இடையேயான பிரச்சினை.   அதைப்பற்றி  தமிழக அரசுதான் கவலைப்பட வேண்டும்.      எனவே  இதுபற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மாநில அரசினர்தான்.
செய்தியாளர் :- தனித் தமிழ் ஈழம் என்னுடைய குறிக்கோள் என்று முன்பு சொன்னீர்கள்.  இப்போது அப்படிச் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்?
கலைஞர் :- நான் தயங்கவில்லை.   தனி  ஈழம்  ஒரு காலத்தில் அமையலாம்.   டெசோ மாநாட்டிற்கு மறுநாளே  தனி ஈழம் அமைந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.   எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.
செய்தியாளர் :- இலங்கை  ராணுவத்திற்கு  பயிற்சி கொடுப்பதைப் பற்றி உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?
கலைஞர் :- அது தவறு என்பதுதான் என்னு டைய கருத்து.
செய்தியாளர் :- இந்த மாநாட்டிற்கான தலைப்பு?
கலைஞர் :- மாநாட்டின் தலைப்பு  -  ஈழத் தமிழர்  உரிமை பாதுகாப்பு மாநாடு.
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை  ஆயுதப் போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை.   விரும்பாததற்குக் காரணம் முடி யாது என்பதல்ல,  கூடாது என்பதல்ல,  அகிம்சை முறையிலேதான் அதை அடைய வேண்டும் என்பது கூட அல்ல,  நம்முடைய  போராளிகளுடைய  ஆயுதங்கள்,  சிங்கள ராணுவத்திலே உள்ள ஆயுதங்கள்  -  இந்த  இரண்டு பலத்தையும் வைத்துப் பார்த்தால்  போராளிகளால்  வெல்ல முடியாது.   ராணுவத்தை வைத்துக் கொண்டிருக்கின்ற  சிங்கள  அரசு தான்  கடைசியாக வெற்றி பெறும் என்ற அந்த அடிப்படையிலேதான்  நான் அதை அன்று முதல் சொல்லி வருகிறேன்.
செய்தியாளர் :- உலகத்தில் பல நாடுகளில்  மக்கள் பலத்தால் ராணுவத்தை வெற்றி கண்டிருக் கிறார்களே?  ஆனால் ஆயுதப் போராட்டம் தேவை யில்லை என்று நீங்கள் சொல்கிறீர்களே?
கலைஞர் :- ஆயுதப் போராட்டம் தேவை யில்லை என்பது ஒரு கருத்து.  ஆயுதப் போராட் டத்தில் ராணுவங்களை எதிர்த்து  அரசுகளை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதும் அனுபவ ரீதியாக  நாம் புரிந்து கொண்டிருக்கின்ற கருத்து.
செய்தியாளர் :-  இந்த முறை டெசோ தன் னுடைய இலக்கை அடையுமா?
கலைஞர் :- நீங்கள் எல்லாம் ஒத்துழைத்தால் அடையும்.
செய்தியாளர் :- இலங்கையின் தளபதி,  இந்தியாவின் முழு ஆதரவோடுதான் போரை நடத்தி முடித்தோம் என்று சொல்லி யிருக்கிறாரே?
கலைஞர் :- அதிலே விவாதங்கள் நிறைய இருக்கின்றன.  எனவே நான் அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
-இவ்வாறு  கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...