Saturday, March 31, 2012

திராவிடர் கழகத் தலைவரை சீண்டும் திருவாளர் சோ


துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய திருவாளர் சோ ராமசாமி பொருத்தமில்லாத இடத்தில், தேவையில் லாமல் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார். பார்ப்பன வட்டாரங்களுக்கு அவர்தான் இலக்கு. காரணம் அவர்தானே திராவிடர் இயக்கத்தில் அடிப்படைக் கொள்கையாகிய ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேரை சுட்டுப் பொசுக்குகிறார்!

நாள்தோறும் தினமலர் அர்ச்சனை செய்கிறது ஆசிரியர் வீரமணி அவர்களை என்றால், அதற்கான காரணத்தைப் புரிந்து  கொள்வது வெகு எளிதே!

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மீறிய தற்காக அம்மாநில அரசை டிஸ்மிஸ்ஸே செய்யலாம்.

வீரமணி போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை எப்படி மீறலாம் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் யார் வழிகாட்டிகள்? இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடந்து, வழிகாட்டியதே தமிழ்நாடுதானே? மீற முடியும், மீறலாம். கோர்ட் என்று நாம் பெயருக்குத்தான் வைத்திருக்கிறோம். அதற்கு நாம் எவ்வளவு தூரம் கீழ் படிகிறோம் என்பது கேள்விக்குரியதுதான் என்று பேசி இருக்கிறார் (துக்ளக் 4.4.2012 பக்கம் 6)

இதே திருவாளர் சோ ராமசாமி நீதிமன்ற தீர்ப்பு தமது இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதகமாக இருந்தால் அதனை எந்தப் பார்வையில் பார்க்கிறார்? குஜராத் கலவரத்தில் நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையம் மோடிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தபோது ஆகா! அற்புதம் அற்புதம்! என்று ஆடினார்.

பாபர் மசூதி இடிப்புப்பற்றி விசாரித்த லிபரான் ஆணையம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சொன்னால் அது அபத்தம் என்று எழுதக் கூடிய சோ நீதிமன்ற தீர்ப்புப்பற்றியெல்லாம் விமர்சிக் கலாமா?

இடஒதுக்கீடு விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகக் கூறி, அதில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை சம்பந்தப்படுத்துகிறார். 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும், பாடுபடும் ஓர் இயக்கத்தின் தலைவர் போராடிப் பெற்ற 69 விழுக்காடு இடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது அவரின் கடமையல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சரத் துக்களைப் பயன்படுத்தி, அதற்குச் சட்டப் பாது காப்பை உண்டாக்கித் தருதல் எப்படி சட்ட விரோத மாகும்?

தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் 76ஆவது திருத்தத்தையும் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டதே.

எந்த உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்றதோ, அதே உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு செய்துள்ள சட்ட ஏற்பாடு செல்லும் என்று தீர்ப்புக் கூறிவிட்டதே - சட்டப்படியான இந்தச் செயல் எப்படி நீதிமன்றத்தைச் சிறுமைப்படுத்தியதாகும்?

உண்மை என்னவென்றால் நீதிமன்றம் தமிழ் நாட்டின் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் செல்லாது என்று சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் இந்த சோ ராமசாமி அய்யர்களின் ஆசையும் - வெறியுமாகும்.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வந்ததே இந்த இடஒதுக்கீட்டுக்காகத் தானே? அதற்காகவும் போராடி வெற்றி பெற்றதும் தந்தை பெரியாராலும், தமிழ்நாட்டின் சமூக நீதி ஆர்வலர்களாலும்தானே! காமராசரை மதிப்பதாகக் கூறும் இதே துக்ளக் ராமசாமிக்கு இடஒதுக்கீடுப் பிரச்சினையில் அவரின் நிலைப்பாடு என்ன என்று தெரியாதா?

நீதிமன்ற தீர்ப்புப் பிரச்சினையில் சற்றும் பொருத்த மில்லாமல் திராவிடர் கழகத் தலைவரை இழுத்துப் போட்டுக் குளிர் காய்வதன் மூலம் தன் பார்ப்பன ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று பொருள்.

69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைக் குறைகூறும் இதே சோ, திராவிடர் கழகத்தலைவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொண்ட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பற்றி விமர்சிக் காதது ஏன் - அதற்குப் பெயர்தான் இனப்பற்று என்பது. பார்ப்பன எதிர்ப்பாளரான வீரமணி கூறிய கருத் தினை ஏற்று இப்படி நடந்து கொண்டு விட்டாரே ஜெயலலிதா என்ற கோபம் உள்ளுக்குள் இருக்கலாம் என்றாலும் இனப்பற்று வெளிப்படையாக விமர்சிக்கத் தடை போடுகிறதே!

பார்ப்பனீயத்தின் நயவஞ்சகம் கறுப்புச் சட்டைக்காரர்களிடம் எடுபடாது - எச்சரிக்கை!


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...