Monday, June 25, 2012

ஆனந்தவிகடன் லோகம்!


இந்த வார ஆனந்தவிகடனை (20.6.2012) ஒரு புரட்டு புரட்டியபோது சில பேட்டிகள் தென்பட்டன.
அந்தப் பேட்டிகளுக்குள் சில தகவல்கள்:
(1) சினிமா இயக்குநர் ஒருவரின் பேட்டி
பெரியார் பெயரை உச்சரித்து, பெரியாரின் பேரன் என்று அடை யாளப்படுத்திக் கொண்டு, சற்று விளம்பரம் கிடைத்தவுடன் பெரியாரை விமர்சித்து, அதன் மூலம் பார்ப்பனர்களின் சடகோபத்துக்கு ஆளாவது ஒன்றும் அதிசயமல்ல. தமிழர்கள் போல மலிவான பொருள்கள் உலகத்தில் எங்கும் கிடைக்கப் போவதில்லை.
இன்று எனக்குள்ள குறையெல் லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவது தான் என்றார் தந்தை பெரியார். (விடுதலை 17-.9.-1969)
இனப்பாதுகாவலரான தந்தை பெரியார் அதையும் கடந்து உலக மக்களுக்கே வழிகாட்டும் சுயமரியாதை - பகுத்தறிவு - சமதர்ம ஒளியை உலகுக்குக் கொடுப்பவர்.
சுயசிந்தனையாளர்! - அவருக்கு வழிகாட்டி என்று யாரும் கிடையாது. தன் கருத்தை திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார் என்று சொல்லக் கூடியவரே தவிர, -திருவள்ளுவர் சொன்னதைத் தான் நானும் சொல்லுகிறேன் என்று சொல்லாதவர்! காலத்தைக் கடந்து கருத்துக்களைக் கருத்தரிக்கச் செய்யக் கூடிய ஞானத் தந்தை அவர்.  அறிவாயுதத்தை எடுத்த களப்போராளி, தளகர்த்தர்! வாழ்நாள் முழுவதும் அந்தக் களத்திலேயே நின்றவர் - வெற்றிகளையும் குவித்தவர்.
வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்த காலத்திலும் சரி அவரைத் தவிர்த்துவிட்டு சமூகமோ, அரசியலோ, சிந்தனையோ பயணித்தது கிடையாது.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக் கவிஞர் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
ஒன்றை தமிழர்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் உணர்தல் தேவை.
தந்தை பெரியார் அவர்களையும் மாவீரன் பிரபாகரனையும் ஒப்பிடுதல் முதல் குற்றமாகும். தந்தை பெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரும், வழிகாட்டியுமாவார். பிரபாகரன் படத்தைத்தான் மேடையில் வைப்போம் - பெரியார் படத்தை வைக்க மாட்டோம் என்று பேசுவது எல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனமே!
ஒரு மேடையிலே பெரியார் படம் வைக்கப் படாததாலேயே பெரியாரின் ஆளுமை சுருங்கிப் போய்விடுமோ!
(உலகப் பல்கலைக் கழகங்களில் பெரியார் உலா வருவது இந்தக் குப்பை களுக்குத் தெரியுமா?)
இப்படியெல்லாம் பேசுவது - எழுது வது பெரியாரையும் புரிந்து கொள்ளாத - தம்பி பிரபாகரனையும் தெரிந்து கொள்ளாதபேதைமை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?
என்ன முரண்பாடு என்றால் ஆனந்தவிகடன் பேட்டியில், தம்மையும் அறியாமல் வேறு ஓர் இடத்தில் எங்களின் பெருமைக்குரிய வழி காட்டி பெரியார்தான் என்று ஒப்புக் கொண்டு விட்டு பிறகு, -வழிகாட்டியின் படத்தை வைக்கப்போவதில்லை என்பது -குழப்பப் போதையில் அவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
பித்துக்குளித்தனமான ஆவணம் ஒன்றை வெளியிட்டுவிட்டு, ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கின் நிலைக்கு ஆளாகி, நாலாதிசைகளிலும் சவுக்கடி கிடைத்தவுடன் நாக்குத் தொங்கி, விழி மேலேறி, கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொள்ள, பெரியாரே துணை! என்று சரணம் பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது நல்ல நகைச்சுவையே!
