Monday, March 12, 2012

மாயாவதியின் வீழ்ச்சி!

- மின்சாரம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மாயாவதி என்ற பெண்மணி, இந்தியாவிலேயே மக்கள் தொகை விழுக்காட்டில் பார்ப்பனர்கள் அதிகமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் முதல் அமைச்சர் ஆனார் என்பது இந்தியச் சமூக வரலாற்றில் புரட்சிகரமானதுதான்.
பலே என்று பாராட்டினோம் - தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் மூலிகை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே என்று கம்பீரமாகத் தலை நிமிர்ந்தோம் ஒரு காலத்தில் பகிஷ்கரித் ஹிதயா (Welfare of the Oppressed) என்றார் அண்ணல் அம்பேத்கர்.
பகுஜன் ஹிதயா என்றார் கன்ஷிராம்.
அதுவரை சரிதான், அதன் ஆணி வேரை வீழ்த்த வெட்டரிவாள் தூக்கினார் மாயாவதி. புதிய கோஷம் சர்வஜன் என்றார்.
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தான் இந்நாட்டுக்குரிய பெரும் பான்மையான மக்கள்; இவர்கள் கைகளில் தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்பது இதன் அடிநாதம்.
இதற்காகவே மத்திய அரசுத் துறையில் பணியாற்றிய கான்ஷிராம் பணியைத் தூக்கி எறிந்து பகுஜன் என்ற கட்சியைத் தொடங்கினார்.
உத்தரப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தோன்றிய மாயா வதியைக் கண்டெடுத்தார் - தன் சித் தாந்தத்தை அந்தத் துடிப்பான பெண் மணியின் மூளையில் வளர்த்தார்.
அதன் அடிப்படையில் ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்திக் காட்டினார். அந்த அடிப்படையை மாயாவதி தொடர்ந்திருந்தால், இந்தியாவிலேயே தலை கீழ் அரசியல் மாற்றமொன்று மண்ணை முட்டி வெடித்துக் கிளம்பியிருக்கும்.
1995இல் மாயாவதி அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கான்ஷிராம் அவர்களின் உந்துதலால் செப்டம்பர் 16,17,18 நாள்களில் உ.பி. தலைநகரமான லக்னோவில் பெரியார் மேளா ஓகோ என்று கொண்டாடப் பட்டது.
இந்தியாவின் பல திக்குகளிலி ருந்தும் தனி இரயில்கள் மூலம் பகுஜன் மக்கள்  அதாவது நாட்டின் பெருவாரியான மக்கள்கூடி லக்னோவைத் திணற அடித்தனர்.
பரிவர்ஷத்தன் சவுக் (சமுதாய மாற்ற பூங்கா) ஒன்று உருவாக்கப்பட்டு மகாத்மா ஜோதி பாபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நாராயணகுரு, சாகு மகராஜ் ஆகி யோர்களுக்குச் சிலை வைக்க அடிக் கல்லும் நாட்டினார். அவ்விழாவில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகக் குடும்பத்தினர் தனி இரயில் மூலம் சென்று மகிழ்ந்தனர்.
பிராமணர்களை, சத்திரியர்களை வைசியர்களை, உயர் ஜாதியினரை செருப்பால் அடியுங்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்தர விட்டவர் மாயாவதி.
அத்தகைய மாயாவதி அடி சறுக்கியது எந்த இடம்? என்ன அவ சியம்? என்ற கேள்வி பிறந்து விட்டது.
2007இல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது தொடங்கியது மாயாவதியின் சறுக்கல்!
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகவே தொடங்கப் பட்டதுதான் பகுஜன் சமாஜ்.
ஆனால் அங்கு என்ன நடந்தது? மாயாவதி என்ன மாயாஜாலம் பண்ணினார்?
பகுஜன் என்பதை சர்வஜன் என்று திரிபுவாதமாக்கி, தன் அணியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண் டார். தன் கட்சிக்கே சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனரை தேசிய பொதுச் செயலாளராக ஆக்கினார். உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அவர் (Advocate General).
2007 சட்டப் பேரவைத் தேர்தலில் மானாவாரியாக பார்ப்பனர்களுக்கு இடங்களை வாரி இறைத்தார்.
வெற்றி பெற்ற 206 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் 62, முசுலிம்கள் 24, தாகூர் 18, பிற்படுத்தப்பட்டோர் 51
பார்ப்பனர்கள் 51
(நிறுத்தப்பட்ட இடங்கள் 80) ஒன்பது சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கும் 51 இடங்கள் என்ற நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்  இல்லாத ஒன்று தமிழ்நாடு சட்டமன்றத்தை எடுத்துக் கொண்டால் மொத்த பார்ப்பனர்களின் எண்ணிக்கை இரண்டே இரண்டுதான் (முதல் அமைச்சரையும் சேர்த்து)
2009 மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர் களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப் பட்டோருக்கு 17 இடங்கள் முசுலிம் களுக்கு 14 இடங்கள் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் பார்ப்பன அல்லாத உயர்ஜாதியினருக்கு 20 இடங்களை அளித்தார் மாயாவதி.,
தாழ்த்தப்பட்டோர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்களைவிட பார்ப்பனர்களுக்கு அதிகமாக இடங்கள் அளிக்கும் அளவுக்கு கான்ஷிராமின் சீடர் மாயாவதி அந்தர் பல்டி அடித்துவிட்டார்.
