Tuesday, June 5, 2012

சந்தி சிரிக்கும் சாமியார்கள்


- இளையமகன்
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!  - -
- திருஞானசம்பந்தர்
கற்பழிக்க அருள்வேண்டிய திருஞானசம்பந்தரால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக கூறப்படும் மதுரை ஆதீன மடத்தில்தான் சர்ச்சை சுழல்கிறது. ஏன் இந்த சர்ச்சை? சிடி புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். நியிமித்தது  292வது நடப்பு மதுரை  ஆதீனம்.  இந்த அறிவிப்பையடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292 வது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.  அதற்கு பிறகு பேட்டியளித்த மதுரை  ஆதீனம் அருணகிரி, திருஞான சம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை  ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாக(!) கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்  தோன்றி, நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு என்று சொன்னார். அதன்பிறகு பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்து பழகிப்பார்த்தேன்; அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்தபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து  ஆடினேன். அடடா ஆதீனமே  ஆடுதே என ஆச்சர்யமாக பார்த்தார்கள். இப்படித்தான் எலோரும் ஜாலியாக இருக்க வேண்டும். சொத்துக்களை நிர்வகிப்பது குறித்து பேசுகையில் 1250 ஏக்கர் நிலத்தையும், கோவில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் அவரை  ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்தா ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் என்று அழைக்க வேண்டும் என்றிருக்கிறார். (6.5.12 ஜூனியர் விகடன்)

உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்கள் வாழும் நாட்டில். வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் நாட்டில், இன்னும் மக்களை சேரியில் இருத்தி வைப்பதும், வாயில் மலம் திணிப்பதும், மலம் அள்ளுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாதியார்களை மட்டும் கட்டாயமாக பணிக்கும் இந்த நாட்டில் கோடியாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது, மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டு யார் கண்காணிப்புமின்றி கைமாறுகிறது. இதைக் குறித்து தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள், சைவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்தான் மடத்திற்கு வரவேண்டும், நித்தியானந்தா சைவவேளாளர் இல்லை என்கிறார் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானம். இன்னொருவர் நித்தியானந்தா மண்டையிலிருந்து மயிரை மழிக்கவில்லை. ஆகையால் அவர் தகுதியற்றவர் என்கிறார்.
இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதுபோலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கயமைத்தனத்தோடு மறைத்துவிட்டு கிறித்துவ, இஸ்லாமியர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்மத்தை வளர்த்தே அரசியலில் சுகம் காண துடிப்பவர்கள், புராணங்கள்  முழுக்க ஆபாச குப்பைகளை வைத்துக் கொண்டும், ஒழுக்க கேட்டையே பண்பாடாய் வைத்துக் கொண்டு ஊருக்கு ஒழுக்கம் கற்பிக்க முனையும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு நித்தியானந்தா தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல பெரிய இடைஞ்சலாக இருந்திருக்க வேண்டும். பெரிய மனப்போராட்டத்தை தந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அயோத்தியில் இராமர் பாலம் கட்டும் அதிஉயர்(!) பிரச்சினையை பற்றி பேசிய வாய்கள், மதுரை ஆதீனமாக மிகப்பொருத்தமாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  இத்தனை  எதிர்ப்புகள் பதிவாகியிருக்காது.  இந்து மக்கள் கட்சி நித்தியானந்தாவை மதுரை ஆதீன பதவியிலிருந்து கீழிறக்கும் வரை போராடப் போவதாக அறிவித்திருந்தது. இன்னும் கூடுதலாக மதுரை மடத்திற்குள் புகுந்து சிவனை வழிபடுவோமென்று வேறு எச்சரிக்கை(!) செய்திருக்கின்றனர். இதைக்கண்டு சீற்றம் கொண்டோ, சிறிய/பெரிய அளவில் பணம் பெற்றோ கொஞ்சமும் வெட்கமின்றி தென்னாடு முன்னேற்ற கழக தலைவர் சரவணன் என்பவர், நித்தியானந்தா நியமனத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவரின் நியமனத்தை எதிர்த்து பேரணி நடத்துபவர்களுக்கு, எதிராக நான் பேரணி நடத்துவேன் என்று முனங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சிகளிலெல்லாம் தமிழ், தமிழ் என்று முழங்கும் நெல்லை கண்ணன் நித்தியானந்தா நியமனத்தை தடைச்செய்ய உயிரை கூட  கொடுப்பேன் என்கிறார். யாரும் இது சமூக பற்று  என்று கொள்ள வேண்டாம். இந்த சீற்றத்திற்கான காரணம் சைவ சாதி வெறிதான். இதுபோதாதென்று அங்கங்கு மடங்கள் என்னும் கடைவிரித்து தமிழ் வளர்ப்பதாய் கூறிக் கொண்டு தொப்பை வளர்த்து சொகுசாய் வாழும் அனைத்து மடாதிபதிகளின் கூட்டம், நித்தியானந்தாவை மடாதிபதியாக நியமனம் செய்ததை, 10 நாளில் திரும்பப் பெற வேண்டும் என்கிறது. இதற்கெல்லாம் அசராமல் பதிலளித்த நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்றுதான் நீதிகட்சி 1930களில் பல கோவில்களை அரசுடைமையாக்கியது. இன்று வீடியோ கண்காணிப்பில்லாமல்தான் இந்த மடங்களின் போலி புனிதம் காக்கப்படுகிறது என்று சொல்லாமல் சொல்கிறார் நித்தியானந்தா.
வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த செட்டப்
நித்தியானந்தாவின் நியமனத்தின் மீது தொடர்ந்து விமர்சனம் வரவும் அருணகிரியார் ஒரு பேட்டியளித்திருந்தார், அதில், ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.  ஆக, தன் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இப்படியான நியமனத்தை வலிந்து நித்தியானந்தா பெற்றிருப்பதாக யூகிப்பது தவறாக இருக்க முடியாதென்றே தோன்றுகிறது.
மேற்சொன்ன நித்தியானந்தா எதிர்ப்புக்கெல்லாம் ஆதரவாக பேரதிர்ப்பை ஜகத்குரு ஜெயேந்திரர் தெரிவித்திருந்தார்.
ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். அவர் கூடவேதான் இருப்பேன்னு சொல்லி கூடவே இருக்காங்க. இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் தன் மீது பாலியல் புகார் உள்பட சங்கர் ராமன் கொலை வழக்கு கூட உள்ளது, இந்த அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் சீனியர்  என்ற உணர்வேயில்லாமல் என்னை விடுத்து நித்தியானந்தாவை எப்படி தேர்ந்தெடுக்கலாமென்ற கோபம் வந்தாலும் வந்திருக்கலாம். ஆனால், இந்த எதிர்ப்பு அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் சங்கரமடத் திலிருந்து ஒரு அறிக்கை வந்தது.
சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப் படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விடுதலையில் வந்த செய்திகள் ஜெயேந்திரர் கவனத்திற்கு செல்லவும், எதிர்ப்பு என்னும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தனிக்கதை. ஜகத்குருவின் நேர்மையின்  யோக்கியதை  இந்த அளவில்தான் உள்ளது.
ஆனால், நித்தியானந்தா விடுவாரா? இந்து மதத்தை அம்பலப்படுத்துவதில் அவர் காட்டும் முனைப்பை நம்மால் ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.
ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். ஆனால் என் மீது எந்த கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்ற பின்னணி உள்ள அவர் என்னை பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.
ஜெயேந்திரர் யோக்கியனாகும் முயற்சிக்கு மேற்கண்டவாறு நித்தி பதிலளித்ததும், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தன்னை நித்தி மொத்தமாக அம்பலப்படுத்திவிடக்கூடுமென்று சமாதானத்தூது அனுப்பியிருக்கிறார். சமாதானத்தூது அனுப்பிய இந்த ஜெகத் குருவின் யோக்கியதையை நம் வாசகர்களுக்கு மீண்டும் நினைவூட்ட அனுராதா ரமணன் ஒரு பத்திரிக்கை பேட்டியில் அம்பலப்படுத்திய செய்திகளிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே தரப்படுகிறது
சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மிரட்டினார். புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயா இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன் என்று தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியிட்டிருந்தார்.  இப்படிப்பட்ட ஜெயேந்திரரின் விமர்சனத்தை சர்வ சாதாரணமாக எதிர்கொணடார் நித்தியானந்தா.
ஜெயேந்திரரது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன்  கொல்லப்பட்டார். சங்கராச்சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. என்பதுதான் குற்றச்சாட்டு. அதன்மீதுதான் வழக்கு நடக்கிறது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவுபடுத்தினார். ஜெயேந்திரரோ, பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக சங்கர ராமன் கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டால் புதுச்சேரி நீதிமன்றப்படிகளில் நிற்கிறார். சங்கரமடத்தின் மானம் கைய்யில் தண்டத்தோடு நடந்துகொண்டிருக்கிறது. இதை குறித்தெல்லாம் கேட்க வக்கில்லாத இந்துத்துவ அமைப்புகள்தான் நித்தியானந்தாவை கேள்வி கேட்கின்றன. நித்தியானந்தாவை  ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பதல்ல நம் கேள்வி. பார்ப்பானைவிட பார்ப்பனியத்தைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு அரதப்பழசான இந்து மதத்தை அறிவியலின் துணையோடு இன்றைய கார்ப்பொரேட் கலாச்சார இந்துக்களைக் கவரும் நித்தியானந்தா உள்ளபடியே மிகவும் ஆபத்தானவர் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. அதேநேரத்தில் இந்து மதத்தின் உயிர் நாடியான ஜாதிமுறையைக் காக்கும் பணிகளில் ஒன்றான மடங்களைக் காக்க இந்த இந்துத்துவாக்கள் துடிப்பது ஏன்? எல்லோரும் இந்துக்கள் தான் என்று வெட்கமின்றி சொல்லிக்கொண்டே ஆதீன மடத்திற்கு சென்று வழிபடுவேன் என்று உறுமும் அறிக்கை விடும் நபர்களால் சங்கர மடத்திற்குள் சென்று இவர் கோவணத்தை அவிழ்க்க முடியவில்லை. இந்து மதக்காவலர்களாக வேடம் பூணுபவர்கள் முதலில் உள்நுழைய வேண்டியது சங்கரமடத்தில். துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? பூணூல் தடுக்கிறதா? உங்கள் மதத்தின் பெருமை சீரழிந்துவிடுமா? சீரழிய என்ன இருக்கிறது. சீரழிந்த மதத்தில் சீரழிய என்ன இருக்கிறது. அழியத்தான் கொஞ்சம் உங்கள் மதம் மீதமிருக்கிறது.

