Wednesday, March 28, 2012

ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!!


ஜெனிவா தீர்மானத்திற்குப் பிறகும் சிங்கள அரசின் ஆணவமும், திமிரும் அடங்கிடவில்லை!  ஓநாய் ஒருபோதும் சைவமாகாது! ஒரே தீர்வு தனி ஈழமே!! திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை
ஜெனிவாவில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, இலங்கை அரசின் திமிரும், ஆணவமும் அடங்கிப் போய்விடவில்லை; மாறாக இந்தியாவின் சுயமரியாதைக்கே சவால்விடும் வகையில் நடந்துகொண்டு வருகிறது. இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில், தனி ஈழம் ஒன்றே இறுதித் தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் இராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்பற்றி ஆராய்ந்து அறிந்து, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அவர்கள் நியமித்த மூன்று நாட்டு உறுப்பினர்கள் குழு அதன் அறிக்கையை தந்து 10 மாதங்களுக்குமேல் உருண்டோடிவிட்டன.
ஜெனிவா தீர்மானம்
அண்மையில் சென்ற வாரம் (23.3.2012) ஜெனிவாவில் கூடிய அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கையின் இந்தப் போர்க் குற்ற, மனித உரிமைகள் மீறல்பற்றி அமெரிக்கா முன்வந்து, இலங்கைமீது கண்டனத்தோடு, மீண்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு வழிவகை செய்ய வற்புறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தது.
இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தினை வரவிடாமலும், அது வெற்றியடையாது இருக்கவும் தன்னாலான அத்துணை முயற்சிகளையும் - பல்வேறு முறைகளையும் கையாண்டும், கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தும், இறுதியில் படுதோல்வியைத்தான் அடைந்தது.
இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் அழுத்தம்
இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்கள் கோபாவேசம், கட்டுப்பாடான குரல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருப்பதையும் மறுபரிசீலனை செய்வோம் என்ற தி.மு.க.வின் எச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக ஆளுங்கட்சி, இடதுசாரிகள் எல்லாம் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்ததால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் - அழுத்தம் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியஅரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, ஆதரித்து வாக்களிக்கவும் இந்திய அரசு முன்வந்து, தனது மனித உரிமைக்கான கவுரவத்தை உயர்த்திக் கொண்டது - தமிழர்களின் நன்றிக்குரியதாகவும் ஆயிற்று.
இலங்கை அரசு என்ற அடிபட்ட ஓநாய்!
இது கண்டு அடிபட்ட ஓநாய் சீறி எகிறிப் பாய்வதுபோல, தன்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, உலகத்தின் பற்பல நாடுகளுக்கு தனது உண்மையான கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்து தெரிந்துவிட்டதே என்ற எரிச்சலால் நிலை தடுமாறி நடந்துகொள்ளுகிறது இலங்கையின் இராஜபக்சே அரசு!
நாம் எதிர்பார்த்த ஒன்றுதான் இது! தன்னுடைய அரசு இலங்கையின் தீவிரவாதத்திற்கு எதிரானதுதானே தவிர (இலங்கை) ஈழத் தமிழர்களுக்கு - சிவிலியன்களுக்கு - எதிரானதல்ல என்ற பழைய பாட்டைப் பாடிக் கொண்டே, சொந்த நாட்டு குடிமக்கள் மீதே விமானம்மூலம் குண்டு வீசி அழித்த கொடுமை உலக வரலாறு இதற்குமுன் அறியாத ஒன்று!
நம்பிய மக்களைக் கழுத்தறுத்த இலங்கை இராணுவம்!
தமிழர்களே வன்னிப் பகுதிக்கு பத்திரமாக வந்து விடுங்கள்; உங்களுக்கு அது பாதுகாப்பான பகுதி என்று முன்பு கூறியது இலங்கை அரசு. குழந்தை குட்டிகளும், பெண்களும், முதியவர்களும் ஆக சுமார் மூன்றுலட்சத்து முப்பதாயிரம் மக்கள் அங்கே போனால் குண்டு விழாது என்று நம்பிச் சென்ற நிலையில், அந்த மக்களை வான்வழித் தாக்குதல் (குண்டுவீச்சு) மூலம் சிங்கள இராணுவம் கொன்று அழித்ததே! (நேரில் பார்த்த ஒரு செய்தியாளர் விவரிப்பு இரண்டாம் பக்கம் காண்க) அய்.நா. மனித உரிமை மீறல்பற்றி ஆய்வு அறிக்கை தரும் தகவல் இது!
போர் முடிந்ததே; முள்வேலிகளுக்குள் - ஆடு, மாடுகளை விடக் கேவலமாக அந்நாட்டுத் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கும் அவலம் நீங்கியதா?
