Thursday, January 19, 2012

வெறிச்சோடினாய் திடலே!


திடலே, திடலே,
பெரியார் திடலே!
வெறிச்சோடிப்
போனாயே, போனாயே!
மூன்று நாள் எனும்
முற்றத்தில்
ஆன்ற தமிழ்க்கலை
அத்தனையும்
ஆடிப்பாடக் கண்டு
ஆழ்ந்து கிடந்தோமே!
தமிழ்ப் பண்பாட்டுத்
தாயின் மடியில்
தாலாட்டுப் பால்
குடித்து மகிழ்ந்தோமே!
கண்ணை மூடிக்
கண்ணைத் திறந்தபோது
காணாது போனதே
காட்சி மலரெல்லாம்!
எதையோ இழந்ததுபோல்
ஏங்கித் தவிக்கின்றோமே!
அடடே, பெரியார்
பிஞ்சு முதல்
அடலேறு அடங்க
அத்தனைப் பேரும்
குடும்பம் குடும்பமாகக்
குலைதள்ளிக் கிடந்தோமே!
கொத்திச் சென்றது யார்?
கூறாய் விடுதலையே!
என்ன ஆட்ட பாட்டம்
இருபால் மக்களும்
தமிழ் என்றால் இனிமை
தாண்டவத்தைப் பார்த்தோம்!
நுழைவு வாயிலே
நரைத்த கிராம வீடு
கொஞ்சு முகத்தோடு
குடமளவு பால் தேக்கி
பார்த்த பசுவும்
பால்மறவாக் கன்றும்
தாயுள்ளத்தோடு
தலையாட்டி
ம்மா என்று கூவி
அழைத்த வரவேற்பு
அடடே, ஆயிரம்
ஆயிரம் பொன்போலும்!
சர்க்கரைப் பொங்கல்
தொன்னையோடு
அக்கறையோடு அனைவரையும்
அன்பு முகம் காட்டி
அழைத்த உழவன்
உழத்தியர் இருவர்!
அய்யா சிலையங்கே
ஆரம் தரித்து!
அதன் தொடர்ச்சியைக்
கேளுங்கள், கேளுங்கள்!
தமிழ்ப் புத்தாண்டு
தை முதலென்று
தரணிக்குச் சொன்ன
தமிழறிஞர்களின்
படமும், குறிப்பும்
பாயிரம் பாடிற்று!
காலந்தோறும் தமிழ்
எழுத்து வடிவக்
கோலம் காட்டும்
குறிப்புச் சுவடி!
உறி அடி
போட்டி ஒரு பக்கம்
சைக்கிள் வீரரின்
சாகசம் மற்றோர் பகுதியில்!
எதைப் பார்ப்பது
எதை விடுவது என்று
தடுமாற்றம்
எம் மக்களிடத்தில்
விருது நகர்
வீச்சுப் பரோட்டா
நெய் மணக்கும்
நெல்லை அல்வா
மணப்பாறை
முறுக்கோடு
கோவில்பட்டி சேவு
மட்டுமா?
தலைப்பாக்கட்டி
பிரியாணி
திண்டுக்கல்லின்
திகட்டா மலைப்பழம்!
படிக்கும் போதே
ஊறுகிறதா எச்சில்?
நேரில் பார்த்த
எங்களுக்கு எப்படியிருக்கும்?
அந்த வெட்கக்கேட்டை
சொல்ல வேண்டுமா?
நிகழ்ச்சி முடிந்து
சாப்பிடலாம் என்று
நாக்கைத் தீட்டி வைத்தோம்
நாசமாய்ப் போக!
எல்லாம் தீர்ந்தது
என்று அறிவிப்பு!
மூன்று நாளும்
இதே கூத்து!
விழித்துக் கொண்ட
சிலரோ,
பார்சல் கட்டினார்
முன்னெச்சரிக்கையாய்!
பண்டைத் தமிழரின்
இசைக் கருவி அரங்கம்
மூலிகைச் செடிகளின்
முத்திரை வரிசை
கரகாட்டம்!
தப்பாட்டம்!
மயிலாட்டம்!
ஒயிலாட்டம்!
பறையாட்டம்!
நையாண்டி
மேளமென்று
மேளாவே
நடந்தது
கருங்குழி கணேஷ்
குழு பலே, பலே!
மேலும் உண்டு
சிலம்பாட்டம்
சடுகுடுவென்று