ஒரு சி.டி
விரைவில் நித்தி பற்றி குறும்படம் ஒன்று எடுக்க இருக்கிறாராம் நடிகை ரஞ்சிதா. ஏற்கெனவே எடுத்த குறும்படம் தான் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதே. அதற்குள் அடுத்த குறும்படமா? என்று குதூகலித்து கமெண்ட் போடுகிறார்கள் இணையதள இளைஞர்கள்.
ஒரு இடி!
நித்தியானந்தா ரஞ்சிதா என்ற பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஜெயேந்திரர் கொடுத்த அறிக்கைக்கு நித்தி பதில் சொல்வது ஒரு புறம் என்றால், என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்குத் தகுதியில்லை என்று ரஞ்சிதா விட்ட அறிக்கை சங்கர மடத்துக்குக் கிடைத்த இடி. சபாஷ்! சரியான போட்டி! எங்கே பார்ப்போம். ஒவ்வொருவரின் வண்டவாளங் களையும் தண்டவாளத்தில் ஏற்றி, மாறி மாறி உங்களை நம்பும் மடப் பதர்களுக்கு நீங்களே விளக்கத்தையும் கொடுத்து விடுங்கள். எங்கள் பணி கொஞ்சம் குறையும்.

2 comments:

Seeni said...

nalla pakirvu!

Anonymous said...

kaamakodi means what?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...