Friday, May 11, 2012

மரபு மீறப்படுகிறதா?


நேற்றைய தினமணியின் முதல் பக்கத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விலாவாரியாக வார இதழ்போல   படங்கள் எல்லாம் போட்டு விளாசித் தள்ளியுள்ளார் அதன் ஆசிரியர்.

கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் மலரும் நினைவுகளாக வெளியிட்டு இருக்கிறார்.

குடியரசுத் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தால் துணைக் குடியரசுத் தலைவராக தென்னிந்தியர் இருக்க வேண்டும்; தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தால் வட இந்தியாவைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவராக இருக்க வேண்டாமா? இதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர்தானே முயற்சி செய்திருக்க வேண்டும்?

கலைஞர் நினைத்திருந்தால் பேராசிரியர் க.அன்பழகனையோ, விடுதலை கி.வீரமணியையோ கூட குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து இருக்கலாமே என்று நீட்டி முழக்கி எழுது கோல் பிடித்திருக்கிறது தினமணி.

ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குக் கூடப் போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம் என்று உலகத்திற்கே தெரியும். அப்படி இருக்கும் பொழுது திராவிடர் கழகத்தின் தலைவரைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கலைஞர் பரிந்துரை செய் திருக்கலாம் என்று எழுதுவது என்பது அசல் பார்ப் பனக் குசும்பும், குறும்புமாகும். விஷமத்தனமும்கூட!

திராவிடர் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய எவ்வளவோ சமூகப் புரட்சிப் பணிகள் இருக்கின்றன. இரண்டு முறை சென்னை மாகாணத்தின் பிரதமராக பதவி ஏற்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆளுநர்கள் கேட்டுக் கொண்ட போதும் கூட முகவரி தெரியாமல் இங்கு வந்து விட்டீர்கள்; மாகாண பிரதமர் பதவிக்கு எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள். அங்கே செல்லுங்கள்; அதே நேரத்தில் இந்தச் சமூகப் பணிக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்று சொன்ன உண்மையான புரட்சித் தலைவரான தந்தை பெரியாரின் தலைமைச் சீடர்தான் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

விளையாட்டாகவோ, வினையாகவோ அவரின் பெயரை இப்படிப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கதாகும்.  தி.மு.க. வடக்கு - தெற்கு பேசினால் பிரிவினை வாதம் என்று பேசிக் கொண்டிருந்த தினமணி வகையறாக்கள் இப்பொழுது வடக்கு - தெற்கு பேச ஆரம்பித்துவிட்டனவே - இது என்ன வாதமாம்?

வடக்கு -  தெற்கு என்பதை விட குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று குரல் கொடுத்தது திராவிடர் கழகம். குஜராத்தில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை அடக்கிட இராணுவத்தை அனுப்பி ஒடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசுத் தலைவர் என்ற முறையில் கே.ஆர். நாராயணன் அவர்கள் அறிவுறுத்தியும் அதற்கு செவி மடுக்கவில்லையே - அது பற்றியெல்லாம் என்றைக்காவது தினமணிகள் எழுதியதுண்டா? விமர்சித்ததுண்டா?

பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று சொன்னால் இதே தினமணிகள் எப்படி எடுத்துக் கொள்ளும்? பிரதமர் பதவியையெல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாமா என்று இதோபதேசம் செய்யும்.

குடியரசுத் தலைவர் பதவி என்பது - அதிகாரமற்றது. பிரதமர் பதவி என்பது வலிமை வாய்ந்தது என்பதால் அவர்களின் எழுதுகோல்கள் சந்தர்ப்பச் சதிராட்டங்கள் போடும்.

தாழ்த்தப்பட்ட ஒருவர் இந்தியாவில் பிரதமராக வர இன்னும் நூறாண்டுகள் பிடிக்கும் என்றாரே - அரசியலில், பொது வாழ்வில் மூத்த தலைவரான - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜகஜீவன்ராம்! - அதன் பொருள் என்ன என்று தினமணிக்குத் தெரியுமா, தெரியாதா?

இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு யார் வரவேண்டும் என்பதை வடக்கு - தெற்கு என்று பார்ப்பதை விட சமூக நீதிப் பார்வையில் பார்ப்பதுதான் பொருத்தமானதும் - சரியானதுமாகும்.

ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்களே - அப்பொழுது அது குறித்து ஒரு வரி எழுதி இருக்குமா பார்ப்பன ஊடகங்கள்?

எதையாவது சொல்லி கலைஞர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இதற்குள் இருக்கும் இரகசியம்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...