Sunday, March 18, 2012



கடந்த சில வாரங்களாக  நடைபெற்று முடிந்த அய்ந்து மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் மார்ச் 6 அன்று  வெளியாகியுள்ளன.
உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி - ஆடம்பர, உயர்ஜாதி பார்ப்பனர் கூட்டமும், அதிகார ஆணவமும் நிறைந்த ஆட்சியாக நடந்து பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது! இது நம்மைப் பொறுத்தவரை எதிர்பார்த்ததுதான்.
சென்ற முறை 206 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த மாயாவதியின் கட்சி, இம்முறை வெறும் 79 இடங்களை மட்டுமே பிடித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளது! முலாயம் சிங் (யாதவ்) அவர்களின் சமாஜ்வாடி கட்சிக்கு அமோக ஆதரவினை உத்தரப்பிரதேச வாக்காளர்கள் தந்துள்ளனர். அது சமூகநீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, அவர் உயர்ஜாதியின் வாக்கு வங்கிக்காக ஏங்காமல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூக மக்களின்மீது நம்பிக்கை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை முலாயம் அவர்களும், அவரது மகன் அகிலேஷ் (யாதவ்) அவர்களும், நிதானப் போக்குடன் நடத்தி, மக்களின் அமோக ஆதரவு நம்பிக்கையைப் பெற்றுள்ளனர்!
யாருக்கும் மெஜாரிட்டி வராது; தொங்கு சட்டசபைதான் என்று அரசியல் ஆலாபனக்காரர்கள் பேசிப் பேசி இரண்டு நாளைக் கழித்தனர்!
ஆனால் மக்களோ, அதிகம் படிக்காதவர்கள் என்றாலும், பொது அறிவு, பட்டறிவுடன் தொங்கு சபை வராமல், தங்கு சட்டமன்றத்தை அல்லவா தந்துள்ளனர்!
கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகம் என்ற ஊடகப் பிரச்சாரம் ஓங்கியுள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு, ஆக்கப் பணிகள், வளர்ச்சிப் பணிகளிலும் சமூகநீதியில் அனைவருக்கும் அனைத்தும் என்று செயல்படவேண்டிய பொறுப்பும், கடமையும் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைக்கும் முலாயம் சிங்  அவர்களின் சமாஜ்வாடி கட்சிக்கு உண்டு.
மாயாவதி ஆட்சியில் நடந்தவைகளைப் பார்த்து, பாடம் கற்று, மக்களாட்சியாக, சமூகநீதி ஆட்சியாக இப்புதிய ஆட்சி அமையட்டும்!
மிகவும் திட்டமிட்டு வெற்றிக்கனி பறித்த தந்தைக்கும், தனயனுக்கும், அக்கட்சித் தொண்டர்களுக்கும் அதற்கும் மேலாக தெளிவாக வாக்களித்த வாக்காளர்களுக்கும் நமது வாழ்த்துகள், பாராட்டுகள். உ.பி.யில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளன!
காங்கிரஸ் முன்பு இருந்ததைவிட சில இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது என்பதும் உண்மை.
பா.ஜ.க. முன்பு பெற்றிருந்த இடங்களைவிட எண்ணிக்கையில் குறைந்த இடங்களை சில மாநிலங்களில் இழந்துள்ளது என்பதும், இராமன் கோவிலை மீண்டும் கட்டுவோம் என்று மத உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டும், அங்கே அது எடுபடாது இருந்ததையும் விட குறைவான அளவே வந்துள்ளது! அயோத்தியிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது.
கடுமையாக காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன் என்றும், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் அடிக்கட்டுமானம் சரியானபடி இல்லை என்றும் கூறியிருப்பது, அவரது அறிவுநாணயத்தைக் காட்டுகிறது. நோய்நாடி நோய் முதல் நாடும் முறைதான் சரியானது!
முதல் முறையாக - இத்தனை ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அயோத்தியிலேயே பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. முலாயமின் சமாஜ்வாடி அயோத்தியைக் கைப்பற்றி உள்ளது!
பொதுவாக பா.ஜ.க. பஞ்சாபிலும் (2007) முன்பிருந்ததைவிட குறைவான இடம், உத்ரகாண்டிலும் அதே நிலை. கோவா ஒன்றுதான் அதிக கூடுதலாக இடம்பெற்று ஆட்சி அமைக்கும் நிலை. மற்றபடி பொதுவாக அதற்கு மக்கள் ஆதரவு மங்கி வருகிறது என்பது உண்மை!
காங்கிரஸ் இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் அதிகம்.
1. மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்தி இனி மத்தியில் அரசியல் ஆட்சி இல்லை என்பது. 2. கூட்டாட்சி தத்துவத்தை மேலும் வலுப்படுத்து வதைத் தவிர, பலவீனப்படுத்தக் கூடாது! 3. எந்த முடிவானாலும் விரைந்து தலைமை எடுக்கவேண்டும். மாநில மொழி, மக்கள் உணர்வுகளைப் புறந்தள்ளக் கூடாது. 4. கூட்டணி அமைக்கும்போதுகூட, மற்ற கூட்டணி கட்சிகளை உரிய முறையில் கலந்து, கூட்டுப் பொறுப்பேற்று ஆட்சி செய்ய முன்வரவேண்டும்.
விழுவது முக்கியமல்ல, விரைந்து எழுவதே முக்கியம்!
2014 பொதுத் தேர்தலில் (நாடாளுமன்றத்திற்கு) மீண்டும் மதவாத பிற்போக்கு வராமல், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினரின் நம்பிக்கை - நல்லாதரவினைப் பெறவேண்டும்.
- கி.வீரமணி
ஆசிரியர்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...