Tuesday, March 27, 2012

அய்.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டார்களாம்: இலங்கை அறிவிப்பு


கொழும்பு, மார்ச் 27- அய்.நா. மனித உரிமை குழு தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று, இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் அறிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறலை கண்டித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அய்.நா. மனித உரிமைகள் குழு கூட்டத்தில் இந்தியா ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. கொழும்பு நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ், இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு கட்டுப்படுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. இது அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் அல்ல'' என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், தீர்மானத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் ஏற்றுக்கொள்ளும், நடைமுறைக்கு சாத்தியமான பரிந்துரைகளை மட்டுமே அமல்படுத்துவோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ நாங்கள் பதில் அளிக்க வேண்டியது இல்லை'' என்று, இலங்கையின் மற்றொரு மந்திரியான நிர்மல் ஸ்ரீபல்ல டிசில்வா தெரிவித்தார்.

தங்கள் நாடு அமைத்த போரினால் பெற்ற படிப்பினை மற்றும் சமரச நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை தொடர்ந்து அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ராஜபக்சேவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் பீரீஸ், பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்துக்கு பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.


.
 2

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...