(ஆவணத்தை வெளியிட்டவரே கைவிட்டு விட்டாரே!)
அவர்களின் கண்ணோட்டத்தில் பார்ப்பான் என்றால் ஆய்வாளன் (அவர்களின் ஆவணத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.)
அந்த ஆய்வாளர்கள் சொல் பேச்சைக் கேட்டு 2012ஆம் ஆண்டு அனுமார்களாகவும், விபீஷணர்களாகவும், சுக்ரீவன்களாகவும் வாலையாட்டிப் பிழைத்துப் போகட்டும்! (தந்தை பெரியாரையும், திராவிடர் என்ற பார்ப்பனர் எதிர்ப்பு உணர்வையும் பெறாத எந்த அமைப்பும், தனி மனிதனும் இங்குக் கடையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்).
(2) சரத் ஃபொன்சேகா
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததில் வெறி பிடித்து அநாகரிகமாக செயல்பட்ட அன்றைய இலங்கை ராணுவத்து தளபதி பொன்சேகா ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைத் தெரிவிக்கிறார். அவை ஒருபுறமிருக்கட்டும்.
அடுத்து ஈழத்தில் என்ன நடக்கும் என்று அவர் சொன்னது மிக முக்கிய மானதே.
இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநா யகம் இல்லை. யாருக்கும் எந்த பாது காப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக் கொண்டும் வேவு பார்த்துக் கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம்.
ஊடகங்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அரசு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பது கூடக் குற்றம் என்று நினைக்கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே.
எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது. . ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல் . . . மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற் கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர் களின் புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்கிறார் பொன் சேகர். எங்கெல்லாம் அடக்கு முறைகள் திமிர் முறித்துக் கிளம்புகின்றனவோ, அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது மனிதவியல் பாலபாடமாகும்.
விழுப்புரம் டெசோ (ஆகஸ்டு5) மாநாடு அழைப்புக் கொடுக்கும் -காத் திருங்கள்!
(3) சு.சாமி. பராக்!
கேள்வி: உண்மையிலேயே உங் களுக்குத் தமிழ் சுத்தமாகப் பேசவராதா? இல்லே, இதை ஒரு சாக்காக வெச்சு அவ, இவ, அவன், இவன்னு - கலாட்டா பண்றீங்களா?
சு.சாமி பதில்: இது என் ஸ்டைல். திராவிட இயக்கத்துக்காரங்க போல அடுக்கு மொழியில் மக்களுக்குப் புரியாத தமிழில் பேசி என்ன பிரயோஜனம்? அதனால்தான் நான் எப்பவும் போல பேசுகிறேன். அதுவும் தவிர, சமஸ்கிருத வார்த்தைகள் எல்லா மொழியிலயும் பரவிக்கிடக்கு. அதைப் பயன்படுத்திப் பேசினா, தமிழ், கர்நாடகம், தெலுங்கு, இந் தினு எல்லா மொழிக்காரங்களும் புரிஞ்சுக்குவா. சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கனும். நான் இப்படிப் பேச அதுவும் ஒரு காரணம் என்கிறார் சு.சாமி. ஆரியக் கூத்தாடினாலும் காரியத் தில் கண் வைக்கும் பார்ப்பனர்களை இங்கே தெரிந்து கொள்க!
இப்படித் தமிழ்ப் பேசும் இந்த வகை யறாக்கள் எல்லாம்  தமிழ் தேசியவாதிகள் கண்ணோட்டத்தில் பச்சைத் தமிழர்கள் தாம்.
ஏன்னா, நன்னா; தமிழ்ப் பேசுறாளே!
அவ, இவ என்று பேசுவதும் வேண்டு மென்றே!
சமஸ்கிருதத்தை பரப்புவதற்காகவே இந்த வேடம் என்பது கோணிப்பைக்குள் ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே!
