Tuesday, March 6, 2012

இவைகளுக்கு முதுமையோ, முடிவோ உண்டா?


மனிதர்களின் வயதுக்கு முதுமை உண்டு. ஆனால், ஆசைகளுக்கு முதுமை உண்டா? உடலுக்கு முதுமை உண்டு, உணர்வுக்கு முதுமை உண்டா? ஊழல், லஞ்சம் ஆகியவை உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பற்பல கால கட்டங்களில் பல்வேறு அவதாரங்களாக அவதரித்து, ஆடிய ஆட்டங்கள் புராண காலந்தொட்டு புதுமைக் காலமான இன்றுவரை செய்து வரும் திருவிளையாடல்கள் கொஞ்சமா? நஞ்சமா? அவைகளுக்கு முடிவு உண்டா?
ஆசைகள், பொய், களவு, சூது, வஞ்சம் - இவை புத்தர் காலத்திலும் சரி, திருவள்ளுவர் காலத்திலும் சரி - இருந்த காரணத்தினால்தானே அவைகளைக் கண்டித்து அப்பெரி யோர்கள் அறத்தை - மனத் தூய்மையை மக்களுக்குப் போதித்தார்கள்.
இல்லையானால் அதற்கென்ன அவசியம் அப்போது?
இழத்தொறூஉம் காதலிக்கும்  சூதே போல் என்ற உவமைதான் எவ்வளவு அற்புதமான ஒன்று!
மற்ற தோல்விகள் மனிதர்களைச் சலிப்படையச் செய்யும்; சங்கடப்படுத்தி செயலிழக்கச் செய்யும்; ஆனால் சூதாட்டமோ இழக்க இழக்க அதில் ஒரு ஈர்ப்பு - இழந்ததை மீட்க எதையும் முன் வைத்து ஆடத் தூண்டுமாம்! மீட்கவேண்டும் என்ற வீண் ஆசை!
மகாபாரதக் கதையை விட கொடு மையான எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா?
வீட்டை வைத்து சூதாடி இழந்தனர் பாண்டவர்
நாட்டையும் வைத்து ஆடித் தோற்றனர்
பின் வைத்து ஆட எதுவுமே இல்லை
தேடித் தேடிப் பார்த்தார் தரும(?)புத்திரர்
(கடைசியாக அய்வருக்கும் தேவியாம் துரவுபதையை - தனக்கு 5இல் ஒரு பாகம்தான் உரிமை என்பதைக் கூட யோசிக்காமல், அவரையும் வைத்து சூதாடித்தான் தோற்றார் அய்வரில் உயர்ந்தவர் என்று சொல்லப்பட்ட தரும புத்திரர்!
அன்று ஆரம்பித்தது இன்று வரை சூதாட்டம் புதுப்புது உருவெடுத்துள்ளதே!
லாட்டரி சீட்டு - அதிலும் இன்று பலவகைச் சுரண்டல் லாட்டரி, ஆன் லைன் லாட்டரி என்று பலப்பல வகை புதிய உத்திகள் புகுந்த கொள்ளை முறைகள்!
அது போலவே சிறைச்சாலைகளின் கதவுகள் ஜாதி, மத, அரசியல், நாடு - வித்தியாசமின்றி - என்றும் எல்லோ ருக்கும் - தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள், அசல் வழக்குகளில் சிக்கியவர்கள் தொடங்கி அழி வழக்குகள் போடப்பட்டவர்கள் வரை) அனைவருக் கும் சம வாய்ப்பை அளிக்கிறதே!
இன்றும் அந்த சிறைச்சாலைகள் சுக்ராம்களையும், இராவணன்களையும் கூட வித்தியாசமின்றி வரவேற்று கதவு திறக்கிறது. லோக குரு முதல் லோக்கல் குருக்கள் வரை அனைவருக்கும் கதவுகள் திறக்கப்படுகின்றன. இது போலவே நீதிமன்றங்களும் கூடத்தான்.
கடவுள் பேரால் - சத்தியம் செய்து சாட்சிக் கூண்டில் ஏறி நிற்கும் சாட்சிகள் - இருதரப்பும் - டிபென்ஸ் (Defence) தரப்பு குற்றம் சுமத்துவோர் (Prosecution) தரப்பு இரு தரப்புமே  - நான் சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை என்று சத்தியம் செய்து விட்டுத்தான் சாட்சியம் கூறத் தொடங்குகின்றனர்!
இரு தரப்பிலும் மாட்டிக்கொண்டு கடவுள் படும்பாடு கைதி படும்பாட்டை விடக் கொடுமை அல்லவா!
குற்றங்கள் புதுப்புது வடிவத்தில் கணினி யுகத்திலும் - சைபர் கிரைம் ((Cyber crime) களாக கிளம்புகின்றனவே!
உங்களுக்கு ரூ.1 கோடி லாட்டரியில் விழுந்துள்ளது; நீங்கள் திடீர் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பணத்தைத் தரவேண்டும். இந்த வங்கியில் இந்தக் கணக்கில் ரூ.5 லட்சத்தைப் போடுங்கள் - ரூ. ஒரு கோடி செக், தானே உங்களுக்கு வரும்!  பேராசை - சிந்தனை வழியைக் கூட  புரைகளாக மறைத்துவிடுகிறது!
ஏமாந்து ஓலமிட்டு, ஒப்பாரி வைப்பதும், என்றும் சிரஞ்-சீவியாகி (தலைவெட்டி யாகி), இழந்தவர் தலை இல்லாத (முண்டம் என்று கடுமை யாகக் கூறக் கூடாது அல்லவா?) வராகி நிற்கும் கொடுமைதான் என்னே!
ஏமாறுகிறவர்களும், ஏமாற்றுகிற வர்களும் என்றும் எக்காலத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின் றனர்!
இவர்களது சீரிளமைத் திறம் வியந்து செயல் துறந்து, தூற்றினாலும் கூட இவர்கள் திருந்தவே மாட்டார் கள் என்பதே சமூகத்தின் அவ்வப் போதைய அவலங்கள்!
எனவே நீண்ட காலம் முன்பே, மந்திரம் ஜெபித்தும் ஜெயிலுக்கு வந்து பெயிலுக்கு அலைந்து வரும் காஷாய சாமியார்களுக்கும் உறைக்கும்படி பாடினார்கள்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்கவேண்டாம்!
என்று. என்றாலும் அந்த மனத் தின் சபலமோ என்றும் மாறாதது தானே!
இல்லையானால் பணத்தின் மீது மோகம் இப்படி படாடோப வாழ்க்கை வாழ்ந்து பவிசுகள் தேடி, மனம் - மானத்தை இழந்து கேவல வாழ்வுக்கு மனிதர்களை கீழிறக்கித் தள்ளுமா? சிந்திப்போமா?


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...