180 நாள்களில் முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியமர்த்துவோம் என்ற உத்தரவாதத்தை இராஜபக்சே தந்தது நீர்மேல் எழுத்தா? காற்றில் பறந்த குரலா?
இந்நிலையில், காலந்தாழ்ந்தாவது உலகப் பார்வை வெளிச்சம் இந்த அடிமை இருட்டில் வதியும் எமது ஈழத் தமிழினத்திற்குக் கிடைத்தது கண்டு நம்மைப் போன்ற - கருமத்திற்குரிய கடமையாளர்கள் ஆறுதல் அடைகிறோம்.
இப்பொழுதும் நடப்பது என்ன?
1. இலங்கை அரசு உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒடுக்குவது மட்டும்தான் அதன் குறி என்றால், ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு தந்து அவர்களது நம்பிக்கையை, நல்லெண்ணத்தைப் பெற்று, நல்லாட்சி தமது ஆட்சி என்று உலகத்தாருக்குக் காட்டியிருக்க வேண்டாமா?
ஆனால், இன்று அங்கே இலங்கையில் நடப்பது என்ன? உலக செய்தியாளர்களுக்கும் அடி- உதை; அவர்கள் போர்க்குற்றங்களை விமர்சித்தனர் என்பதற்காக கை, கால்களை உடைப்போம் என்று பகிரங்கமாக பண்பற்றுப் பேசுகிறார் இராஜபக்சே பரிவாரங்களில் ஒருவரான இலங்கை அமைச்சர் பெர்வின் சில்வா என்ற சிங்களர்.
2. வெளிப்படையாகவே அய்.நா. தீர்மானத்திற்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று திமிருடன் உலக நாடுகளுக்கும், அய்.நா.வுக்கும் சவால் விடுகின்றது சிங்கள இராஜபக்சே அரசும், அதன் பரிவாரங்களும்.
இந்தியாவை அவமதிக்கும் பேச்சு!
3. நமது இந்திய அரசிடம் பெற வேண்டியதை கெஞ்சி, கொஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக் கொண்டு, நமது பிரதமர் இலங்கை அதிபருக்கு விளக்கம் தந்து எழுதிய கடிதத்தையும், இந்தியப் பிரதமரையும், அவரது அரசையும் மிகவும் கேவலப்படுத்துவதுபோல், இந்தியப் பிரதமருக்குப் பதில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று ஆணவத்துடன் கூறுகிறார் சிங்கள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் என்ற சிங்கள ஓநாய்க் கூட்டத்தின் ஓருருவம்!
4. அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் இலங்கைத் தூதரகத்தை மூட யோசிக்கிறார்களாம்! ஆற்றிடம் கோபித்து கால் கழுவாமல் போன புத்திசாலி போன்ற நடவடிக்கை அல்லவா இது!
ஈழத் தமிழர்களை சுயமரியாதையுடன் வாழ வைக்கும் கடமை நமக்கு உண்டு என்று நமது பிரதமர் சாதுபோல் நாடாளுமன்றத்தில் தனக்கே உரிய மென்மைக் குரலில் பேசினார்!
இப்போது ஈழத் தமிழர்கள் சுயமரியாதைக்கு சிங்கள அரசால் ஏற்பட்ட பங்கம், அவமரியாதை இந்திய அரசுக்கும், பிரதமருக்குமே அவர்களது திமிர்வாத அகங்கார ஆணவப் பேச்சால் வெளியாகிவிட்டது!
இதுதான் சிங்கள வெறியர்களின் உண்மை முகம்! இதை இப்போதாவது இந்திய அரசு புரிந்துகொள்வது முக்கியம்!
நிரந்தரத் தீர்வு - தனி ஈழமே!
ஓநாய் சைவமாகிவிட்டது என்பதை நம்பினால், அது ஓநாயின் குற்றமல்ல, நம்புபவரின் தவறு. அல்லது தப்புக் கணக்கு!
5. அமெரிக்காவின் தீர்மானத்தை செயல்படுத்த அழுத்தம் தரவேண்டியதில் இந்தியாவின் பங்கு மேலும் பெருகவேண்டும்.
அய்.நா.வில் பொருளாதாரத் தடை போன்ற கடும் நடவடிக்கைகள் வரவேண்டும். தமிழீழம்தான் இனி நிரந்தரத் தீர்வு என்ற தி.க., தி.மு.க.வின் யோசனைதான் இனி ஒரே  ஒரு வழி.
மருந்துகளால் முடியாதது - இனி அறுவை சிகிச்சையால்தான் முடியும். இந்திரா காந்தி காட்டிய வழியை (வங்கதேசம்) இனி மத்திய அரசு மறக்கக் கூடாது.
கி. வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...