சேர்ந்து கொண்டது
நிகழ்ச்சிப் பட்டியலில்!
பொய்க்கால் குதிரை
போடுபோ டென்று!
இந்த அரிய கலைகள்முன்
ஆரியக் களை என் செயும்?
பொய்க்கால் குதிரை
ஆடும்
பார்ப்பானைக்
பார்த்ததுண்டா?
கரகாட்டத்தின்
கலைநுட்பத்தில்
கைதேர்ந்த எங்கள்
தமிழச்சிக்கு ஈடு யார்?
கலைவாணரின்
கற்கண்டு இசை
பன்னீர் செல்வத்தின்
பகுத்தறிவுப் பாடல்கள்
தஞ்சை செல்விக்
குழுவினர்தம்
நாட்டுப்புற இசையா
நடன நட்டுவனாரா?
பாடினார்கள் அவர்கள்
பார்வையாளரோ ஆடினார்கள்
ஆட்டம் நிற்கவில்லை
ஆடிக்கொண்டே இருந்தார்கள்
இப்பொழுது நினைத்தாலும்
இப்படியும் அப்படியுமாக
எங்கள் கால்கள்
ஆடிக்கொண்டுதானிருக்கின்றன
இந்தக் கலைகள்முன்
எந்தக் களைகள் எடுபடும்?
என்றாலும்,
என்ன சொல்லுகின்றன
இந்த இழிந்ததுகள்?
இவை கீழ்ஜாதி
கலைகளாம்!
கலையில்கூட
கீழ்ஜாதி, மேல் ஜாதியா?
கிழிந்துவிடும் கன்னம்
கிளர்ந்தெழுவர் தமிழர்!
எச்சரித்தார்
எங்கள் இனத் தலைவர்!
மூன்று நாள் முற்றத்திலும்
முத்தான நிகழ்வு
பெரியார் விருதுகள்
சாதனையாளர் விருதுகள்
இமயமாய் உயர்ந்த
எங்கள் தமிழர்க்கு!
தோளில் தூக்கி வைத்து
ஆடுவோம்!
தகுதி திறமை பேசும்
தறுதலைகளே
இதோ எங்கள்
இமய தமிழர்கள்
என்று செவுளில்
அறைந்த காட்சி அது!
பூரிப்புடன் புகழ்மாலை
சூட்டினார் தமிழர் தலைவர்
பெரியாரால் வாழ்கிறோம்!
பேச்சுப் போட்டி!
மூன்று பிரிவுகள்-
மூன்று முதல் பரிசுகள்
ஒவ்வொன்றுக்கும்
ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசு
இரண்டாம் பரிசு
அய்ம்பதாயிரம் ரூபாய்
பரிசு பெற்றவர்கள்
பேசினார்கள்
பேச்சா அது?
பேரிகை முழக்கம்!
கேட்டோர் வியந்தனர்
கைதட்டல் பேரிடி-
கட்டடத்தை அசைத்தது
கண்களில் ஆனந்தம்
கன்னித்தமிழ் உரையின் கர்ச்சனையால்!
பெரியார் மறையவில்லை
பெரியார் திடல்
மறையவிடாது
காப்பாற்றும்
மன்பதை உணர்ந்தது
தமிழ் ஆண்டைச்
சிதைத்து விட்டோம்
சித்திரைக்குத்
தலைப்பாகை
கட்டி விட்டோமென்று
ஆர்ப்பரிக்கும் ஆரியமே!
அது நடக்காது
அரிமாப் படை இதோ!
அரிமாப் பெரியாரின்
அடிச்சுவடுகள்
சிங்கமாய் எழும்
பண்பாட்டுப் படையெடுப்பை
எதிர்கொள்ளும்!
உறியடித்துச்
சொல்லுகிறோம்
முறியடிக்கும்
முற்றிலுமாய்
என்னும் எக்காளமே
இந்தத் திருவிழா!
இனப் பெருவிழா!

- கவிஞர் கலி.பூங்குன்றன் -










பொய்க்கால் குதிரை ஆட்டம்










தப்பாட்டத்தில் சாகசம்
செல்வி அய்யப்பன் குழுவினரின் இசை நிகழ்ச்சி


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...