இந்தப் பார்ப்பனர் மட்டுமல்ல; எல்லாப் பார்ப்பனர்களுமே இந்த உணர்வு படைத்தவர்கள்தான். கோல்வாக்கரிலிருந்து லோக்கல் வாக்கர்கள் வரை இதே புத்தியைக் கொண்டவர்கள்தான்.
என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் கட்டாய பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று அடித்துக் கூறியவர்தானே சத்தியமூர்த்தி அய்யர்வாள்!      (மெயில் 25.-7.-1939)
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதைத்தான் 1957 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று சொன்னவர்தான் வி.வி. கிரி என்ற பார்ப்பனர்.
(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து -_ 2-.1-.1963)
(4) சி. ராஜகோபாலாச்சாரியார்
நமது முன்னோர்கள் நமக்கு வைத்து விட்டுப் போன பழைய பொருள்களைப் புறக்கணிப்பது தவறாகும். நமக்கிருக்கும் பெருமைகள் சமஸ்கிருதத்துடன் இணைக் கப்பட்டவை. பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளில் இருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி போன்ற சமஸ் கிருதம் தெரியாவிட்டால் மகா பெரிய விபத்தாகும்.
அது பணமிருக்கும் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டு சாப்பாட்டுக்கு பிச்சை எடுப்பதற்கு ஒப்பாகும். ஒரு பள்ளிப் படிப்பில் சமஸ்கிருதம் சார்ந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்துவாய் இருந்தாலும், முஸ்லிமாய் இருந்தாலும், நமது பழைய பெருமைகளுக்கு திறவுகோல் சமஸ்கிருதம்தான்.
புத்தர்கள், இந்துக்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள் முதலியோர்களுக்கு சமஸ்கிருதத்தைத் தவிர வேறு பெருமைகள் கிடையாது. இப்போதைய நவீனக் கல்விகளுடன், சமஸ்கிருத்ததையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால் இன்னுமொரு தலை முறைக்குள் இந்து மதம் இப்போது இருப்பது போல் இராது. சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம்.
(சென்னை லயோலா கல்லூரி சமஸ்கிருத சங்கத்தின் துவக்கவிழாவில் 24-.7.-1937 அன்று பிரதம அமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியார் பேசியது.)
சங்கராச்சாரியார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், ஆர்.வெங்கட்ராமன் என்று சமஸ்கிருத்தைச் சப்புக் கொட்டி உச்சி மோந்து உச்சரிக்கும் பார்ப்பனர்களின் பட்டியல்  மிக நீளமாகவே உண்டு.
தமிழ் ஆய்வாளரான ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் இந்தப் பார்ப்பனர் களைப் பற்றி வெகு நேர்த்தியாகவே  படம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பார்ப்பான் பிறந்த நாள் முதல் தமிழையே வழங்குகின்றார்கள். ஆயினும் அவர்கள் தாம் தமிழர் அல்ல என்றும் தமக்குத் தாய்மொழி ஆரியம் என்றும் உணர்கிறார்கள். ஆகவே அவர்களிடத்தில் தமிழனிடத்தில் எழுதுவது போன்ற தமிழ் மொழிப் பற்றை நாம் காணுதல் முடியாது. இவ்வுணர்ச்சி குன்றிய கூட்டத்தினரே இந்தி பிரச்சார சபைகளையும் வடமொழியைத் தமிழோடு கலந்து எழுதும் உரைநடைகளையும் தோற்று விக்கின்றனர்.
(நூல், தமிழ் வரலாறு)
சு.சாமி _ பார்ப்பனர்கள் எத்தகைய வர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு
இதைத் திராவிடச் சிந்தனை யாளர்களால்தான் சுட்டிக் காட்ட முடியும். இடித்தும் காட்டவும் முடியும். தமிழ்த் தேசிய வாதிகள் எப்படி இருப் பார்கள் என்பதற்கு ம.பொ.சி. ஒருவர் போதாதா?
- மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...