Monday, July 2, 2012

கல்விப் புரட்சி!


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று இந்து மதத்தின் அஸ்திவார நூலான மனுதர்மம் கூறுவது.
நம் தமிழ் மன்னர்கள் கூட பார்ப்பனர்கள் சமஸ் கிருதம் படிக்கத்தான் கல்விக் கூடங்களை ஏற் படுத்தினார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தபோதும், ஒவ்வொரு முறையும் புதிய கல்விக் கூடங்களைத் திறக்காததோடு மட்டுமல்ல, ஏற்கெனவே நடந்து வந்த பள்ளிகளையும் இழுத்து மூடினார். 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளி களையும் 1952 இல் 6,000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடி, சூத்திர, பஞ்சம மக்களின் கல்விக் கண்களைக் குத்தினார்.
பெரியார் பிறந்துவிட்ட பிறகு இது நடந்ததால் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை; மாறாக எதிர் விளைவைத்தான் அது ஏற்படுத்தியது.
கல்விக் கண்களைக் குத்திய முதல் அமைச்சர் ஆச்சாரியார்தான் முதல் அமைச்சர் நாற்காலியைக் காலி செய்து வெளியில் ஓடும்படிச் செய்தது.
ஒரு காமராசர் கல்வி வள்ளலாக, பச்சைத் தமிழராக பெரு உருவெடுத்தது - இந்த அடிப் படையில்தான். பல்லாயிரக்கணக்கான பள்ளி களைத் திறந்து கல்வி வெள்ளத்தைக் கரை புரண்டு ஓடச் செய்ததால்தான் காமராசர் கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அதற்கான விதையை ஊன்றியது. அதனால்தான் கல்விப் பலனை இன்று நாம் சுவைக்கிறோம்.
இவ்வாண்டு தமிழ்நாட்டில் வெளி வந்துள்ள மருத்துவக் கல்லூரி சேர்க்கை - இந்தக் காட்சியைக் காண தந்தை பெரியார் இல்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் இந்த விளைச்சல்களுக்கு உரிமை கொண்டாட வேண்டிய மாபெரும் இனத்தலைவர் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டில் எம்.பி.,பி.எஸ்., படிப்புக்கான மொத்த இடங்கள் 2395.
தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) ஆகியவர்களுக்குரிய 69 சதவிகித இட ஒதுக்கீடு இடங்கள் அல்லாமல் மீதியுள்ள திறந்த போட்டிக்கான (31 விழுக்காடு) இடங்கள் 742. இதில் 678 இடங்களை இடஒதுக்கீட்டுக்குரிய பிரிவினரான தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் பெற்றுள்ளனர் என்றால் இது சாதாரணமா?
இதில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் 16 பேர். இந்த 16 பேர்களில் பிற்படுத்தப்பட்டோர் 10, தாழ்த்தப் பட்டோர் 2, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 1, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 1, முன்னேறிய ஜாதியினர் 2. இந்த இருவர் கூட பார்ப்பனர்கள் என்று கூறமுடியாது. பார்ப்பனர் அல் லாதாரில் உள்ள உயர்ஜாதியினரான சைவ முதலியார், கார்காத்தார் போன்றவர்களும் இருக்கக்கூடும்.
இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இத்தகைய சாதனைகளைத் தமிழ் நாட்டில் மட்டுமே நிகழ்த்திட முடிகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? பின்னணி எது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் இதற்குக் காரணமும், பின்னணியும். சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற தடையைத் தகர்த்து எறிந்தது நீதிக்கட்சி ஆட்சியே! இட ஒதுக்கீட்டு ஆணையை முதன் முதலில் நிறைவேற்றிச் செயல்படுத்தியதும் நீதிக்கட்சி ஆட்சியே!
கிராம மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் பெரிதும் பாதிக்கச் செய்யும் நுழைவுத் தேர்வை ஒழித்துக் கட்டியதும் தி.மு.க.ஆட்சியே! இன்னோ ரன்ன காரணங்களால்தான் பொதுப் போட்டியிலும் கூட பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்த முடிந்தது.
திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கண் மூடித்தனமாகக் கேள்வி எழுப்பும் கபோதிகள் இதற்குப் பிறகாவது கண் விழிக்கட்டும்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...