இதில் இன்னொரு மன்னிக்கப்பட முடியாத கொடுமை.
ஒரு வித்தியாசமான சட்டத்தை உத்தரப்பிரதேச சட்டமன்றம் நிறைவேற்றியது.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற மாபெரும் தலைவர்களின் பட்டியலிலிருந்து தந்தை பெரியாரின் பெயரை நீக்கும் திருத்தத்துடன் 2007 டிசம்பரில் மசோதா ஒன்றை நிறைவேற்றி, தன் அடி சறுக்கலை அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்து கொண்டு விட்டார். மாயாவதி (Periyar Goes Off Govt List of Great Leaders - The Times of India 6.1.2007).
எந்த மாயாவதி முதல் அமைச் சராகவிருந்தபோது லக்னோவில் பெரியார் மேளாவை நடத்தினாரோ, அதே மாயாவதி பதவிப் பசி என்னும் நோயால் பாதிக்கப்பட்டு, பார்ப் பனர்களின் கைப்பொம்மை ஆனார்.
2009 மார்ச்சு 22இல் உத்தரப் பிரதேசம் தியோரியாவில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். ஒன்றரை லட்ச மக்கள் திரண்டதாகக் கூறப்பட்டது.
அதில் வைக்கப்பட்ட முழக்கம். உ.பி. ஹை ஹமாரி ஹை
அப்டில்லி கி பாரிஹை!
பாரத் கீ. மஜ்பூரிஹை!
பேஷன் மாயாவதி
ஜரூரி ஹை!
உத்தரப்பிரதேசத்தைப் பிடித்து விட்டோம்!
இனி டில்லியையும் பிடித்து விடுவோம்! என்பதுதான் அந்த முழக்கங்கள்!
பிடித்திருக்க முடியும்தான். கான்ஷிராம் கொடுத்த அந்தக் கொள்கை முழக்கமான தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்ற அந்த பகுஜன் (வெகு மக்கள் பெரும்பாலான மக்கள்) என்ற முழக்கத்தை குமரி முனையிலிருந்து காஷ்மீர் வரை எடுத்துச் சென்றிருந்தால் ஒரு அரசி யல் திருப்பமே ஏற்பட்டிருக்க முடியும்.
அந்த ஆப்புதன்னைப அசைத்து விட்ட குரங்காக ஆகி விட வில்லையா?
குறுக்கு வழியில் பாய நினைத்து குற்றுயிரும் குலை உயிருமான நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி(BSP)படுக்கையில் வீழ்த்து விட்டதே!
அரசியல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே மாயாவதி
ஒரு கசப்பான காட்சியை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானது 2007இல் மாயாவதி முதல் அமைச்சராக ஆளுநர் முன் பதவிப் பிரமாணம் எடுத்தார்.
அவர் அமைச்சரவையில் இடம் பெற்ற பார்ப்பனர்கள் உறுதி மொழியைப் படித்தவுடனே என்ன செய்தார்கள்? கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் பார்ப்பனருமான சதிஷ் சந்திர மிஸ்ராவின் காலைத் தொட்டுக் கும்பிட்டனரே தவிர, முதல் அமைச்சர் மாயாவதிக்கு மரியாதையை அந்த முறையில் காட்டவில்லையே! அப்பொழுதாவது மாயாவதி பார்ப்பனமாயையின் அந்தரங்கத்தை தெரிந்து கொண்டு இருக்க வேண் டாமா?
ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்த போது தாழ்த்தப்பட்ட மக்களைக் கை விட்டார்; பார்ப்பன சாம்ராஜ்ஜியம் ஜாம்ஜாமென நடந்தது. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழைக்குரல் அம்பலத்தை எட்டவில்லை.
பார்ப்பனீயத்தின் போக்கைக் கண்டு முஸ்லிம்களும் கோபம் கொண்டனர்.
அதன் விளைவு 206 இடங்களில் செம்மாந்து திரிந்த மாயாவதியின் பி.எஸ்.பி., வெறும் 80 இடங்களைப் பெற்று பெரும் வீழ்ச்சிப் பள்ளத் தாக்கில் இப்பொழுது விழுந்துள்ளது.
இந்த வீழ்ச்சியின் மூலம் மாயாவதி பார்ப்பன அல்லாத சமூக மக்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
பார்ப்பனர் ஆதிக்கம் என்பது இந்தியாவின் ஒரு வரலாற்று நிலைப் பாடு. சமூகம், நிருவாகம், நீதித்துறை இவற்றின் கேந்திரப் பீடங்கள் இன்னும் அவர்களின் கைகளில்தான்.
அவர்களைத் தனிமைப்படுத்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ள தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கான்ஷிராம் முதலியோர் நடந்த பாதையைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
பாதையை மாற்றிக் கொண்டால் பள்ளத் தாக்குதான்; அங்கு வீழ்ந்து கிடக்கும் மாயாவதியைப் பார்த்த பிறகாவது பாடம் படித்துக் கொள் ளட்டும் பார்ப்பனர் அல்லாதார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...