Saturday, May 19, 2012

மத்திய அரசு கொண்டு வரும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா மாநில உரிமைகளை முற்றிலும் பறிக்கும் ஏற்பாடாகும்


நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா மாநில உரிமைகளை முற்றிலும் பறிப்பதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தற்போது மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பற்றிய 2011 மசோதா, (மாநிலங்கள் அவையில் உள்ளது) மிகவும் மோசமானது. மாநில அரசுகளின் கல்வி உரிமையை - அதன் பட்டியலிலிருந்து முதலில் (1976-இல்) பொதுப் பட்டியலுக்கு - விவாதம் இல்லாது நெருக் கடி நிலை காலத்தின்போது - நகர்த்திக் கொண்டதை விட மிக மிக கொடுமையானது இது!

அன்றே எதிர்த்தோம்!

இந்த மசோதா பற்றி முதலில் மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறியபோதே, நாம் கடுமையாக எதிர்த்தோம். பல துணைவேந்தர்கள் உட்பட வந்த நிபுணர் குழு என்ற தலையாட்டித் தம்பிரான்கள் முன்னிலையிலேயே தமிழ்நாடும், கேரளமும் தத்தம் எதிர்ப்பைப் பதிவும் செய்துள்ளன.

இதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான கூட்டாட்சித் தத்துவத்திற்கே இந்த மசோதா வேட்டு வைத்து தகர்ப்பதாக உள்ளது என்ற உண்மையைப் புரிந்து, மாநில உரிமை கோரும் அத்துணை முதல் அமைச்சர்களும், கல்வியாளர்களும் வெளிப்படை யாக இதனைக் கண்டித்துப் போர்க் குரல் எழுப்ப வேண்டும். எல்லா அமைப்புகளையும் ஒழித்து விட்டு ஏழு பேர் கையிலாம்!

இம்மசோதா தற்போதுள்ள அமைப்புகளான, பல்கலைக் கழக மான்யக் குழு. அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழு தேசிய கல்விக் குழு இவைகளை ஒழிப்பதோடு, மருத்துவப் படிப்புப்பற்றி முடிவு செய்யும் மருத்துவக் கவுன்சில், நர்சிங் கவுன்சில், சட்டப் படிப்பு பற்றிய பார் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் உட்பட எல்லா அமைப்புகளையும் ஒழித்துவிட்டு, மத்திய அரசால் உருவாக்கப்படும் தேசிய கமிஷன் என்ற ஏழு பேர் கொண்ட குழுவே எல்லாமுமாய் இருக்குமாம்!

உயர் கல்வி முழுவதும் மத்திய அரசின் (யூனியன் லிஸ்ட்)   பட்டியலுக்குக் கீழேயே கொண்டு வரப்படுமாம்.

இந்த மசோதாவின் 17(2) பிரிவின்படி இதுதான் சட்டப்படி உருவாகவிருக்கும் ஆபத்து.

இந்த எழுவர் (சப்தரிஷிகள்?) தான் இந்தியாவின் உயர்கல்வி பற்றி பல்கலைக் கழகத் துவக்கம், கல்லூரிகள் - அவை அளிக்க வேண்டிய பட்டங்கள் - மாணவர் சேர்க்கை பற்றிய எல்லாவற்றையும் முடிவு செய்வார்களாம்!

12ஆம் வகுப்புக்கு அப்பாற்பட்ட அத்தனை உயர் கல்வி வகுப்புகளும் இவர்கள் அதிகாரத்தின் கீழ்தான் வருமாம்!

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் நியமனம்கூட...

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனம்கூட மாநில அரசின் அதிகாரத்திலிருந்து, முற்றாக எடுக்கப்பட்டு விடும் அபாயமும் வெவ்வேறு பகுதி மொழிகளின் கலாச்சாரம், எதுவுமே தெரியாத ஒருவர் பல்கலைக் கழகத் துணைவேந்தராகி ராஜிய பாரம் நடத்துவாராம்! என்ன விநோதம்! இது சம்பந்தமான விரிவான விவாதம் நாட்டில் நடைபெறவே இல்லை.

மாநில முதல் அமைச்சர்கள், தீவிரவாதம் சம்பந்தப்பட்ட   அமைப்பினை மத்திய அரசு உருவாக்குவதுபற்றி தத்தம் மாநில உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிய எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில்,  இந்த உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதா (2011) மிகப் பெரிய அளவு - மாநில அரசு உரிமையைப் பறிக்கும் மக்கள் விரோத மசோதாவாகும்!

இதுபற்றி முதல் அமைச்சர்களும், டாக்டர்கள், கல்வி அறிஞர்கள் மற்றும் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இந்திய பார் கவுன்சில் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேரில் வந்து சந்தித்து, இந்த மசோதாபற்றிய நிலையை விளக்கி U.P.A. என்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதாலும், மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும், மத்திய அரசிடம் உள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி, இந்த மசோதாவைக் கை விடச் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்!

கலைஞர் அவர்களின் நிலைப்பாடு

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களும் இதுபற்றி இணக்கமாகச் சிந்தித்து, மத்திய அரசு இதுபற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ள தாகத் தெரிகிறது!

நமது மாநில முதல் அமைச்சர் அவர்களும், மற்ற முதல் அமைச்சர்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை ஒருமுனைப்படுத்த வேண்டும்.

இது சட்டமாகி விட்டால், மாநிலங்களின் கல்வி உரிமை அடியோடு பறிபோய் விடும்.

ஒவ்வொரு மாநிலமும் மொழி, கலாச்சாரம், பண் பாட்டில் தனித்தனியானவை; இவற்றின் பன்முகக் கலாச்சாரத்தைப் பறித்து ஒருவகைப் பாசிசத்தை உருவாக்குவதே இம்மசோதா; எனவே நாடு தழுவிய அளவில் கல்வியாளர்களின் எதிர்ப்பும் அவசர அவசியமாகத் தேவை.

எடுத்துக்காட்டாக, நுழைவுத் தேர்வை தமிழ்நாடு எதிர்த்து ரத்து செய்துவிட்டது; ஆனால் அவை எல்லாம் இனி தலை கீழாக மாற்றப்படக் கூடும்!

பல்வேறு அமைப்புகளால் காலதாமதம் ஆகின்றன என்கிறபோது, ஏழு பேர்களே எல்லாம் என்றால் அது இன்னமும் மோசமான நிலைக்குக் கொண்டு போய் விடாதா?

எம்.பி.க்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டிக்க வேண்டும்

அம்மசோதாபற்றி தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தங்களது எதிர்ப்பை அவையில் பதிவு செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.

அந்தந்தக் கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு ஆணையிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...